இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை கனவாக போகிறதா? கொரோனாவுக்கு பின் என்ன நடக்கும்?
சென்னை: கொரோனாவால் வெளிநாட்டு வேலை என்பது இந்தியர்களுக்கு கொஞ்சம் கடினமாக மாறப்போகிறது. ஏன் வேலை கிடைப்பதே கடினமாகவும் ஆகப்போகிறது. உலகப் பொருளாதாரம் மொத்தமும் கடுமையாக சரிவடைந்துள்ளது. இது சரியாக எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியாத நிலை நீடிக்கிறது. எனவே வெளிநாடுகளில் மற்ற நாட்டினருக்கு வேலைகள் கிடைப்பது குறிப்பிட்ட காலத்திற்கு கடினம் என்றே சொல்கிறார்கள்.
மூன்றாம் உலகப்போர் வந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட யாரும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரி உலகத்தையே அழித்து வருகிறது.
உலகத்தை ஒற்றை நொடியில் அழிக்கும் அளவுக்கு ஆயுதங்களும் வல்லமையும் கொண்டுள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் என உலகின் தலை சிறந்த வல்லரசு நாடுகள் எல்லாம் அந்த சிறிய எதிரியை அழிக்க முடியாமல் அழிந்து வருகின்றன. வல்லரசு நாடுகளுக்கே இந்த நிலை என்றால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் நிலையை நினைத்து பாருங்கள்.
முடங்கிய கால்நடை சந்தைகள்... ஊரக பொருளாதார நிலையை சிதைத்த கொரோனா லாக்டவுன்
உயிரை காப்பாற்ற போராட்டம்
கொரோனா பாதிப்பை எல்லாருமே எல்லா கட்டத்திலும் பேசிவிட்டார்கள். ஆனால் பேச வேண்டிய கொரோனாவின் இன்னொரு பக்கம் மக்களின் வாழ்வாதாரம். இத்தனை நாட்களாக இருந்த மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்திருக்கிறது கொரோனா வைரஸ். தினசரி லட்சம் கோடிகளை வரியாக பெற்ற நாடுகள், லட்சம் கோடிகளை செலவழித்து மக்களை காப்பாற்ற போராடி வருகின்றன.
கோடிக்கணக்கான வேலைகள் அழியும்
எப்படியும் இந்த கொரோனா வைரஸ் வரும் ஜுன் முடியும் போது உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜுலை பிறக்கும் போது புதிய உலகத்தை மக்கள் பார்க்க போகிறார்கள். அப்படி பார்க்க போகும் உலக நாடுகள் , முதலில் தங்கள் நாட்டினருக்கு வேலை, வாழ்வாதாரத்தை உறுதி செய்யவே முன்னெடுப்புகளை செய்யும். அந்த வகையில் ஜுலை முதல் டிசம்பர் வரை உலக அளவில் தற்போது உள்ள கோடிக்கணக்கான வேலைகள் அழிக்கப்படும்.
அழிய போகும் வேலைகள்
குறிப்பாக அரபு நாடுகளில் 8.1% பேர், அதாவது 5 மில்லியன் முழு நேர ஊழியர்கள் பணியினை இழக்கலாம். ஐரோப்பாவில் 7.8% பேர், அதாவது 12 மில்லியன் முழு நேர தொழிலாளார்கள், ஆசியா மற்றும் பசிபிக் 7.2% பேர், 125 மில்லியன் முழு நேர தொழிலாளர்கள் தங்களது பணியினை இழக்க நேரிடலாம் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.
பணிகள் குறையும்
எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் எண்ணெய் விலை மீண்டும் உயரத்தை தொடும் போது தான் எண்ணெய் உற்பத்திகள் அதிகரிக்கும். அப்போது தான் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் அதிக அளவில் வேலை கிடைக்கும். எனவே முன்பு போல் வெளிநாட்டு வேலை என்பது அரபு தேசங்களில் இருக்க வாய்ப்பு குறைவு ஆகிவிடும்.
ஐரோப்பாவில் என்ன நிலை
இதேபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எல்லாம் ஜுலையில் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் பழையபடி தொழில்நுட்ப வேலைகள், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள், கால் சென்ட்டர் பணிகளை இந்தியாவுக்கு அதிக அளவு கிடைக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம். ஏனெனில் அமெரிக்கா உள்ளிட்ட ஒவ்வொரு மேற்கத்திய நாடுகளும் முழுவிச்சில் தன் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முதலில் முனையும். அதன்பிறகு தேவைக்கு போக அல்லது, தேவைக்காக வெளிநாட்டினை கேட்கும். ஆனால் அதற்கும் இந்த ஆண்டு முடியும் வரை காத்திருக்கும் நிலை ஏற்படலாம்.
நிச்சயம் கனவு தான்
எனவே வெளிநாட்டு வேலை என்பது இனி அடுத்த 6 மாதத்திற்கு நிச்சயம் பலருக்கு கனவு நிலையிலேயே இருக்கும். இந்த பாதிப்பு வெறும் வெளிநாட்டு வேலைகளை மட்டும் பாதிக்காது இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை அடிப்படை கட்டமைப்பையே ஆட்டிபடைக்கும் அளவுக்கு இருக்கும். உள்நாட்டிலும் ஏராளமானோர் வேலைகளை இழப்பார்கள். எனினும் ஒரே ஆறுதலான நம்பிக்கை என்றால், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், குறைவான ஊதியம், அதிக திறமை, வலிமையான அரசுகள் உள்ளிட்ட நாடுகளையே தேர்ந்தெடுக்கும். அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு பல நாடுகளில் இருந்து தொழிற்சாலைகள் இந்தியாவுக்கு இடம் பெயரலாம். அப்படி நடந்தால் நிச்சயம் வேலைகள் இந்தியாவில் பெரிய அளவில் அதிகரிக்கும்.