கொரோனாவால் முடங்கிய உற்பத்தி.. மாபெரும் சரிவில் ஆட்டோமொபைல் துறை.. சென்னைக்கு காத்திருக்கும் சிக்கல்
சென்னை: கொரோனா நோய் தாக்குதல் காரணமாக ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க தொடங்கி உள்ளது. வரும் மாதங்களில் ஆட்டோமொபைல் துறையில் பலர் பணியை இழக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக உற்பத்தி துறைகள் பெரிய சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது.
ஐடி நிறுவனங்கள் கூட வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் ஆட்டோமொபைல் துறை போன்ற துறைகள் உற்பத்தியை மொத்தமாக நிறுத்தி பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது.
கடும் வீழ்ச்சி
இதனால் ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் கடும் வீழ்ச்சி ஏற்பட தொடங்கி உள்ளது. மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறையில் எந்த விதமான உற்பத்தியும் செய்யப்படவில்லை. முதலில் டாட்டா நிறுவனம்தான் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. அதன்பின் வரிசையாக மாருதி, கியா மோட்டார்ஸ், ஹோண்டா, ஹூண்டாய், டொயோட்டா என்று வரிசையாக உற்பத்தி நிறுத்தப்பட்டது.
மே வரை நீளும்
இந்த உற்பத்தி நிறுத்தம் மே 3ம் தேதி வரை நீளும். அதாவது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து 2 மாதங்கள் உற்பத்தி நிறுத்த உள்ளது. இதனால் மாபெரும் பொருளாதார இழப்பை அந்த நிறுவனங்கள் சந்திக்கும் என்று கூறுகிறார்கள். மார்ச் மாதம் மட்டும் இந்த நிறுவனங்கள் 7.5 லட்சம் யூனிட் இழப்புகளை சந்தித்துள்ளது. இதன் மதிப்பு மொத்தம் 2 பில்லியன் டாலர் என்று சொல்லப்படுகிறது. இன்னும் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் இழப்பை முழுமையாக வெளியே சொல்லவில்லை.
ஏப்ரல் மோசம்
ஏப்ரல் மாதம் இது இன்னும் மோசமாக இருக்கும். 9 லட்சம் யூனிட் இழப்புகளை இந்த மாதம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்திக்கும் என்று கூறுகிறார்கள். அதேபோல் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சீனாவில் இருந்துதான் உதிரி பாகங்கள் வருகிறது. சீனாவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹூபேய் நகரத்தில்தான் பெரிய அளவில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஏற்றுமதி வரும் நாட்களுக்கு பெரிய அளவில் தாமதம் ஆகும்.
பெரிய அளவில் தாமதம்
இங்கு உற்பத்தி தொடங்கப்பட்டு இருந்தாலும் கூட இந்தியாவிற்கு உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்ய தாமதம் ஆகும். இந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரி பாக தேவையில் 27%ஐ சீனாதான் பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் போக கடந்த மார்ச் மாதம் முழுக்க முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் விற்பனையில் சராசரியாக 45%ஐ இழந்துள்ளது. ஏப்ரல் மாதம் முழு ஊரடங்கு காரணமாக 90%க்கும் அதிகமான விற்பனை மொத்தமாக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நிலை
இதனால் அதிகம் பாதிக்கப்பட போவது சென்னைதான். ஏனென்றால் கடந்த வருடமே ஆட்டோமொபைல் துறை பெரிய அளவில் சரிவுகளை சந்தித்தது. ஆட்டோமொபைல் துறையில் கடந்த வருடம் இறுதியில் மொத்தம் 3,50,000 பேர் வேலையைவிட்டு நீக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகமாக டீலர்களிடம் பணிபுரியும் நபர்கள்தான் வேலையை இழந்து உள்ளனர் . 2,40.000 பேர் வரை டீலர் லெவல் நிறுவனங்களில் வேலையை இழந்து உள்ளனர்.
கொரோனாவால் அதிகரிக்கும்
தற்போது கொரோனா காரணமாக உற்பத்தி மொத்தமாக பாதிக்கப்பட்டு சரிவுகள் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எல்லாம் மிக மோசமாக நேரடியாக பாதிக்கும் என்று கூறுகிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் தங்கள் வேலையை இழக்க வாய்ப்புள்ளது எனப்படுகிறது. முக்கிய நிறுவனங்களில் பெரிய நிர்வாக பொறுப்பில் இருக்கும் சிலரும் வேலையை இழக்க வாய்ப்புள்ளது.
சென்னைக்கு ஆபத்து
சென்னையில்தான் அதிக அளவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருப்பதால் சென்னைதான் இதனால் நேரடியாக பாதிக்கப்படும். சென்னையில் பணிபுரியும் பலர் வேலையை விட்டு நீக்கப்படலாம் அல்லது இவர்களின் சம்பளம் பெரிய அளவில் குறைக்கப்படலாம். கொரோனா சரியான பின் மத்திய கிழக்கு நாடுகள் கச்சா எண்ணெய் விலையை திடீர் என்று அதிகரிக்கும். தங்கள் சரிவை ஈடுகட்ட அவர்கள் விலையை கூட்டுவார்கள்.
நிலைமை மோசமாகும்
அப்போது இன்னும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும். அது போன்ற சமயங்களில் மேலும் ஆட்டோமொபைல் துறை சரிவை சந்திக்கும். கொரோனா மட்டுமின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு சரிவும், ஜிஎஸ்டி மூலம் அதிகப்படியான வரி விதிப்பும் கூட ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு காரணம் ஆகும். இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து ஆட்டோமொபைல் துறை மீண்டு வரவும் , மக்களிடம் மீண்டும் நம்பிக்கை வரவும் இன்னும் சில மாதங்கள் ஆகும்.