எபிசென்டராக மாறும்.. டெல்டாவில் தீவிரம் அடையும் கொரோனா.. மூடப்பட்ட கிராமங்கள்.. நிலை என்ன?
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 99 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 99 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்களை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக நல்ல மருத்துவ வசதி கொண்ட பகுதியாக டெல்டா விளங்கி வருகிறது. தஞ்சாவூர், திருவாரூரில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் பெரிய அளவில் டெல்டாவின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
அதேபோல் ஆரம்ப சுகாதார மையத்தின் கட்டமைப்பில் டெல்டா மிக சிறப்பாக விளங்கி வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
1000ஐ தொட்ட மகாராஷ்டிரா.. நம்பிக்கை தரும் கேரளா.. இந்தியாவில் 4789 பேருக்கு கொரோனா.. 124 பேர் பலி!
நிலைமை எப்படி உள்ளது
கொரோனா காரணமாக தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா காரணமாக 50 பேர் 60 பேர் என்று தினமும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 664 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 17 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்டா என்ன நிலை
கொரோனா காரணமாக கொங்கு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மிகவும் முன்னேறிய மாநகராட்சியான திருச்சியில் 31 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருச்சி சிட்டிக்குள் மட்டும் மொத்தம் 21 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதன்பின் டெல்டாவின் மையம் என்று கருதப்படும் திருவாவூரில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா உள்ளது. மன்னார்குடியில் சிலருக்கு கொரோனா அறிகுறி உள்ளது.
தஞ்சாவூர் நிலை
அதேபோல் தஞ்சாவூரில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா உள்ளது. இவர்கள் எல்லோரும் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெல்டாவில் மிகப்பெரிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் 11 பேருக்கு கொரோனா உள்ளது. மயிலாடுதுறையையும் சேர்த்த எண்ணிக்கை ஆகும் இது. மயிலாடுதுறை தற்போதுதான் புதிய மாவட்டமாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்டை மாவட்டங்கள்
இது போக டெல்டாவை ஒட்டி இருக்கும் முக்கியமான காவிரி கரையோர அண்டை மாவட்டங்களிலும் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. கரூரில் 22 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூரில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இவர்கள் எல்லோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
டெல்லி சோர்ஸ்
மொத்தமாக எல்லா மாவட்டங்களையும் சேர்த்து டெல்டாவில் 99 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.,மொத்தமாக சென்னையில் 162 பேருக்கு கொரோனா உள்ளது. டெல்டாவில் பெரும்பாலான நபர்கள் டெல்லியில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்டு டெல்டா வந்தவர்கள். டெல்லியில் இருந்து வந்த இவர்களின் உறவினர்கள் எல்லோரும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் உறவினர்கள் 180 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
டெல்டாவில் 42000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா தொடர்பாக சில தவறான வதந்திகள் டெல்டா குறித்து பரவி வருகிறது. முக்கியமாக மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் கொரோனா தீவிரம் அடைவதாக பொய்யான வதந்திகள் பரவி வருகிறது.
அரசு மருத்துவமனை
ஆனால் டெல்டாவில் கடந்த 4 நாட்களில் கொரோனாவின் வேகம் இரட்டிப்பு ஆகியுள்ளது. டெல்டாவில் இதே நிலை நீடித்தால் விரைவில் டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் எபிசென்டராக மாறும். கடந்த நாட்களில் அங்கு கொரோனா வேகமாக பரவி உள்ளது. இதனால் அங்கு பல சிறிய சிறிய கிராமங்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. மொத்தமாக சில ஊர்கள் மூடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.