வாய் நிறைய வசனம்.. ஒரு ஆதாரமும் காட்டலை.. திகைக்க வைத்த தணிகாச்சலம்.. அதிரடியில் குதித்த அரசு!
போலி சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது
சென்னை: சித்த மருத்துவர் தணிகாசலத்தை போலீசார் கைது செய்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம்... மிக சரியான நேரத்தில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது!!
Recommended Video
"வைரசுக்கு மருந்து என்கிட்ட இருக்கு.. என்னால குணப்படுத்த முடியும்" என்று கொரோனா வதந்திகளுடன் சேர்ந்து கொக்கரித்தபடி வெளிவந்ததுதான் தணிகாசலத்தின் ஏகப்பட்ட யூடியூப் வீடியோக்கள்!!
இந்த கொரோனா ஒரு புது வைரஸ், உலகம் இதுவரை சந்திக்காதது.. மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் முட்டி மோதி வருகின்றன.. இன்னொரு பக்கம் மேலைநாடுகளில் கொத்து கொத்தாக விழுந்து மடிந்து கொண்டிருந்தவர்கள் நிலை நம் நாட்டிலும் உருவாக ஆரம்பித்துள்ளது.. நாளுக்கு நாள் இந்த தொற்று எண்ணிக்கை உயர்ந்தும் வருகிறது.
பீதி உணர்வு
இதை பார்க்கும்போது தங்களையும் அறியாமல் மக்களுக்கு ஒரு பீதி உணர்வு வந்துவிட்டது.. எப்படியாவது யார் மூலமாவது உயிரை காப்பாற்றி கொண்டால் போதும் என்ற முடிவுக்கு வந்தவர்கள்தான் தணிகாசலத்தை முழுமையாக ஆதரித்தவர்கள்.. விவரம் அறிந்தவர்கள், அறிவியல் புரிந்தவர்கள், நோயின் தன்மை, தீவிரத்தை தெரிந்தவர்கள் இவருக்கு கடைசிவரை ஆதரவு தரவில்லை.
கீழாநெல்லி
"கொசு வளருங்கள், கொரோனா குணமாகிவிடும்... கையை கழுவாதீங்க.. மாஸ்க் போடாதீங்க".. என்றெல்லாம் முரண்பட்ட தகவல்களை கூறி கொண்டே இருந்தார்.. பிறகு திடீரென கொரோனாவுக்கு கீழாநெல்லி சாப்பிடுங்கள், சரியாகிவிடும் என்றார்.. இதை கேட்டு மற்ற சித்த மருத்துவர்களே அதிர்ந்தனர்.
வீடியோக்கள்
பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும், அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை தருவதோடு, தான் தரும் மருந்தையும் எடுத்து கொள்ளலாம், அதனால் பின்விளைவுகள் வராது என்று கேட்டுக் கொண்டார் தணிகாசலம்.. மொத்தமாக 10 நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளையும் தன்னால் குணமாக்க முடியும் என்றார்.. சுவிட்சர்லாந்தில் ஒருத்தர் இதன்மூலம் குணமாகிவிட்டார், லண்டனில் ஒரு பெண் குணமாகிவிட்டார் என்றும் சொல்லி அந்த வீடியோக்களை பதிவிட்டார்.
தூக்கிலிடுங்கள்
"நான் சொன்ன மருந்தைதான் சீனா இப்போ பயன்படுத்துது.. கொரோனா வார்டுக்குள்ளே என்னை விடுங்க.. அங்கிருக்கும் 5 நோயாளிகளை தாருங்கள்.. 48 மணி நேரம் டைம் குடுங்க.. நான் மருந்து சாப்பிட்டபிறகு அந்த மருந்தை 5 நோயாளிகளுக்கு தருகிறேன்.. 48 மணி நேரம் கழித்து அவர்களை டெஸ்ட் செய்து பாருங்கள்.. அவர்கள் சரியாகிவிட்டால் இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளை என்னிடம் தாருங்கள், குணப்படுத்துகிறேன்.. என்னால் கொரோனாவை குணப்படுத்த முடியவில்லை என்றால் தூக்கிலிடுங்கள்" என்றார் தணிகாசலம்.
சோஷியல் மீடியா
இதையெல்லாம் கண்ட ஒரு குரூப் மக்களை தணிகாச்சலம் தன் பக்கம் விழ செய்தது உண்மையே.. இதற்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் சோஷியல் மீடியா.. மக்களின் உணர்வுகள் தூண்டப்பட்ட.. விபரீதமாக விளையாடப்பட்டன.. தான் மருந்து கண்டுபிடித்ததாகவும், ஆனால் அதை மத்திய, மாநில அரசுகள் ஏற்க மறுப்பதாகவும் பகிரங்கமாக அரசை சாடினார். "ஏன் இப்படி மக்கள் உயிர் மீது விளையாடுகிறீர்கள்" என்ற கேள்வியை எழுப்பி பீதியில் உள்ள மக்களையும் தன் பக்கம் இழுக்க பார்த்தார். ஒரு கட்டத்தில் தான் "தமிழன்" என்பதால் நிராகரிக்கிறார்கள் என்ற அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தார்.
