அடுத்தடுத்து கொரோனாவால் 20 பேர் பலி, மூடிமறைத்த பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை? சுகாதார துறை நோட்டீஸ்
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 20 பேருக்கு மேல் பலியாகி உள்ளதாகவும் அது தொடர்பான கணக்கு அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், விளக்கம் கேட்டு தமிழக பொது சுகாதார இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெற்கு ரயில்வேக்கு உரித்தான மருத்துவமனை பெரம்பூரில் இயங்கிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புகளுடன் அல்லது அந்த அறிகுறிகளுடன் அங்கு சென்று சிகிச்சை பெறுவோர் பலர் உள்ளனர்.
இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை ஒரு ஊடகம் பரிசோதித்துப் பார்த்தபோது, அதில் உள்ள தகவல்கள் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்று தெரிய வந்தது.
அறிகுறி இல்லை.. கொரோனாவால் திடீர் மூச்சு திணறல்.. டாக்டர்கள் வரும் முன்பே பலியான மும்பை துணை கமிஷனர்
அடுத்தடுத்த நாட்கள்
அதாவது சுமார் 20 பேருக்கு மேல் கொரோனா பாதிப்புகளால் பலியான போதிலும் அது பற்றிய தகவல் சுகாதாரத்துறைக்கு அப்டேட் செய்யப்படவில்லை என்று அந்த செய்தி கூறுகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களில்தான் இந்த இறப்பு விகிதம் அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் ரயில்வே மருத்துவ மனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுகாதாரத்துறை உறுதி
பொது சுகாதார இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சென்னையில் இதுபோல மேலும் எத்தனை மருத்துவமனைகள் மூடிமறைத்து உள்ளனவோ அதையும் சுகாதாரத்துறை கண்டுபிடிப்பது காலத்தின் கட்டாயம்.
நோய் பரவல் தெரிய வேண்டும்
அப்போதுதான் எந்த அளவுக்கு இந்த நோய் பாதிப்பு பரவி உள்ளது, எந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது பற்றியெல்லாம் முடிவு செய்ய முடியும். சென்னையை பொறுத்தளவில் ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட வட சென்னை மண்டலங்களில் பாதிப்பு அதிகம்.
வட சென்னை
பெரம்பூரும் வட சென்னை பகுதியில்தான் உள்ளது. எனவே, வட சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கு கடிவாளம் அவசியம். சுகாதாரத்துறை உடனடியாக தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பதிவுகளை கட்டாயப்படுத்த வேண்டும் என்பதை இந்த செய்தி நினைவுபடுத்துகிறது.