டென்ஷனில் எடப்பாடியார்.. எதிர்பாராத குழப்பங்கள்.. திடீர் இடர்பாடுகள்.. அமைச்சரவையில் மாற்றமா..?
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது
சென்னை: ஏகப்பட்ட டென்ஷனில் முதல்வர் இருக்கிறாராம்.. எல்லாமே சுமூகமாய் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென சில இடர்களும், குழப்பங்களும் ஆட்சியில் நடந்து வருகின்றன.. இது முதல்வர் தரப்பு எதிர்பார்க்காதது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!!
Recommended Video
கொரோனாவைரஸ் தொற்று தமிழகத்தில் எட்டி பார்க்க தொடங்குவதற்கு முன்பேயே மிக தீவிரமான நடவடிக்கையை எடுத்தது அதிமுக அரசு.. இதற்கு முக்கிய காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் சுறுசுறுப்பு நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்புணர்வு, சுகாதாரத்துறையின் விடா முயற்சி போன்றவைகளின் அளப்பரிய பணியை மறுத்துவிட முடியாது. அதனால்தான் தொற்று பரவலில் 2வது இடத்தில் இருந்த தமிழகம் பின்னடைந்து கொண்டே செல்கிறது. எனினும், ஒரு சில சங்கடங்கள் அரசுக்கு ஏற்பட்டுள்ளன.
சமீப காலமாக தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை உயர்ந்தபடியே உள்ளது.. ஒரு பக்கம் குணமடைந்து பலர் வீடு திரும்பினாலும் பாதிப்பு இல்லாத நாள் என்று இல்லை.. குறிப்பாக சென்னை அலற வைத்து வருகிறது.. பொதுமக்கள் என்றில்லாமல், சுகாதாரத்துறையினர், போலீசார், பத்திரிகையாளர்கள் என்று பல தரப்பினரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.. இந்த சமயத்தில் தலைநகரிலேயே ஊரடங்கை சரியாக பின்பற்றாதது 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதை கண்டு பாஜக தரப்பும் ஷாக் ஆனதாக ஒரு தகவல் கசிந்தது.
இப்படி பாதிப்பு எண்ணிக்கை உயர்வுதான் அதிமுகவுக்கும் அதிர்ச்சியாக உள்ளது.. இன்னொரு பக்கம் அரசின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கி, திமுக கேள்வி மேல் கேள்வியாய் எழுப்பி வருகிறது.. குறிப்பாக ரேபிட் டெஸ்ட் கருவியை அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல் திருமாவளவன் வரை அறிக்கை விட்டு குடைந்து எடுத்துவிட்டனர். இதையும் அதிமுக எதிர்பார்க்கவே இல்லையாம்!!
மற்றொரு புறம் அமைச்சர்களே நிறைய இடங்களில் நிவாரண பணிகளை வழங்கும்போது, சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்ற சர்ச்சைகளும் எழுந்தன.. இது சம்பந்தமான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்திலும் வெளியாகின.. மக்களுக்கு உதவும் எண்ணத்துடன் அமைச்சர்கள் நிவாரண பணிகளை முன்னெடுத்தாலும், சில இடங்களில் சமூக விலகல் கேள்விகுறியாகி போனது உண்மையே.. அதே சமயம், இது எதேச்சையாக நடந்தாலும், எதிர்தரப்பு இதையும் விமர்சிக்கவே செய்கிறது.
தொடர் தொற்று எண்ணிக்கை உயர்வு, சர்ச்சைகள், ரேபிட் டெஸ்ட் விலை, என எல்லாமும் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செம டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது... அதனால், ஒரு சில மாற்றங்கள் ஏதாவது அமைச்சரவையில் செய்யலாமா என்றுகூட யோசித்து வருகிறாராம்.. ஆனால் எந்த துறை, எந்த அமைச்சர் என்று உறுதியாக தெரியவில்லை.. இப்போதைக்கு கொரோனா பிரச்சனை ஓடிக் கொண்டிருப்பதால் விஜயபாஸ்கருக்கு பதிலாக வேறு யாரையாவது கவனிக்க சொல்லலாமா என்ற யோசனை உள்ளதாம்.
அதேபோல சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷூம் புள்ளி விவரங்களை குளறுபடியாக சொல்லியதாக ஒரு பேச்சு உள்ளது.. மேலும் டெல்லி போய் வந்தவர்கள் என்று பீலா சொல்லி கொண்டே இருந்ததாகவும் இவர் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது.. அதனால், இவருக்கு பதிலாக உமாநாத்தை கொண்டு வரலாமா என்றும் ஆலோசித்து வருகிறார் என கிசுகிசுக்கப்பட்டது.
எப்படி இருந்தாலும், முதல்வர் இந்த 2 மாதம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தினாலும், ட்விட்டரில் வெகுஜன மக்களுடன் எப்போதுமே நெருங்கி இருக்கிறார் எடப்பாடியார்.. முழு நேர ஆய்வில் உள்ளார்.. அதிகாரிகளை கலந்தாலோசிக்கிறார்.. பிரதமரிடம் தமிழகத்துக்கு தேவையான மொத்த கோரிக்கையையும் மீண்டும் மீண்டும் எடுத்து வைத்து வலியுறுத்துகிறார்.. இவ்வளவு கடினமாக உழைத்து மக்கள் நலனில் அக்கறை செலுத்தினாலும் எங்கோ, ஏதாவது ஒரு இடத்தில் பிசிறு தட்டிவிடுகிறது.. இதையும் களைந்துவிடவே தீவிர டிஸ்கஷனில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. அதனால் எப்படியும் ஒரு மாற்றம் தமிழகத்தில் விரைவில் நடக்க போகும் என்றே தெரிகிறது!!