உணர்வுபூர்வமானவை
இன்னும் ஒரு படி மேலே போய், மருத்துவ உலகின் தியாகங்களை கொச்சைப்படுத்த துவங்கினார்.. பொதுவாக தமிழ், இனம், என்ற ரீதியில் எதையும் அணுகினால், நம் மக்கள் விழவே செய்வார்கள்.. அந்த அளவுக்கு மக்கள் உணர்வுபூர்வமானவர்கள்.. தமிழினத்துக்கு மதிப்பளிப்பவர்கள்.. இதைதான் திரு.தணிகாசலம் கேடயமாக பயன்படுத்தி கொண்டார்.. முதலில் கொரோனாவுக்கு ஒரே நாளில் குணப்படுத்த தன்னிடம் மருந்து உள்ளது, அதை கண்டுபிடித்துவிட்டதாக அவர் சொன்னதே தவறு... அப்படி அவர் அந்த மருந்தை கண்டுபிடித்திருந்தால் மக்கள் முன்பே அதை தாராளமாக எப்போதோ நிரூபித்திருக்கலாம். எத்தனை கொரோனா நோயாளிகளை இவர் குணப்படுத்தினார், இவரிடம் எத்தனை பேர் சிகிச்சை சென்றார்கள் என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை.
அரசு மருத்துவமனைகள்
முதலில் கொரோனாவைரஸ் ஒருவரை தாக்கினால் அவரை அரசே நேரடியாக கண்காணித்துவிடும்.. சம்பந்தப்பட்டவர் அரசு மருத்துவமனைக்குதான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.. அப்படி இருக்கும்பட்சத்தில் தணிகாச்சலத்தை நம்பி சென்றவர்கள் யார் யார்? குணமாக்கியதாக சொல்வோர் பட்டியல் என்ன? அவர் அவர்களுக்கு தந்த மருந்துகள் என்னென்ன? ஃபார்முலாக்கள் என்னென்ன? தொற்று அறிகுறியுடன் சென்றார்களா? அல்லது வைரஸ் பாதித்து சென்றார்களா? போன்றவை எல்லாம் வெளிப்படையாக தெரியவில்லை.
கபசுர குடிநீர்
அவர் இதுவரை வெளியிட்டுள்ள வீடியோக்களில் பெரும்பாலும் சொன்னது கபசுர குடிநீர்தான்.. இது பொதுவான சித்த மருத்துவத்தில் உள்ள அற்புதமான மருந்தாகும்.. அரசும் இதைத்தான் விநியோகித்து வருகிறது.. ஆனால் அது கொரானாவை குணப்படுத்தும் மருந்து என்று இவர் சொல்வதுதான் குழப்பத்துக்கு காரணமாக அமைந்தது.. ஒருவேளை இவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருந்தாலும், அதனை உரிய பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.. அதன்பிறகுதான் அதன் உண்மைதன்மையை அறிய முடியும்.. இது எதையுமே செய்யாமல் நேரடியாக மக்களிடம், அதுவும் சோஷியல் மீடியாவில் அப்பட்டமாக போய் குழப்பியது மிகப்பெரிய தவறு.
பரிசோதனைகள்
தணிகாசலம் சென்றிருக்க வேண்டியது மக்களிடம் இல்லை.. சம்பந்தப்பட்ட சித்த மருத்துவ துறையிடம்.. இதற்கென ஸ்பெஷலிஸ்ட்டுகள் உள்ளனர்.. அவர்கள் தணிகாசலம் சொன்ன மருந்தை ஆராய வேண்டும், அந்த கண்டுபிடிப்பு என்ன? அது புதிய கண்டுபிடிப்புதானா? என்பதை கண்டறிய வேண்டும்.. அதற்கு பிறகு பரிசோதித்து பார்க்க வேண்டும், பக்கவிளைவுகள் இல்லாத பட்சத்தில், அப்போதுதான் அரசுக்கு பரிந்துரை செய்ய முடியும்.. அதற்கு பிறகு, அரசு முறையான சிகிச்சை முறைக்கு உத்தரவிட வேண்டும்.. இதுதான் உரிய வழிமுறை.
யார் பொறுப்பு?
