கொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு!
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மத்திய அரசால் மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மத்திய அரசால் மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் தமிழகம், கேரளா பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
இந்தியாவில் 3730 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா மிக மோசமாக பாதித்த மாநிலங்கள் ஆகும். மகாராட்டிராவில் 635, தமிழகத்தில் 485, கேரளாவில் 306, டெல்லியில் 445, தெலுங்கானாவில் 272, ஆந்திராவில் 224 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 234, ராஜஸ்தானில் 210, மத்திய பிரதேசத்தில் 179 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எப்போதும் போல கொரோனா நிதியில் தென்னிந்திய மாநிலங்கள் இந்த முறை புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி
கொரோனா எப்படி
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மத்திய அரசால் மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை நிதியம் (எஸ்.டி.ஆர்.எம்.எஃப்) கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக ரூ .11,092 கோடியை விடுவித்து இருக்கிறது. ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் மாநிலங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதை கருத்தில் கொண்டு பணம் ஒதுக்கப்படவில்லை. மாறாக மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு பணம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
உதாரணம்
உதாரணமாக இந்தியாவில் 10 மாநிலங்களில் வெள்ளம் வருகிறது. சிறிய மாநிலத்தில் மோசமான அளவில் 10 அணைகள் உடைகிறது. சேதம் ஏற்படுகிறது. ஆனால் பெரிய மாநிலம் ஒன்றில் ஒரே ஒரு அணை உடைகிறது, சேதமும் பெரிதாக இல்லை. ஆனால் நிதி ஒதுக்கும் போது பெரிய மாநிலம் என்பதற்காக சேதம் இல்லாத மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கி, சேதம் அதிகம் உள்ள சிறிய மாநிலத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு செயலைத்தான் மத்திய அரசு செய்துள்ளது.
தமிழகம் ஏமாற்றம்
நேற்று ஒதுக்கப்பட்ட கொரோனா நிதியில் வெறும் 510 கோடி ரூபாய்தான் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது . கொரோனா நிதியாக தமிழக அரசு முதல் கட்டமாக 3500 கோடி ரூபாயும், அடுத்த கட்டமாக 4500 கோடி ரூபாயும் கேட்டது. ஆனால் தமிழகத்திற்கு வெறும் 510 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா நிலை
இந்தியாவில் மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு ரூ.1,611 கோடி நிதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மகாராஷ்டிராவிற்கு இணையாக பாதிப்பு அடைந்துள்ள கேரளாவுக்கு ரூ.157 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளா கடந்த மூன்று வருடங்களாக வெள்ளம், நிப்பா உள்ளிட்ட பேரிடர்களை சந்தித்த மாநிலம். கேரளாவிற்கு அப்போதே பெரிய அளவில் நிதி உதவி வழங்கப்படவில்லை.
கேரளாவில் வெள்ளம் வந்த போது
கேரளாவில் வெள்ளம் வந்த போது வெளிநாட்டு நிதியை பெற மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது கொரோனா காரணமாக மத்திய அரசு வெளிநாட்டு நிதியை பெற முடிவு செய்துள்ளது. அதேபோல் கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் மற்றும் நிறைய உயிர் சேதங்களை சந்தித்துள்ள தெலுங்கானாவிற்கு ரூ.224 கோடிதான் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தென்னிந்தியா நிலை
தென்னிந்தியாவில் உள்ள வேறு சில மாநிலங்களான ஆந்திராவுக்கு ரூ.505 கோடியும், கர்நாடகத்துக்கு ரூ.395 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டில் தென் மாநிலங்கள், பாஜக ஆளாத மாநிலங்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மேற்கு வங்கத்துக்கு ரூ.505.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக கூட்டணி ஆளும் பீகாருக்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் எப்படி
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.966 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ. 910 கோடி செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் எல்லாம் தமிழகம் கேரளா அளவிற்கு கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா மிக மோசமான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த குறைந்தபட்ச நிதி எப்படி மாநில அரசுக்கு போதுமானதாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.