சம்மட்டி அடி.. எல்லாமே தலைகீழா மாறிடுச்சு.. மனிதர்களுக்கு வார்னிங் கொடுத்த கொரோனா!
சென்னை : கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்தாலும், எதிர்காலம் மீதான பெரிய பயத்தை பணக்காரர் முதல் ஏழை வரை உண்டாக்கி இருந்தாலும், ஒரு வகையில் மனித இனம் சரியான பாதையில் செல்லவில்லை என எச்சரிக்கவே கொரோனா வைரஸ் நம்மை ஆட்டிப் படைக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள் கடந்த சில நாட்களாக வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள். இந்த சில நாட்களிலேயே உலகம் பெரிய அளவில் மாறத் துவங்கி விட்டது.
காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. மிருகங்கள், பறவைகள் நிம்மதியாக உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் மனிதனுக்கு அத்தியாவசிய தேவை எது? என்ற சிந்தனையே இப்போது தான் வந்துள்ளது. இதெல்லாம் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கான அறிகுறிகள் தான்.
20 ஆண்டுகளில் மாறிய உலகம்
90களில் தான் இந்த உலகம் நவீனமயமாக மாறத் துவங்கியது. உலகமயமாக்கல் கொள்கை பல நாடுகளை மாற்றத் துவங்கியது. ஆனால், 2000மாவது ஆண்டுக்குப் பின் தான் உலகம் தலைகீழ் ஆனது. எங்கும், எதிலும் பரபரப்பு. ஐந்து நாட்கள் இருந்த வேலை நாள் ஆறு நாள் ஆனது. தொழிற்சாலைகளில் மட்டுமே இருந்த பல நவீன இயந்திரங்கள், மனிதனின் வீட்டுக்குள், படுக்கை அறைக்குள், போர்வைக்குள், கழிவறைக்குள் கூட குடி வந்தது. குறிப்பாக, செல்போன்.
காற்று மாசு
ஆனால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, எங்கே நம் மீதும் தொற்றிக் கொள்ளுமோ என அச்சத்தில் இருக்கும் பலர் வீட்டிலேயே முடங்கி, வேலை என்ன ஆகுமோ, எதிர்காலம் காலம் என்ன ஆகுமோ என கவலையில் இருக்க, ஒட்டுமொத்த பூமியிலும் காற்று மாசு சட்டென குறைந்துள்ளது.
காற்று மாசை குறைத்த வைரஸ்
பல ஆண்டுளாக, பெரிய நாடுகள் கூட்டம் போட்டு காற்று மாசை குறைப்பது பற்றி பேசி வந்தார்கள். எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பின் டெல்லியில் மூச்சு முட்டி பல வியாதிகளை உண்டாக்கும் அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டது. அப்போது யாராலும், அந்த காற்று மாசை நிறுத்த முடியவில்லை. ஆனால், தம்மாத்தூண்டு கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமி, காற்று மாசை சில நாட்களில் ஒரேடியாக குறைத்துள்ளது.
குப்பை மேலாண்மை
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இழுத்து மூடப்பட்ட தொழிற்சாலைகளால் பெருமளவு கழிவுகள் வெளியேற்றம் குறைந்துள்ளது. வீடுகளில் இருக்கும் மக்களும் எதிர்காலம் நிச்சயமற்ற சூழலில், எந்த உணவுப் பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் குப்பை என ஒதுக்கப்படும் உணவுக் கழிவுகளை எப்படி பயன்படுத்தலாம் என இப்போதே பலர் யோசனைகள் கூறி வருகின்றனர்.
பரபரப்பு தேவையா?
பரபரப்பு என்ற சொல் கடந்த 20 ஆண்டுகளில் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நகரங்களில் ஓடிக் கொண்டே இருந்த மக்கள், இன்று வீட்டுக்குள் முடங்கி, தங்கள் சக குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை முதன் முறையாக புரிந்து கொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். பலர் இந்த ஊரடங்கில் தான் உண்மையான, அமைதியான, பொருளாதார அளவில் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
குழந்தைகள் மீது கவனம்
பரபரப்பான வாழ்க்கை முறையில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஆனால், கொரோனா வைரஸ் அச்சம் பெற்றோர்களை வீட்டுக்குள் மட்டும் முடக்கவில்லை. அவர்கள் கவனத்தை தங்கள் குழந்தைகளை நோக்கி திருப்பி உள்ளது.
இயற்கை மீதான அக்கறை
காடுகளுக்குள் இருக்கும் மிருகங்கள், பறவைகள் தங்களுக்கு தேவையான உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும். அவற்றின் வாழ்க்கை முறையும் இயற்கையின் கட்டுக்குள் தான் இருக்கும். தானும் வாழ்ந்து, மற்ற இனங்களும் வாழ வேண்டும் என்ற இயல்பான அக்கறை இருக்கும்.
தேவையற்ற கொண்டாட்டம்
ஆனால், மனிதனின் வாழ்க்கை முறை கடந்த சில ஆண்டுகளில் எல்லையே இல்லாமல் தேவயற்ற உணவு முறைகள், வாழ்க்கை முறைகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பார்ட்டி கலாச்சாரம் அதன் உச்சம். அவற்றிற்கு எல்லாம் முடிவு கட்டி உள்ளது கொரோனா வைரஸ். கடந்த சில நாட்களில் புதிய தலைமுறை மனிதர்களுக்கு தேவையானதை பற்றி மட்டுமே சிந்திக்க கற்றுக் கொடுத்துள்ளது இந்த கிருமி.
அரசின் கடமை
ஒரு அரசின் அடிப்படை கடமை, தன் நாட்டு மக்களுக்கு உணவு, சுகாதாரம், இருக்க இடம் ஆகியவற்றை உறுதி செய்வதே. கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டு மக்களை கண்டு கொள்ளவே இல்லை. கார்பரேட் கம்பெனிகளுக்கு தேவையானதை செய்து கொடுத்த அரசுகள், மக்கள் தங்களுக்கு தேவையானதை தாங்களே பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறின.
சம்மட்டி அடி அடித்த கொரோனா
ஆனால், இன்று வீதிகளில் இருக்கும் மக்களுக்கு இடம் அளிப்பது பற்றியும், உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உணவு அளிக்க என்ன செய்யலாம் என திட்டமிடவும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என அரசாங்கங்களே தங்களை சரி பார்த்துக் கொள்ளவும் சம்மட்டி அடி அடித்து கற்றுக் கொடுத்துள்ளது கொரோனா வைரஸ்.
அனைவருக்கும் உணவு
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என நீதி முழக்கம் இட்டான் மகாகவி பாரதி. இன்று அவசர அவசரமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஆயிரம், ஆயிரம் ஏழைகள், கூலித் தொழிலாளிகள் அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி கண்ணீர் சிந்தி வருகிறார்கள். கொரோனாவால் இறப்போரை விட பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்குமோ என்ற அச்சமும் உள்ளது. பாரதி வார்த்தைகள் உண்மையாகுமோ?
உணவு தான் அடிப்படை
ஏழைகள் உணவின்றி வாடும் செய்தியை படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் குற்ற உணர்ச்சி குத்திட்டு நிற்கிறது. ஏன்? நாம் உண்பது மட்டும் இன்றி, பசியில் இருப்போருக்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற அடிப்படை மனித இயல்பு. அதைக் கூட மனிதனுக்கு கற்றுக் கொடுக்கவே வந்துள்ளது இந்த கொரோனா வைரஸ். நாங்கள் மாறிவிட்டோம், திருந்தி விட்டோம் என்று கூறி இந்த கொரோனா வைரஸை வழியனுப்பி வைப்போம்.