மே 18 முதல்.. அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும்.. வாரம் 6 நாள் வேலை.. தமிழக அரசு அதிரடி
50 சதவீத ஊழியர்களுடன் 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும்
சென்னை: மே 18-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50% அரசு ஊழியர்களுடன் வாரத்தின் 6 நாட்களும் இயங்கும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.. இது சம்பந்தமான அரசாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரி கட்ட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன... அதனால்தான் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேபோல, தமிழகத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தற்காலிகமாக நிறுத்திவைத்து அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் கொரோனா தொற்று காரணமாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் முழுப் பணியாளர்களுடன் செயல்படாமலும் இருந்தது.
தற்போது, மே 18-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தின் ஆறு நாட்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
18ந் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களில் ஊழியர்களை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது..
அலுவலகம் பணிக்கு வராத ஊழியர்கள் மின்னணு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும்.... அலுவலர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
நடப்பது "அம்மா"வின் ஆட்சி.. கொரோனா போகும் வரையாவது.. மதுவை விலக்கி வைக்கலாமே.. அரசு பரிசீலிக்குமா?
தற்போது, 3-ம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது, அது வரும் 17-ம்தேதி முடிவுக்கு வருகிறது.. மேலும் ஊரடங்கில் நிறைய தளர்வுகள் செய்யப்பட்டு பல கடைகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு திறக்கப்பட்டுள்ளன. எனினும், அரசு அலுவலங்கள் ஊரடங்கு காலத்தில் செயல்படவே இல்லை. அதனால் அரசு ஊழியர்களும் பணிக்கு வரவழைக்கப்படுகின்றனர்.
அதுமட்டுமல்ல, எப்படியும் 2 மாதமாக அரசு அலுவலகங்கள் செயல்படவேயில்லை.. எல்லா துறை பணிகளும் தேங்கி உள்ளன.. இதற்கு மேலும் விடுமுறை நீட்டித்தால், அது தங்களுக்குதான் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், அந்த வகையில் பணிச்சுமையை குறைக்க அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும் ஊழியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.