மீண்டும் சடலத்தை எடுத்து மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல.. சைமன் மனைவி கோரிக்கை நிராகரிப்பு
டாக்டர் சைமனின் மனைவி வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது
சென்னை: கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்ற டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது... மீண்டும் சடலத்தை வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்றும் இதுகுறித்து விளக்கம் மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு டாக்டர் சைமன் உயிரிழந்தார்.. ஆனால் அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய முயன்றபோது, கொரோனாவைரஸ் தங்களுக்கும், தங்கள் பகுதிக்கும் வேகமாக பரவி விடும் என்பதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வன்முறை வெடித்தது.. சடலம் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸையும் அடித்து நொறுக்கினர்.. ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட பலரும் காயமடைந்தனர்.. இதையடுத்து வேலப்பன்சாவடியில் சவப்பெட்டியில் டாக்டரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
அதிர்ச்சி
இந்த சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் தொடர்ந்து வருகிறது.. கோர்ட் ஒரு பக்கம், காவல்துறை ஒரு பக்கம், மத்திய, மாநில அரசுகள் என ஒவ்வொரு தரப்பிலும் இறந்த டாக்டர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, நல்லடக்கம் குறித்த அறிவிப்புகள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன.
வேண்டுகோள்
இந்த சமயத்தில்தான் 2 நாளைக்கு முன்பு டாக்டரின் மனைவி முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.. அதில், "என் கணவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் பண்ண ஃபாதர் பெர்மிஷன் தந்தார்.. ஒருசில சம்பவத்தின் காரணமாக வேலப்பன்சாவடியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டார். புதைக்கப்படும்போதுகூட எங்க கண்ணால் அதை பார்க்கிறதுக்கு முடியல.
அடக்கம்
என் கணவரை வெண்டிலேட்டரில் போடுவதற்கு முன்னாடி என்கூடயும், பிள்ளைங்களோடயும் வீடியோகாலில் பேசினாரு.. ஒருவேளை நான் திரும்பி வரலேன்னா என்னை நம்மை முறைப்படி அடக்கம் பண்ணிடுங்கன்னு சொன்னாரு.. என் கணவரை ஷீல்டு செய்த சவப்பெட்டியில்தான் புதைக்கப்பட்டிருக்கு.அதை அப்படியே எடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைகளில் அடக்கம் பண்ணினால் எந்த தொற்றுமே பரவாது.. மாண்புமிகு முதலமைச்சரிடம் பணிவோடு நான் கேட்கிறேன் ஐயா. என் கணவருடைய கடைசி ஆசையை நிறைவேத்துங்க" என்று உருக்கமாக கூறியிருந்தார்.
தொற்று
இதையடுத்து முதல்வர் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு பெரிதும் நிலவியது.. இந்நிலையில் சைமன் உடலை மீண்டும் மறு அடக்கம் செய்ய சாத்தியக் கூறுகள் இல்லை என சென்னை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று ஆணையர் பிரகாஷ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
கராத்தே தியாகராஜன்
முன்னதாக, சைமன் மனைவி இந்த கோரிக்கையை வைத்தபோது, புதைக்கப்பட்ட ஒரு உடலை மீண்டும் தோண்டி எடுப்பதில் மாநகராட்சியின் சட்ட விதிகளில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்று சென்னை மாநகராட்சியின் முன்னாள் பொறுப்பு மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் ஒரு வார இதழுக்கு பேட்டி தந்திருந்தார்.
சட்ட சிக்கல்
அதில், "புதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு உடலை தோண்டி எடுக்க மாநகராட்சி விதிகளில் இடம் இருக்கிறது. அதாவது, சென்னை மாநகராட்சி விதி எண் 325(சி) பிரிவின் படி, மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சைமனின் உடலை தோண்டி எடுக்கலாம்... அதனால் சைமனின் உடலை தோண்டி எடுப்பதில் எந்த சட்டச் சிக்கலும் கிடையாது" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு சைமன் மனைவி கோரிக்கையை நிராகரித்துள்ளது.. சட்டரீதியாக இல்லாமல், சுகாதார ரீதியில் இந்த பிரச்சனையை அணுகி இந்த முடிவினை அறிவித்துள்ளதாக தெரிகிறது!!!