அதைவிட்டுவிட்டு, நேரடியாக மக்களிடம் நெருங்குவதும், அரசுகளை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுவதும், இனம், மொழி, தமிழன் என்று வார்த்தைகளை பயன்படுத்துவதும் தேவையில்லாத ஒன்று.. எதையாவது உணர்வுபூர்வமாக சொல்லி கிளப்பிவிட்டு நாளை மக்கள் உயிர்களுக்கு ஏதாவது ஒரு பக்க விளைவு வந்தால் அதற்கு யார் பொறுப்பு?
திறமைகள்
ஆனால், ஒரு சிலரது ஆதரவுகள் இவருக்கு இன்னமும் உள்ளன என்பது ஆச்சரியமாக உள்ளது... தணிகாசலத்தை அரசுகள்தான் வேண்டுமென்றே தடுக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. அரசு இப்போது கடுமையான நெருக்கடியில் உள்ளது. எந்த அளவுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுமோ அவ்வளவும் அரசின் தலையில்தான் விழும்.. இப்படிப்பட்ட நேரத்தில் மருந்து கண்டுபிடித்திருந்தால் நிச்சயம் அதனை பயன்படுத்தி கொள்ளதான் முயற்சிக்குமே தவிர, மருந்து கண்டுபிடித்தவர்களை தடுப்பது, எதிர்ப்பதும் அரசின் நோக்கம் இல்லை.. அதற்கு அவசியமும் இல்லை.. அது மட்டுமில்லை.. திறமை எங்கிருந்தாலும் அது தானாகவே பீறிட்டு வெளியே வந்தே தீரும்.. யார் எத்தனை தடுப்பு போட்டாலும் அந்த திறமையை மூடி ஒருக்காலும் எவராலும் மறைத்துவிட முடியாது.
பொக்கிஷங்கள்
உண்மையிலேயே சித்த மருத்துவத்தில் அற்புதங்கள் உள்ளன.. ஆங்கில மருத்துவத்தை போலவே சித்த மருத்துவமும் நமக்கு பொக்கிஷங்கள்தான்.. ஆனால், எப்படி ஆங்கில மருத்துவத்தில் மாற்று மருந்து பயன்படுகிறதோ அப்படித்தான் சித்த மருத்துவம் உட்பட அனைத்து முறைகளிலும் மாற்று மருந்துகள் உள்ளன. அந்த வகையில் சித்த மருத்துவத்தை குறைத்து எடைபோடுவதற்கில்லை.. அதற்காக போலி மருத்துவத்தை எந்த காலத்திலும் அனுமதிக்க முடியாது... தணிகாசலம் என்ற ஒரு தனி நபருக்காக மத்திய, மாநில அரசு முதல் ஐநா சபை வரை எதிர்க்கிறார்கள் என்று சொல்வதும் ஏற்கும்படியாக இல்லை.
கல்வி தகுதி
தணிகாசலம் முறையாக மருத்துவம் பயின்றவர் இல்லை என்றும் சொல்கிறார்கள்.. ஒரு டாக்டருக்கான முதல் தகுதி Following Medical Ethics-தான்.. அது இல்லாமல் குறுக்கு வழியில் பாமர மக்களை குழப்பிவிடக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமும். 5 வருடம் முறையாக மாற்று மருத்துவம் படிப்பவர்கள் ஒருவகை.. பாரம்பரியம் வைத்திய முறையில் பயிற்சி பெற்றாலும் முறையாக பதிவு செய்து மாற்று மருத்துவம் பார்ப்பவர்கள் மற்றொரு வகை.. இவை இரண்டிலுமே சேராதவர்தான் தணிகாசலம்.
அப்பாவி மக்கள்
மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை போல போல மருத்துவத்துறைக்கு எதிராக அப்பாவி மக்களை குழப்பும் வகையில் செயல்படுபவர்களை அரசு இதுபோல் தடுக்க வேண்டும். அதேசமயம், சித்த மருத்துவத்தில் எந்த நன்மை இருந்தாலும் அதை முழுதுமாக பயன்படுத்தி, அத்தகைய சித்த மருத்துவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்... சித்த மருத்துவத்தை தாங்கி பிடிக்க அரசுகள் விழைய வேண்டும்..
யாருக்கும் உரிமை இல்லை
ஒரு தனி நபர் தன் சுய விளம்பரத்துக்காக எந்த எல்லைக்கும் போகலாம்.. அதற்காக மக்களை பகடையாக பயன்படுத்தக்கூடாது.. மனிதனுக்கு கொடுக்கப்படும் தவறான ஆலோசனை கூட கொலை குற்றத்திற்கு ஈடானதே.. அறிவியலுக்கு எதிரான விஷயங்களை மட்டுமல்ல... பொதுமக்களின் உயிர் பாதுகாப்புடன் விளையாடும் உரிமையும்கூட யாருக்கும் கிடையாது.. இதைதான் தணிகாசலம் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டியது!!