"முதல்வர் கவனிக்கவும்" டேக் செய்து ட்வீட் போட்ட முக ஸ்டாலின்.. "கவனித்து" பதிலடி தந்த எடப்பாடியார்!
திமுக தலைவருக்கு முதல்வர் அறிக்கை வெளியிட்டு பதிலளித்துள்ளார்
சென்னை: "அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனிக்கவும்" என்று டேக் செய்து மு.க.ஸ்டாலின் ஒரு ட்வீட் போடவும், அதை உடனடியாக கவனித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. "கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளேன்" என்று திமுக தலைவரின் புகாருக்கு பதிலளித்துள்ளார் முதல்வர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மருத்துவ கருவிகள் வாங்க திமுக எம்எல்ஏக்கள் நிதியுதவி தந்து வருகின்றனர். அந்த அடிப்படையில், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 1.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
அதில், அதிகபட்சமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார். அதாவது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 50 வெண்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில் அதில் 10 வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக 60 லட்சத்தை ஒதுக்குவதாக மார்ச் 27ஆம் தேதி கரூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மறுப்பு
முதலில் இந்த நிதியை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், பிறகு மறுத்துவிட்டது. இதற்கான மெயில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செந்தில்பாலாஜிக்கு சென்றுள்ளது.. அதில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.. திமுக வட்டாரத்தில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிகிச்சை
நிதி மறுக்கப்பட்டதை அடுத்து செந்தில்பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் எழுதினார். அதில், "அரவக்குறிச்சி தொகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு வெண்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ளது. ஆகவே, அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று நலமடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் எனது நிதியை பயன்படுத்தும் கடிதத்துக்கு அனுமதி வழங்கி, வெண்டிலேட்டரை கொள்முதல் செய்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
செந்தில் பாலாஜி
எம்எல்ஏ செந்தில்பாலாஜியின் நிதி ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டதற்கு, முக ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனிக்கவும்" என்று தெரிவித்திருந்தார்.
முக ஸ்டாலின்
ஸ்டாலின் இவ்வாறு முதல்வரை டேக் செய்து ட்வீட் போடவும், உடனடியாக பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும், இப்பிரச்சினையில் முதல்வர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார்.
ட்வீட்
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், எதிர்கட்சித் தலைவர் ட்விட்டரில் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார்.ஏற்கெனவே கரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 லட்சம் அந்தந்தத் தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
உத்தரவு
மேலும், கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயினை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.