இந்த பிரச்சனையை வளர்க்க விரும்பல.. கரூருக்கு வென்டிலேட்டர் வேணும்.. முதல்வருக்கு முக ஸ்டாலின் ட்வீட்
முதல்வருக்கு முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: "இந்த பிரச்சனையை மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை... எந்த நிதியில் இருந்து இதை செய்வது என்பது இப்போது முக்கியம் இல்லை... கரூருக்கு வென்டிலேட்டர் வசதிகள் உடனே வேண்டும்.. வென்டிலேட்டர் வசதி செய்து தர உடனடியாக முதலமைச்சர் முன்வந்து அறிவிக்க வேண்டும்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வரை டேக் செய்து திரும்பவும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 1.03 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதில், அதிகபட்சமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார். அதாவது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 50 வென்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில் அதில் 10 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்காக 60 லட்சத்தை ஒதுக்குவதாக மார்ச் 27ஆம் தேதி கரூர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
முதலில் இந்த நிதியை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், பிறகு மறுத்துவிட்டது. அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியும் என்று பதிலளிக்கப்பட்டது.. இது திமுக வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முக ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார். "அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனிக்கவும்" என்று கூறி அவருக்கு ட்வீட்டை டேக் செய்திருந்தார்.
அடுத்த சில மணி நேரத்திலேயே முதல்வர் இதற்கு பதிலளித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும், இதை அறியாமல் எதிர்க்கட்சி தலைவர் ட்விட்டரில் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார்" என்றார்
இந்நிலையில், இதற்கு திரும்பவும் முக ஸ்டாலின் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். "சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியானது அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்டுத்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது நன்கு அறிந்த தகவலே.. ஆனால் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மக்கள் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், அங்கு போதுமான அளவு வென்டிலேட்டர் வசதி இல்லை என்பதாலும் திமுக உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தனது மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்தார்.
இந்நிதியை 28.3..2020 அன்றே மாவட்ட ஆட்சி தலைவர் தனது செயல்முறை ஆணை மூலம் ஏற்றுக் கொண்டுவிட்டு பின்னர் 31.3.2020 அன்று மறுத்து ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டுவிட்டு, பிறகு மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த பிரச்சனையை மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை.
கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான வென்டிலேட்டர் வசதி செய்து தர உடனடியாக முதலமைச்சர் முன்வந்து அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எந்த நிதியில் இருந்து இதை செய்வது என்பது இப்போது முக்கியம் இல்லை. கரூருக்கு வென்டிலேட்டர் வசதிகள் உடனே வேண்டும் என்பதே முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்திலும்,"28ல் ஏற்று, 31 அன்று ஆட்சியர் மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருப்பது எளிதில் புரியும்! பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை. எந்த நிதியிலிருந்து என்பதைவிட கரூருக்கு வென்டிலேட்டர் வேண்டும் என்பதே முக்கியம். தமிழக முதல்வர் உறுதி செய்க" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.