கொரோனா: சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக திமுக , காங். அறிவிப்பு
சென்னை: கொரோனா தொற்று நோய் தாக்கத்தால் சட்டசபையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததால் தமிழக சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இதேபோல் காங்கிரஸும் சட்டசபையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா படுதீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்குதலுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் தமிழக அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.
மேலும் தமிழக சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருப்பினும் சட்டசபை கூட்டத்தை வரும் 31-ந் தேதி வரை நடத்துவது என்பதில் தமிழக அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டசபைக்கு செல்ல வேண்டாம் என்று அக்கட்சியின் கொறடா சக்கரபாணி இன்று அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனிடையே சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அர. சக்கரபாணி, சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதை அரசு ஏற்கவில்லை. ஆகையால் சபாநாயகரை சந்தித்து சட்டசபை கூட்டத் தொடரை திமுக புறக்கணிக்கிறது என கடிதம் தந்துவிட்டு வந்துள்ளோம் என்றார். இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.