இப்படியா பேசுவது.. ஹீலர் பாஸ்கர் மீது பாய்கிறது வழக்கு.. அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பும் ஹீலர்பாஸ்கர் என்பவருக்கு எதிராக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம்.. மருத்துவ துறையை நம்பத் தேவையில்லை, என்ற கருத்தை வெளியிட்டு அந்த வீடியோ மூலமாக தமிழகம் முழுக்க பிரபலமானவர் ஹீலர் பாஸ்கர். அனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மருத்துவ சிகிச்சை இன்றி குணமடைய முடியும் என்பது, இவர் தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய அம்சம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கி வரும் நிலையில், இதிலும் அவர் கருத்து தெரிவித்தார். ஆனால் அது சர்ச்சைக்குரிய கருத்தாக மாறிவிட்டது.
கொரோனா.. கோவை, பெங்களூரிலிருந்து சென்னை இயக்கப்படும் ரயில்கள் உட்பட 168 ரயில்கள் ரத்து
இலுமினாட்டிகள்
ஹீலர் பாஸ்கர் கூறுகையில், இது இலுமினாட்டிகள் செய்யக்கூடிய வேலை, சும்மா இருப்பவர்களை அதிகாரிகள் ஊசி போட்டுக் கொல்கிறார்கள், அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என்பது போன்ற கருத்துக்களுடன் அவர் வீடியோவை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக, சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.
விஜயபாஸ்கர்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளிக்கையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அந்த வகையில் ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் என்று உறுதியாக தெரிவித்தார்.
ஆடியோ
ஹீலர் பாஸ்கரின் கொரோனா வைரஸ் தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், சீனா, இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற மோசமான நிலை இந்தியாவிலும் ஏற்படும், இது மூன்றாம் உலகப் போர் போன்ற ஒரு செயல். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
சட்டப் பிரிவுகள்
இந்த ஆடியோகளையும் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் கூறுகையில், மாவட்ட கலெக்டர் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளோம். பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 54, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் இது குற்றச் செயல் என்று தெரிவித்தார்.