சாலைகளில் தெர்மல் கேமரா.. ஜிபிஎஸ்.. உளவுத்துறை.. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மாஸ் திட்டம்!
கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்களை கண்டுபிடிப்பதற்காக தமிழக அரசு புதிய தொழில்நுட்பங்களை கையில் எடுத்துள்ளது
சென்னை: கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்களை கண்டுபிடிப்பதற்காக தமிழக அரசு புதிய தொழில்நுட்பங்களை கையில் எடுத்துள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு திட்டங்களை வகுத்து உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பை கண்டு பிடிப்பதற்காக காண்டாக்ட் டிரேஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. இது வித்தியாசமான முறை ஆகும். அதாவது ஏ என்ற நபர் வெளிநாட்டில் இருந்து கொரோனா பாதிப்போடு இந்தியா வருகிறார். இந்தியாவில் அவர் பலரை சந்திக்கிறார்.
கொரோனா பாதித்த ஏ என்ற நபர் மூலம் அவர் சந்தித்த மற்றவர்களுக்கும் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இவர்கள் எல்லோரையும் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது ஏ என்ற நபர் ''காண்டாக்ட்'' செய்த எல்லோரையும் கண்டுபிடிப்பதுதான் காண்டாக்ட் டிரேஸ் முறை. இதன் மூலம்தான் கொரோனா மேலும் பரவுவதை தடுக்க முடியும்.
அந்த 62 மாவட்டங்கள்.. 80% கொரோனா நோயாளிகள்.. இதுதான் 'பரவும் பேட்டர்ன்'.. மத்திய அரசு அதிரடி திட்டம்
உளவுத்துறை செய்கிறது
இந்தியா முழுக்க இந்த காண்டாக்ட் டிரேஸ் முறையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் களமிறக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தமிழகத்தில் இந்த காண்டாக்ட் டிரேஸ் முறையில் உளவுத்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் முழுக்க உளவுத்துறை அதிகாரிகள் இதற்காக தீவிரமான பணிகளை செய்து வருகிறார்கள். கொரோனா ஏற்பட்ட நபர்களை எல்லாம் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
வரைபடம்
கொரோனா பாதித்த நபரிடம் விசாரணை நடத்தி விவரங்களை இவர்கள் பெறுவார்கள். அதாவது இன்று ஒருவருக்கு கொரோனா பாதித்தால் இன்றில் இருந்து 14 நாட்களுக்கு முன்பு வரை அவர் யாரை எல்லாம் சந்தித்தார் என்பதை ஒரு லிஸ்ட் போல எடுப்பார்கள். அவர் எங்கு எல்லாம் சென்றார் என்பதை கண்டுபிடிப்பார்கள். பின் அதை வைத்து ஒரு ப்ளூ பிரிண்ட் ஒன்றை உருக்குவார்கள். பின் இவர் சந்தித்த நபர் எல்லோரையும் தேடி கண்டுபிடிப்பதுதான் உளவுத்துறையின் வேலை ஆகும்.
வங்கி பரிவர்த்தனை
இதன் மூலமும் தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் பேர் வரை இப்படி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் இதில் வங்கி பரிவர்த்தனைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா உள்ள நபர் ஒரு ஏடிஎம் செல்கிறார். அங்கு பணம் எடுக்கிறார் என்றால் அது வங்கி பரிவர்த்தனையில் பதிவாகும். இதன் மூலம் அவர் எந்த ஏடிஎம் சென்றார், அங்கே எத்தனை பேர் வந்தனர் என்று கண்டுபிடிக்கிறார்கள். அதேபோல் அவர் எங்கெல்லாம் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டை பயன்படுத்துகிறாரோ அதை எல்லாம் வைத்து அவர் சென்ற இடங்களை டிரேஸ் செய்கிறார்கள்.
ஜிபிஎஸ் உதவி
இதில் கொரோனா நோயாளிகளின் மொபைல் ஜிபிஎஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா நோயாளிகள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அந்த தகவல் எல்லாம் ஜிபிஎஸ் ஹிஸ்டரியில் பதிவாகி வருகிறது. உதாரணமாக ஒரு கொரோனா நோயாளி நுங்கம்பாக்கம் சிக்னலில் கடந்த சனிக்கிழமை நின்று இருக்கிறார் என்றால், அவரின் மொபைல் ஜிபிஎஸ் அங்கு பதிவான அதே நேரத்தில் அருகில் இருந்த மொபைல் போன்கள் எது என்று கண்டுபிடிக்கப்படும்.
எளிதாக கண்டுபிடிக்கலாம்
அதே இடத்தில் அதே நேரத்தில் பதிவான மொபைல் ஜிபிஎஸ் எது, அது யாருடையது என்று கண்டுபிடிப்பார்கள். அதாவது ஏ என்ற நபருக்கு கொரோனா இருந்து பி என்ற நபர் அவரின் அருகில் இருந்தால், ஜிபிஎஸ் ஹிஸ்டரி மூலம் இதை கண்டுபிடிப்பார்கள். இதன் மூலம் கொரோனா பாதித்தவருக்கு அருகில் சென்ற நபர்களை மிக எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது என்று கூறுகிறார்கள்.
சிசிடிவி காட்சிகள்
இது இல்லாமல் கொரோனா நோயாளி எங்கேல்லாம் சென்றார் என்று சிசிடிவி காட்சிகள் மூலம் சோதனைகள் செய்யப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் இதற்காக பல ஆயிரக்கணக்கில் சோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதித்தவருடன் யாரெல்லாம் நெருக்கமாக இருந்தது, யாரெல்லாம் அவருக்கு மிக அருகில் இருந்தது என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்படும்.
தெர்மல் கேமரா எப்படி
அதேபோல் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்காக தெர்மல் கேமராக்களை சாலை ஓரங்களில் பொருத்தி உள்ளனர். டிராபிக் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் 24 மணி நேரமும் இந்த வீடியோ கவனிக்கப்படுகிறது. இந்த தெர்மல் கேமரா மூலம் சாலையில் நடந்து செல்லும் யாருக்கும் எல்லாம் காய்ச்சல் உள்ளது, யாருக்கு உடலில் அதிக வெப்பநிலை உள்ளது என்று கண்டுபிடிக்கப்படும்.