நானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு
தான் தனிமைப்படுத்தப்படவில்லை என கமல் விளக்கம் அளித்துள்ளார்
சென்னை: "அந்த அட்ரஸில் நான் சில வருஷமாகவே இல்லை.. அங்கு மநீம ஆபீஸ் செயல்பட்டு வருகிறது.. வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக, நான் கடந்த 2 வாரமாகவே தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன், அதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல" என்று கமல்ஹாசன் ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்.
Recommended Video
கமல்ஹாசனின் வீட்டில் மாநகராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்டதாக எச்சரிக்கை நோட்டீஸ் இன்று காலை ஒட்டப்பட்டது.. ஆனால் ஆழ்வார்பேட்டை வீட்டில் கமல் இப்போது இல்லை.. ஏனென்றால் கமல் இதை அலுவலகமாகத்தான் பயன்படுத்தி வருகிறார்.
அது மட்டுமல்ல, தற்சமயம் அவர் ஈசிஆரில் உள்ள வீட்டில்தான் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் ஆழ்வார்பேட்டை வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதனால் மய்ய உறுப்பினர்களும் கொந்தளித்து விட்டனர்.
நோட்டீஸ்
நோட்டீஸ் ஒட்டப்பட்ட விவகாரம் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி சர்ச்சையாக வெடிக்க தொடங்கியதும், ஒட்டப்பட்ட நோட்டீஸை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர். பிறகு கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதில் தவறு நடந்து விட்டது என்று சென்னை மாநகராட்சியும் ஒப்புதல் தெரிவித்தது. "இமிகிரேஷன் அதிகாரிகள் தரும் பட்டியலை வைத்து நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. அதில் இந்த சிறு தவறு நடந்து விட்டது. இனிமேல் கவனமாக இருப்போம்" என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷூம் விளக்கம் தந்திருந்தார்.
கமல்ஹாசன்
அதேபோல கமல்ஹாசனும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், "உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள்.. என்னுடைய வீட்டின் வெளியே ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
முன்னெச்சரிக்கை
ஆனால் அந்த அட்ரஸில் நான் கடந்த சில வருடங்களாகவே இல்லையென்பதும், அந்த இடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் ஆபீஸ் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலரும் அறிந்ததுதான். அதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல. நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை வீட்டிலும், வெளியிலும் பின்பற்றி வருகிறேன்.. நான் சமூக இடைவெளியை எங்கும் பின்பற்றுவேன் என்றும் சொல்லி கொள்கிறேன்.
விளக்கம்
வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாகவே தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் எல்லாருமே அவ்வாறே செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்துவிட்டு வெளியிட வேண்டி கொள்கிறேன்.. உண்மையா, பொய்யா என தெரிந்து பதிவிட்டால் தவறான செய்தி பரவுவதையும் தடுக்க முடியும்" என்று கமல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.