5 மைக்ரோ பிளான்.. ராதாகிருஷ்ணன் களமிறக்கும் "கொரோனா திட்டம்".. சென்னையில் அமலுக்கு வந்த புது யுக்தி!
சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை புதிய யுக்தியை கொண்டு வந்து இருக்கிறது.
நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது. நேற்று தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா காரணமாக 314 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு- 311 பேர் மரணம்
சென்னை நிலை என்ன
சென்னையில் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்தாலும் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவரின் நியமனத்தை தொடர்ந்து சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய 5 மைக்ரோ பிளான்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
வார்டு என்ன
சென்னையில் இருக்கும் அனைத்து வார்டுகளையும் ஒருங்கிணைத்து புதிய மைக்ரோ பிளான் ஒன்றை கொண்டு வர இருக்கிறார்கள். அதன்படி சென்னையில் இருக்கும் 200 வார்டுக்கு 200 மருத்துவர்களை நியமனம் செய்துள்ளனர். முதற்கட்டமாக இவர்கள் சென்னையில் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொள்வார்கள். அறிகுறி உள்ள நபர்களை கொரோனா சோதனைக்கு கூட்டி செல்லும் பணிகளை செய்வார்கள்.
இரண்டாவது கட்டம் என்ன
அதேபோல் இரண்டாவது கட்டமாக ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு இவர்கள் செல்வார்கள். இதற்கான பட்டியல் இவர்களிடம் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த பட்டியலை வைத்து நேரடியாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு செல்வார்கள். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் இருக்கிறார்களா, சரியாக விதியை கடைபிடிக்கிறார்களா என்று சோதனை செய்வார்கள்.
சென்னை முழுக்க குழு
இன்னொரு பக்கம் சென்னை முழுக்க இன்னொரு மருத்துவ குழு வார்டு வாரியாக மருத்துவ முகாம்களை நடத்த உள்ளது. இதற்காக அவர்களுக்கு வார்டு வாரியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கே காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி குறித்து சோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா சோதனைகளை செய்வார்கள்.
அதிக வயதானவர்கள்
மேலும் சென்னையில் வயதானவர்கள், கோமரபர்ட்டி எனப்படும் பல்வேறு நோய் கூறு உள்ளவர்கள் வீடுகளில் தீவிரமாக சோதனை செய்யவும் இந்த மருத்துவக்குழு அமைக்கப்பட்டு உள்ளது . மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த மருத்துவ குழு வீடு வீடாக செல்லும். அங்கு அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா, கொரோனா பரவல் தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் உறுதி செய்வார்கள்.
சென்னை கொரோனா தொற்று
அதேபோல் சென்னையில் புதிதாக கொரோனா நோய் தோற்று ஏற்படும் நபர்களுடன் யார் எல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய புதிய காண்டாக்ட் டிரேசிங் முறையை கொண்டு வர இருக்கிறார்கள். இதற்காக பெரிய அளவில் டீம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதனால் வரும் நாட்களில் மிக தீவிரமாக காண்டாக்ட் டிரேசிங் செய்யப்படலாம் என்கிறார்கள்.