"அரசை செயல்பட வைப்போம்".. ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தை.. அதிமுக எடுத்த முடிவு.. 24 மணி நேர திருப்பம்!
சென்னை: தமிழக அரசியலில் கடந்த 24 மணி நேரத்தில் முக்கியமான சில அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது. அதிமுகவின் அறிவிப்பு ஒன்றும் அதை தொடர்ந்த திமுகவின் இணைய போராட்டமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின் திமுகவின் நெட்டிசன்கள் படை தற்போது விழித்துக் கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். திமுக என்னதான் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் திமுகவின் ஐடி விங் பெரிய அளவில் தங்கள் பணிகளை செய்யவில்லை என்று திமுகவிற்குள் ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது.
திமுக ஆதரவு நெட்டிசன்களே இதை வெளிப்படையாக பலமுறை டிவிட்டர் உட்பட தளங்களில் குறையாக சொல்லி இருக்கிறார்கள். அந்த அளவிற்குத்தான் திமுகவின் ஐடி விங் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது திமுக ஐடி விங்தான் புதிய வேகம் எடுத்து தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது.
கொரோனா லாக்டவுன்: கட்சியினர் நிவாரணம் வழங்க தமிழக அரசு தடை- ஸ்டாலின், வைகோ கண்டனம்
கொரோனா நேரம்
திமுகவின் ஐடி விங் தீவிரமாக செயல்பட காரணம் கொரோனா என்று கூட கூறலாம். முதலில் கொரோனா தாக்கிய தொடக்கத்தில் திமுக பெரிய அளவில் இணைய பிரச்சாரம் எதையும் செய்யவில்லை. தாங்கள் செய்யும் பணிகளை வெளியே சொல்லாமல் இருந்தது. அதாவது மக்களுக்கு உதவி செய்தாலும் கூட அதை பெரிதாக விளம்பரம் செய்யவில்லை. அப்போது அதிமுகவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி முதல்வர் பழனிசாமி வரை எல்லோரும் நன்றாக ஸ்கோர் செய்து கொண்டு இருந்தனர். இதனால் திமுக இருக்கிறதா என்றே தெரியாத நிலை ஏற்படும் சூழ்நிலை உருவானது. திமுக எங்கே போனது என்றும் கேட்கும் நிலை உருவானது .
எல்லோரும் களமிறங்கினார்கள்
இதை புரிந்து கொண்ட திமுக அதன்பின்தான் சமூக வலைதளத்தில் தீவிரமாக களமிறங்கி தாங்கள் செய்யும் பணிகளை வெளியே சொல்ல தொடங்கியது. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என்று எல்லோரும் களமிறங்கி பணிகளை செய்தனர். அதை உடனுக்குடன் ஒவ்வொரு மாவட்ட திமுக ஐடி விங் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள். மக்களுக்கு உடனுக்குடன் திமுகவின் உதவிகளை சமூக வலைத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வழங்க தொடங்கினார்கள்.
அரசு செய்யும் தவறுகள் என்ன?
ஒரு பக்கம் மக்களுக்கு உதவி செய்யும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் அரசுக்கு எதிராகவும் திமுக கடுமையாக பிரச்சாரம் செய்தது. முக்கியமாக தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைவை சந்திக்கிறது. போதிய டெஸ்ட் செய்யப்படுவது இல்லை. வெளிப்படைத்தன்மை இல்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக திமுக பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடங்கியது. இதற்கான அதிரடி ஆதாரங்களை அடுக்க தொடங்கியது.
முதல்வர் அறிவிப்பு
அப்போதுதான் முதல்வர் பழனிசாமி அதிரடியாக களமிறங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் என்ஜிஓ அமைப்புகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது. மக்கள் தனிமனித விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அரசியல் கட்சிகள் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அரசு கூறியது. திமுகவின் சோஷியல் மீடியா விளம்பரங்கள் வைரல் ஆனதை அடுத்து முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்கிறார்கள்.
வைரலாக்குகிறார்கள்
இந்த வாய்ப்பை திமுக சரியாக பயன்படுத்திக் கொண்டது என்றுதான் கூற வேண்டும். மக்களுக்கு உதவி செய்வதை அரசு தடுக்கிறது. திமுக மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று அதிமுக நினைக்கிறது என்று இணையம் முழுக்க பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்காக பல ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு வைரல் செய்யப்பட்டது. அரசுக்கு எதிராக, முக்கியமாக முதல்வருக்கு எதிராக முக்கியமான சில டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டன.
ஸ்டாலின் களமிறங்கினார்
இன்னொரு பக்கம் ஸ்டாலின் இந்த ஜோதியில் ஐக்கியமாகி அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். நேற்று மதியமே ''அரசு செய்லபட வேண்டும்.. இல்லையென்றால் செயல்பட வைப்போம்'' என்று கூறினார். அதன்பின் நேற்று இரவு அரசின் தடை அறிவிப்பிற்கு பின் டிவிட் செய்த ஸ்டாலின், காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்!
கேள்விகள் கேட்டார்
இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!, என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு அரசுக்கு வரிசையாக கேள்விகளை அடுக்கி இருந்தார். மேலும் ஏப்ரல் 15ம் தேதியில் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது என்று அறிவித்தார்.
ஒரே நாளில் அரசு மாற்றம்
இதெல்லாம் நடந்தது வெறும் 24 மணி நேரத்தில். இந்த சமூக வலைதள பிரச்சாரம், வைரலான ஹேஷ்டேக்குகள், ஸ்டாலினின் அனைத்து கட்சி கூட்டம் எல்லாம் தமிழக அரசை யோசிக்க வைத்தது. இதனால் பின்வாங்கிய தமிழக அரசு, நாங்கள் யாரும் உதவி செய்வதை தடுக்கவில்லை. மக்களுக்கு உதவி செய்ய நினைத்தால் யார் வேண்டுமானாலும் உதவலாம். அரசு தடுக்காது என்று முதல்வர் பழனிச்சாமி இன்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். தமிழக அரசு தனது முடிவை மாற்றியுள்ளது.
வெற்றியாக பார்க்கிறார்கள்
இந்த 24 மணி நேரத்தில் நடந்த மாற்றத்தை திமுக தங்கள் பிரச்சாரத்தின் வெற்றியாக பார்க்கிறது. அரசை செயல்பட வைப்போம் என்று ஸ்டாலின் கூறினார். தற்போதே அதேபோல் செய்துவிட்டார் என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள். அதாவது திமுக செய்த தீவிரமான இணைய விமர்சனத்தின் நேரடி பலன்தான் இந்த மாற்றம். திமுக இனி செய்யப்போகும் அரசியல் இதை மையமாக வைத்துதான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.