கொரோனா ஊரடங்கு.. உணவின்றி கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்!
21 நாள் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனம் உதவி செய்து வருகிறது.
சென்னை: 21 நாள் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனம் உதவி செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அன்றாட வருமானத்தை நம்பி இருக்கும் மக்கள் உணவுக்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னையில் உதவி வரும் அமைப்புதான் இனிய உதயம் தொண்டு நிறுவனம் ஆகும்.
இனிய உதயம் தொண்டு நிறுவனம் கடந்த 25 நாட்களாக கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு அளித்து வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கோமளா 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு எதிர்கொள்வது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது பற்றிய விவரங்களை சொல்லி கொடுத்து வருகிறது.
அந்த மாணவ மாணவியருக்கு கை கழுவு கிருமி நாசினி, முக கவசம் ஆகிய பொருட்களை இவர் வழங்கினார். மேலும் அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களே முககவசங்கள் தைத்து பொதுமக்களுக்கும் கொடுத்து வருகிறார்கள்.
அதேபோல் இவர்கள் மூலம் 144 ஊரடங்கு தடை சட்டத்திற்கு பிறகு, தினமும் 300 பேருக்கு மத்திய உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று (8.4.20) இனிய உதயம் தொண்டு நிறுவனம் மூலம் ஆவடி மற்றும் வீரபுரம் பகுதிகளில் உணவின்றி வாடி தவிக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மதிய உணவு 300 அளிக்கப்பட்டது. அவசர தேவைக்கு ரொட்டி பாக்கெட்டுகளும் கொடுக்கப்பட்டது. சிறுவர்களுக்கு பிஸ்கெட்டுகள் வழங்கப்பட்டது.
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தேச நலன் கருதி சேவை செய்து வருகிறார்கள். தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, பொதுமக்களையும் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். அனைவரும் வீட்டில் இருக்கவும் கைகளை ஒருநாளைக்கு 10 முதல்15 முறை கழுவவேண்டும் என்பதயும் பொதுமக்களுக்கு சொல்கிறார்கள்.
விழித்திரு! விலகி இரு!! வீட்டில் இரு! என்று கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.