வெளியான ஷாக் தகவல்.. "தமிழகத்தில் கொரோனா வைரஸ் வீரியம் அதிகரித்துவிட்டது.." விஜயபாஸ்கர் பேட்டி
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தன்மை மாறி, அதன் வீரியம் அதிகரித்துள்ளது போன்ற அறிகுறிகள் தெரிகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், இது ஆபத்தை விளைவிக்கும் என்றும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் விஜயபாஸ்கர் இதை மறுத்திருந்தார்.
புதிய வகை வைரஸ், அதிகம் ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கான எந்த ஆய்வு முடிவுகளும் இதுவரை வெளியாகவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
பிற மாவட்டங்களுக்கு செல்ல இ பாஸ் ரத்து.. தனிமைப்படுத்தப்படும் தலைநகரம்.. முழு ஊரடங்கை நோக்கி சென்னை?
கொரோனா வீரியம் அதிகரிப்பு
இந்த நிலையில், கோவையில் இன்று, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டார் விஜயபாஸ்கர். இதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் வீரியம் என்பது அதிகரித்துள்ளதாக தெரிகிறது. நோய் அறிகுறிகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வைத்து இவ்வாறு சந்தேகிக்கிறோம்.
ஆக்சிஜன் தேவை
அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதியானவர்களிடமிருந்து கூட நோய்த்தொற்று தற்போது பரவுகிறது. அறிகுறிக்கு பிறகு, கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தற்போது காய்ச்சல், உடல் வலி அதிகமாக உள்ளது. அறிகுறியுடன் நோய் தாக்கியவர்களுக்கு ஆக்சிஜனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. எனவே ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.
நல்ல சிகிச்சை
கொரோனா வைரஸ் வீரியத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறோம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் குழந்தைகள் யாரும் பலியாகவில்லை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளோம்.
முதல்வர் முடிவு
இந்தியாவில் சமூக பரவல் என்ற நிலை ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் கடுமையான முழு ஊரடங்கு அமல் படுத்துவது என்ற கேள்விக்கு, நான் பதில் அளிக்க முடியாது. மருத்துவக் குழு அளிக்கக்கூடிய பரிந்துரையின் அடிப்படையில் முதல்வர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு அவசியம்
கொரோனா வைரஸ் வீரியம் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது, தமிழகத்தில், அதிலும், குறிப்பாக சென்னையில் முழு ஊரடங்கு அமல்ப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்பது புரிகிறது. மக்கள் மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நோய் பரவாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், என்பதும் இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது.