எப்படி ஏற்பட்டது? சென்னை தனியார் மால் ஊழியருக்கு கொரோனா.. தீவிரமாக நடந்த விசாரணை.. துப்பு துலங்கியது
சென்னை தனியார் மாலில் வேலை பார்த்த பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: சென்னை தனியார் மாலில் வேலை பார்த்த பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு கொரோனா ஏற்பட்டது எப்படி என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் மொத்தம் 49 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க மொத்தம் 309 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
கோவையில் மொத்தம் 33 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மாலில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதுதான் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
நெருங்கி நின்று பேசினாலும்.. மூச்சு விட்டாலும் கூட கொரோனா பரவுமாம்.. அதிர வைக்கும் அமெரிக்க ஆய்வு
விடுமுறைக்கு சென்றார்
சென்னையில் வேளச்சேரியில் அந்த மால் உள்ளது. அந்த பிரபல மாலில் உள்ளே இருக்கும் துணிக்கடை ஒன்றில்தான் அந்த பெண் பணியாற்றி வருகிறார். அரியலூரை சேர்ந்த அந்த பெண் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். சென்னையில் இரண்டு வருடமாக அந்த பெண் பணியாற்றி வருகிறார். இவர் மார்ச் 2ம் வாரம் சென்னையில் இருந்து விடுமுறைக்கு அரியலூர் சென்றுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டது
அரியலூர் சென்ற அந்த பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 20ம் தேதி இவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சோதனைக்கு செய்துள்ளார். அதன்பின் அவருக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையின் முடிவில், இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. வரும் 7 மற்றும் 14ம் தேதிகளில் இவருக்கு மீண்டும் கொரோனா சோதனைகள் செய்யப்பட உள்ளது.
எப்படி வந்தது?
இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று பெரிய குழப்பம் இருந்தது. இவருடன் அதே மாலில் பணியாற்றிய வேறு ஊழியர்கள் யாருக்கும் கொரோனா இல்லை. அப்படி இருக்கும் போது இவருக்கு கொரோனா ஏற்பட்டது எப்படி என்று சந்தேகம் வந்தது. அங்கு வந்த கஷ்டமர்கள் யாருக்காவது கொரோனா வந்திருக்குமா என்று கேள்விகள் எழுந்தது. அப்படி கஷ்டமர்களுக்கு கொரோனா இருந்தால் அது மாலுக்கு சென்ற பலருக்கு பரவி இருக்க வாய்ப்புள்ளது.
கண்டுபிடிக்க முடியவில்லை
இந்த நிலையில் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடந்தது. அந்த மாலில் இருக்கும் கடையின் சிசிடிவி காட்சிகள் எல்லாம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. அதேபோல் அந்த மாலுக்கு சென்ற யாருக்காவது கொரோனா இருந்ததா என்று காண்டாக்ட் டிரேசிங் முறை மூலம் சோதனை செய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கொரோனா இருந்த வேறு யாரும் அந்த குறிப்பிட்ட தனியார் மாலுக்கு செல்லவில்லை.
தனியார் மாலில் துணி வாங்கினார்
இதனால் இது தொடர்பாக அண்டை மாநிலங்களிலும் விசாரணை நடத்தபட்டது. அதாவது உங்கள் மாநிலத்தில் கொரோனா ஏற்பட்ட யாராவது, அந்த குறிப்பிட்ட மாலுக்கு சென்றார்களா என்று அண்டை மாநிலத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் அந்த சென்னை மாலுக்கு சென்றதும். அவருக்கு கொரோனா இருந்ததும். அந்த நபர் அந்த கடையில் துணிகள் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிரம் அடையும் சோதனை
இந்த அரியலூர் பெண், அந்த துணை கடையில் கவுண்டரில் பணியாற்றுகிறார். இவர் டெபிட் கார்ட் அல்லது பணம் கொடுத்த போது அதன் மூலம் அந்த பெண்ணுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் தற்போது அந்த கடையில் பணியாற்றிய பணியாளர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த ஒரு வாரம் மாலுக்கு சென்ற எல்லோரையும் சோதனை செய்ய அரசு தற்போது தீவிரமாக முயன்று வருகிறது.