ஒன்னும் தப்பில்லை.. நம்ம சித்த மருத்துவம் இருக்கே.. பயன்படுத்தலாமே.. அரசுகளுக்கு அன்புமணி அவசர யோசனை
சித்த மருத்துவம் பயன்படுத்தலாமே என்று அன்புமணி யோசனை கூறியுள்ளார்
சென்னை: "இப்போதைக்கு நம்ம கிட்ட கொரோனாவுக்கு எந்த மருந்தும் இல்லை.. அப்படி இருக்கும்போது சித்த மருந்துகளை நாம் ஏன் பயன்படுத்த கூடாது.. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் சொல்லி வரும் நிலையில், அதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.. அத்தகைய மருந்துகளை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தி, அதன் தன்மைகளை வெளிப்படுத்த வேண்டும்... இதில் எந்த தப்பும் இல்லைன்னுதான் நவீன முறை டாக்டராக நான் கருதுகிறேன்" என்று அன்புமணி ராமதாஸ் ஒரு யோசனை கூறியுள்ளார்.
இதுவரை உலகம் காணாத ஒரு கொள்ளை நோயை எதிர்கொண்டு வருகிறோம்.. இன்னும் மருந்து கண்டுபிடிக்காத இந்த வைரஸ் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான பேரை அள்ளி கொண்டு போய் வருகிறது.
உலகநாடுகளே என்ன மருந்து தருவது, எதை கண்டுபிடிப்பது என்று திணறி கொண்டிருக்கும் வேளையில்தான் இந்தவைரஸ் இந்தியாவிற்குள்ளும் மெல்ல நுழைந்து மொத்தமாக ஆக்கிரமித்து கொண்டது.
மருத்துவர்கள்
அப்போதே நம் தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர்கள் இதை பற்றின எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தீர்வு சொல்லியபடியே இருந்தனர்.. இந்த வைரஸ் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை தாக்குகிறது என்பதுதான் அடிப்படையான விஷயம்.. இந்த நோய் எதிர்ப்புக்கு சரியான மருந்து நம் சித்த மருத்துவத்தில் தாராளமாக பரவி கிடக்கிறது.. அதனால் சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது, ஆனால் அரசுதான் எங்களை புறக்கணிக்கிறது என்று சித்த மருத்துவ டாக்டர்களே சிலர் மீடியாவில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.
சித்த மருத்துவம்
திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் கொரோனா நோய் தடுப்புக்கு அனைத்து வயதினரும் அச்சமின்றி கபசூர குடிநீரை பருகலாம் என்று கூறியிருந்தார்.. குறிப்பிட்ட வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபா்கள் ஒருவருக்கு, நிலவேம்பு, ஆடு தொடா இலை, கபசுர ஆகிய மூன்று சூரணங்களையும் (பொடி) தலா 5 கிராம் எடுத்து, சுமார் 300 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு பத்தில் ஒரு மடங்காக காய்ச்சி, தினசரி மூன்று வேளை 3 முதல் 7 நாள்கள் வரை குடித்துவந்தால் வைரஸ் காய்ச்சல்கள் மொத்தமாக காணாமல் போயிடும்" என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்..
வீடியோ
இதே போல இன்னொரு சித்த டாக்டரான தணிகாசலம், "வாதசுரக் குடிநீர் இந்த வைரஸுக்கு நல்லது" என்று சொல்லி அதன் செய்முறை எப்படி என்பதையும் விளக்கி வீடியோ மூலம் ஆதாரத்துடன் விளக்கி வருகிறார். சித்த மருத்துவர்களின் வேண்டுகோள்களையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று இவர்களுக்கு ஒரு சாரார் தொடர்ந்து ஆதரவும் தந்து வருகின்றனர். இதைதான் டாக்டர் அன்புமணி ராமதாசும் சொல்லி உள்ளார்.
பரிந்துரை
இவர் ஒரு அலோபதி டாக்டராக இருந்தாலும் சித்த மருத்துவத்துக்கு பரிந்துரை செய்ய காரணம், எந்த உயிரும் பறிபோய்விடக்கூடாது என்ற அடிப்படை எண்ணம்தான்.. இது சம்பந்தமாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் விரிவாகவே ஒரு பதிவு போட்டுள்ளார்.. அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் வேகமாக பரவி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான தடுப்பூசியோ, குணப்படுத்துவதற்கான மருந்தோ இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆராய்ச்சி
கொரோனா வைரஸ் நோயை தடுக்கவும், குணப்படுத்தவும் தேவையான மருந்துகளை கண்டுபிடிக்க அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இன்னும் சில நாடுகளில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அது பயனளிக்குமா? என்பதை அறிய, மனிதர்களுக்கு வழங்கி ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஓராண்டு வரை ஆகலாம். அதுவரை கொரோனா நோய் பாதிப்புகளை சமாளிப்பதற்காக நம்மிடம் எந்தெந்த மருத்துவ முறைகளில், என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ, அவை அனைத்தையும் பயன்படுத்துவதில் தவறில்லை.
தாக்குதல்
சீனாவில் கொரோனா தாக்குதல் உச்சத்தில் இருந்தபோது, அந்நாட்டின் பாரம்பரிய மருத்துவமுறைகள் (Traditional Chinese Medicine)மற்றும் நவீன மருத்துவ (Modern Medicine) முறைகளை இணைத்து பயன்படுத்தி தான் கொரோனா வைரஸ் நோய் குணப்படுத்தப்பட்டது. அதேபோல், இந்தியாவிலும் ஏராளமான பாரம்பரிய மருத்துவமுறைகள் உள்ளன. தமிழ் மருத்துவமுறையான சித்த மருத்துவமுறை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான நோய்களை குணப்படுத்திய மருத்துவ முறையாகும். அம்முறையைக் கொண்டு கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், அதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.
கபசுர குடிநீர்
இந்தியாவில் கடந்த காலங்களில் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள் தாக்கிய போது, அவற்றை குணப்படுத்துவதற்காக இல்லாவிட்டாலும், மனிதர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, நோயின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை முக்கியப் பங்காற்றியதாக சித்தமருத்துவர்கள் கூறுவதை நிராகரித்துவிட முடியாது.
ஆய்வுகள்
இந்தியாவில் சித்த மருத்துவம் குறித்து ஆய்வு செய்யும் நோக்குடன் தான் தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் என்னால் கொண்டு வரப்பட்டது. கொரோனா வைரஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்த சித்த மருந்துகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறும் போது, அத்தகைய மருந்துகளை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தி, அதன் தன்மைகளை வெளிப்படுத்த வேண்டும். இதில் தவறு எதுவும் இல்லை என்று தான் நவீன முறை மருத்துவராக நான் கருதுகிறேன்.
பரிசீலிக்க வேண்டும்
அதேநேரத்தில் சித்த மருத்துவம் என்றாலே போலியான மருத்துவம் என்ற தவறான எண்ணம் சில அதிகாரிகளுக்கு உள்ளது. இந்த கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும். இனியாவது விழித்துக் கொண்டு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அனைத்து உத்திகளையும் கையாள வேண்டும். குறிப்பாக நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.