"இம்போர்ட்" தலைவர்.. ப.சி.க்கு ஒன்னு.. தமிழில் எழுதுங்க.. குஷ்புவுக்கு ஒன்னு.. எச்.ராஜா டபுள் கொட்டு
ப.சிதம்பரம் கருத்துக்கு எச்.ராஜா பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: கேப் கிடைத்தால் கிடா வெட்டி விடுகிறார் எச். ராஜா. ப.சிதம்பரம் ஒரு கருத்தை சொல்லப் போக சோனியா காந்தி வரை இழுத்து விட்டு விமர்சித்துள்ளார். அது மட்டுமா.. நடிகை குஷ்பு ஒரு டிவீட் போட அவருக்கும் ஒரு சுளீர் பதிலடியை உடனடியாக கொடுத்திருக்கிறார். இரண்டுமே பிரதமர் மோடி நேற்று பேசிய பேச்சை வைத்துத்தான்.
நான்காவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்படவுள்ளது. அதேபோல பொருளாதார பேக்கேஜையும் அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதுதொடர்பான முக்கிய உரையை நேற்று அவர் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு நிகழ்த்தினார்.
இதை வைத்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும், நடிகை குஷ்புவும் தத்தமது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். அதற்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவரான எச். ராஜா.
குவைத்துக்கு அவசரமாக போனை போட்ட ராமதாஸ்.. ரமேஷ் வைத்த பரபர கோரிக்கை.. !
பிரதமர்
பிரதமரின் அறிவிப்புகள் குறித்து ப.சிதம்பரம் போட்டிருந்த டிவீட்டுகளில், "பிரதமர் நேற்று ஒரு வெற்று காகிதத்தையும், அதற்கு ஒரு தலைப்பையும் கொடுத்துள்ளார். இயல்பாகவே அந்த வெற்றுக் காகிதம் மீதுதான் எனது பார்வை படிந்துள்ளது. இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த வெற்றுப் பக்கத்தில் எதைப் போட்டு நிரப்பப் போகிறார் என்று பார்க்க வேண்டும். நமது பொருளாதாரத்திற்காக அரசு செலவிடப் போகும் ஒவ்வொரு கூடுதல் ரூபாயும் மிகுந்த கவனத்துடன் கவனிக்கப்பட வேண்டும்" என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
இந்திய தலைவர்
இதற்குத்தான் எச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், "என்ன செய்வது. மாண்புமிகு பிரதமர் சுய சார்பு குறித்துப் பேசியுள்ளார். ஆனால் இந்தியரைத் தலைவராக கொள்ளாதவர்களும், இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவரை தலைவராக கொண்டவர்களும் நிச்சயம் இதை சகித்துக் கொள்ள முடியாதுதான். புரிந்து கொள்ளவும் முடியாதுதான். ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இன்று நாட்டு மக்கள் முன்பு தன்னை ஜோக்கராக காட்டிக் கொண்டுள்ளார்" என்று சாடியுள்ளார்.
குஷ்பு ட்வீட்
அடுத்து குஷ்பு போட்ட டிவீட்டுக்கு வருவோம்.. நேற்று ஆர்வத்துடன் பிரதமர் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த குஷ்பு அதன் பின்னர் ஒரு டிவீட் போட்டார். ஆங்கிலத்தில் அவர் தமிழை எழுதியிருந்தார். "போங்கடா.. என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. டைம் வீணாப் போச்சு" என்று அவர் கூறியிருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நேற்றே நிறைய கமெண்டுகள் வந்து விட்டன. அதில் ராஜாவும் ஒருவர்.
எச்.ராஜா
எச். ராஜா போட்ட உடனடி பதிலில், "முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும். நான் 4 ஆண்டுகள் தான் ம.பி யில் இருந்தேன். இந்தியை இந்தியில் தான் எழுதுகிறேன். பிரதமர் சுயசார்பு பற்றி பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாக தோன்றுவதில் ஆச்சரியமில்லை" என்று கூறியிருந்தார் எச். ராஜா.