2.56 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை.. இந்திய கிராமங்களுக்கு படையெடுக்கும் கொரோனா.. அதிர்ச்சி பின்னணி
சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் கேஸ்கள் கொஞ்சம் குறைந்தாலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 256,617 பலியாகி உள்ளனர். தற்போது நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா கேஸ்கள் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.
இந்தியாவில் இதுவரை 23,557,676 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆக்டிவ் நோயாளிகளாக 3,726,653 பேர் உள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக நகரங்களில் பரவி வந்த இரண்டாம் அலை, தற்போது கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக வடஇந்திய கிராமங்கள் பல கொரோனா காரணமாக தீவிரமாக பாதிக்க தொடங்கி உள்ளது.
கிராமங்கள்
நகரங்களில் இருந்து லாக்டவுன் காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால் உள்ளூர்களிலும் கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. உள் மாவட்டங்களில் போதிய மருத்துவ வசதிகள், பெட்கள் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4205 பேர் பலியாகி உள்ளனர்.
மரணம்
ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட பல மடங்களுக்கு அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. முக்கியமாக கிராமங்களில் பதிவாகும் பல மரணங்கள், பல கொரோனா கேஸ்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. உலக அளவில் தற்போது 30% கொரோனா மரணங்கள் இந்தியாவில் இருந்தே நிகழ்கிறது.
மோசம்
முக்கியமாக இந்தியாவில் பரவும் B.1.617 வகை கொரோனா மிக மோசமான ஒன்றாக இருக்கிறது. இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வகை கொரோனாவை கவலையளிக்கும் வகை என்று உலக சுகாதார மையமே எச்சரித்துள்ளது. இதுவும் கூட ஒரு வகையில் இந்தியாவில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
கிராமங்கள்
கிராமங்களில் உயரும் பலி எண்ணிக்கை மற்றும் கொரோனா கேஸ்களால்தான் உத்தர பிரதேசம், பீகாரில் கங்கையில் பிணங்கள் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் கூட உடல்களை புதைக்க, எரிக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 4 லட்சம் கேஸ்கள் பதிவாகி வந்த நிலையில் தற்போது கொஞ்சம் குறைந்து உள்ளது.
ஆனால்
ஆனால் இது உண்மையான சரிவு என்று கூற முடியாது. உள்மாவட்டங்களில் இந்தியா முழுக்க இப்போதுதான் கொரோனா உயர தொடங்கி உள்ளது. இது போக போக மேலும் அதிகரிக்கும். இதனால் உண்மையான கொரோனா இரண்டாம் அலை உச்சம் இனிதான் ஏற்படுமோ என்ற அச்சம் வந்துள்ளது. இந்தியாவில் இதுவரை வெறும் 2.5% மக்கள் மட்டுமே வேக்சின் எடுத்துள்ளனர்.
டெல்லி
டெல்லியில் எல்லாம் வேக்சினே இல்லை என்று அரசு கடையை சாத்திவிட்டது. இப்படி இருக்க இனிதான் கேஸ்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹாராஷ்டிராவில் பதிவான கேஸ்களில் கடந்த ஒரு வாரமாக 50% கேஸ்கள் கிராமங்கள் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் இருந்து வந்தது. உத்தர பிரதேசம், பீகாரிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
தமிழகம்
தமிழகத்திலும் கூட கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்களின் சதவிகிதம் 43.4% உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்மாவட்டங்களில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக குமரி, மதுரை, திருவள்ளூரில் தினசரி கேஸ்கள் 1000ஐ தாண்டி உள்ளதால் ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் நகரங்கள் கொரோனா பிடியில் சிக்கியது போக தற்போது கிராமங்கள் கொரோனாவின் கோர பிடியில் சிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது!