அமெரிக்கா விடுத்த மிரட்டல்.. தூக்கி தூர போட்ட நேரு.. "புரட்சி தலைவருடன்" சந்திப்பு.. 60ல் ஒரு அதிரடி
ஜவஹர்லால் நேரு - பிடல் காஸ்ட்ரோவின் சந்திப்பு குறித்த ஒரு பார்வை
சென்னை: மருந்து தரவில்லையானால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிறது அமெரிக்கா.. அடுத்த சிலமணி நேரங்களில் பணிந்து மருந்து தர ஒப்புக் கொள்கிறது இந்தியா!! அமெரிக்கா - இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் நட்பு என்ன? புரிதல் என்ன? வெளியுறவு கொள்கை என்ன? இவைகள்தான் நம் முன் எழுந்து நிற்கும் கேள்விகள்!
Recommended Video
ஹைட்ராக்சி குளோரோகுயின் - மனித குலத்தையே காக்க வந்த கடவுள் போல கண்ணுக்கு தெரிந்து வருகிறது.. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, இந்த மருந்தை உடனே அனுப்பும்படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார் டிரம்ப்.. அப்படி இந்தியா மருந்தை அனுப்பாவிட்டால் பதிலடி கொடுப்போம் என்றும் ஏகாதிபத்தியத்துக்குரிய தொனியிலேயே மிரட்டலையும் விடுத்தார்.
அடுத்த சிலமணி நேரத்தில் மருந்துகளை அனுப்ப தயாராகிறது இந்தியா.. மனிதநேய அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு மருந்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக காரணம் கூறப்படுகிறது!! சாதாரணமாக மருந்து வேண்டும் என்று கேட்டிருந்தாலே இந்தியா தந்திருக்கும்.. ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து டிரம்பை வரவழைத்து, தடபுடல் விருந்து வைத்து, வழியனுப்பி வைத்ததற்கு நல்ல பரிசை டிரம்ப் அளித்துள்ளார்!
இலக்கணம்
நட்பின் இலக்கணம் மிரட்டல் என்பதையும் அதிபர் தெரியவந்துள்ளார். இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையில் இருப்பது நட்புதானா? இன்னும் அமெரிக்கா மிரட்டுவதிலும், இந்தியா பணிவதிலும்தான் உறவு நீடிக்கிறதா என்பது தெரியவில்லை! ஆனால் பழைய சம்பவம் ஒன்று பலரால் நினைவுகூர்ந்து வரப்பட்டு வருகிறது.. பிளாஷ்பேக்தான்.. ஆனால் இந்த சமயத்தில் அதி முக்கியமானது.. இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியது!
அமெரிக்கா
வல்லரசு அமெரிக்காவை அன்று முதல் இப்போதுவரை எதிர்த்து நிற்கும் குட்டி தீவு கியூபா.. சின்ன நாடுதானே என்று அமெரிக்கா பார்ப்பதே இல்லை.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதை கொட்டி கொண்டே இருக்க.. அதை கியூப மக்களும் துளியும் பயமில்லாமல் எதிர்கொண்டு வருகின்றனர்.. இதற்கெல்லாம் காரணம் அவர்களின் எவர் கிரீன் ஹீரோ ஃபிடல் காஸ்ட்ரோ!!
காஸ்ட்ரோ
1960-ம் ஆண்டு... நியூயார்க் நகரில் ஐநா சபை கூட்டம் நடக்கிறது.. அதில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் ஒவ்வொருவராக வர தொடங்கினர்.. அங்கு கியூபா நாட்டின் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவும் நியூயார்க் வந்து சேர்கிறார்... உலகின் எதிரி அமெரிக்கா என்று அறைகூவல் விடுத்த நிலையில்தான், காஸ்ட்ரோ அங்கே வந்திருந்தார்.. செம கடுப்பில் இருந்தது அமெரிக்கா.. இதை ஒரு பொருட்டாககூட காஸ்ட்ரோ மதிக்கவில்லை!!
ரூம் இல்லை
நியூயார்க் மிட்டவுன்- பகுதியில் ஷெல்பர்ன் என்ற 5 ஸ்டார் ஓட்டலில் தங்கினார்.. ஆனாலும் ஹோட்டலில் பல தொல்லைகள் காஸ்ட்ரோவுக்கு தரப்பட்டன.. ஓவர் குடைச்சலால் அந்த ஹோட்டலை காலி செய்ய முடிவு செய்தார்... ஆனால் வேறு ஹோட்டலுக்கு போகலாம் என்றால் யாரும் காஸ்ட்ரோவுக்கு ரூம் தரவில்லை.. இடமில்லை என்று சாக்கு சொல்லி மறுக்கிறார்கள்.
தெரசா ஹோட்டல்
உடனே ஐநா அதிகாரிகளை சந்தித்தார் காஸ்ட்ரோ.. "எனக்கு இங்கே இடம் தர மறுக்கிறார்கள்.. அதனால் ஐநா அலுவலக வளாகத்தில் கொட்டகை போட்டு தங்க போகிறேன்" என்றார். இதை கேட்டு ஆடிப்போயிவிட்டனர் அதிகாரிகள்... பிறகு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒரு சிலர் உதவியால் தெரசா என்ற பழைய ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.
விருந்து
தெரசா ஓட்டல் ஓனருக்கு காஸ்ட்ரோ மீது ஒரு தனி மரியாதை.. அவரது பாசத்துக்கு கட்டுப்பட்டு அந்த ஹோட்டலில் தங்க சம்மதிக்கிறார் காஸ்ட்ரோ.. அப்போது உலக தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் மதிய விருந்து வைத்தார்.. காஸ்ட்ரோவை சாப்பிட கூப்பிடவில்லை.. எனினும் இதை ஒரு அவமானமாக காஸ்ட்ரோ கருதவேயில்லை.
பிரதமர் நேரு
ஆனால் தான் தங்கியிருந்த ஓட்டலில் ஊழியர்களுக்கு காஸ்ட்ரோ தேனீர் விருந்து அளித்தார்.. இவர் இப்படி இப்படி ஒரு விருந்து நடத்தி கொண்டிருப்பது அச்சமயம் உலக தலைவர்களுக்கு தெரியாமல் இல்லை.. தெரிந்தும்கூட அந்த விருந்து நடக்கும் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.. காரணம் தேவையில்லாமல் அமெரிக்காவை பகைத்து கொள்ள வேண்டியிருக்கும் என்ற பயம்தான்! அப்போதுதான் திடீரென காஸ்ட்ரோ தங்கியிருக்கும் ஹோட்டலுக்குள் பிரதமர் நேரு நுழைந்தார்..
சம்பவம்
இப்படி திடுதிப்பென்று ரூமுக்குள் நேரு நுழைவார் என்று காஸ்ட்ரோ எதிர்பார்க்கவே இல்லை.. காஸ்ட்ரோ பதறினார்.. அந்த பதட்டத்தை நேரு புரிந்து கொண்டு அவரை அரவணைத்து பேச ஆரம்பித்தார்.. நேரு - காஸ்ட்ரோவின் நெருக்கம் அந்த நொடியில் இருந்தே நிகழ்ந்தது என்று சொல்லலாம். காரணம், இந்த சம்பவத்தை காஸ்ட்ரோ மறக்காமல் அடிக்கடி பின்னாளில் சொல்லி கொண்டே இருந்தார்.
பதறிவிட்டேன்
"எனக்கு அப்போ 34 வயசுதான்.. என்னை உலகளவில் அவ்வளவாக யாருக்கும் தெரியாது.. திடீரென பிரகாசமான, ஆஜானுபாகுவான உயரமுடைய நேரு உள்ளே வந்துவிட்டார்.. அவரை பார்த்ததும் நான் பதறிவிட்டேன்.. பொதுவாக தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டால் எப்படி நடந்து கொள்வது என்ற சம்பிரதாயங்கள் என்னவென்று கூட எனக்கு தெரியாது.
பாராட்டினார்
அமெரிக்காவின் எதிர்ப்பு வேறு.. அப்படி இருக்கும் போது என்னை யாரும் சந்திக்க முன்வராத சூழ்நிலையில் நேரு போன்ற மாபெரும் தலைவர் வந்து சந்தித்தது எனக்கு ஒரு வித பதற்றத்தை தந்துவிட்டது.. ஆனால் என்னை பற்றி உணர்ந்து கொண்டவர் நேரு... நான் அடைந்த இலக்கை பற்றி உயர்வாக சொல்லி என்னை உற்சாகமூட்டினார்.. பெருமைப்படுத்தி பேசினார்.. அதுக்கப்புறம்தான் எனக்கு பதற்றம் கொஞ்சம் தணிந்தது.. சர்வதேச அளவில் என்னை கௌரவபடுத்திய தலைவர் நேரு! என்னை பற்றி வெகுவாக பாராட்டி பேசியதை மறக்கவே முடியாது" என்கிறார்.
கியூபா உறவு
கியூபா மீது இந்தியாவுக்கு ஒரு பிடித்தம் இப்போதும் இருக்க இதுதான் காரணமாக இருக்கக்கூடும்.. அமெரிக்காவின் நேர் எதிரி நாடு என்று தெரிந்தும் பல இந்தியத் தலைவர்கள் கியூபாவுடன் உறவு வைத்திருந்ததும் வரலாற்று உண்மை! அதனால்தான் எத்தனையோ பொருளாதார தடைகளை அமெரிக்கா கியூபா மீது திணித்தாலும் இந்தியா ஓடோடி சென்று தன் உதவிக்கரத்தை மறக்காமல் நீட்டும்! இந்த நன்றியை கியூபா இப்போதுவரை மறக்கவில்லை!
கேள்விகள்
ஆனால் இப்போது ஒரு வல்லரசு மிரட்டுவதையும், அதற்கு இந்தியா பணிவதையும் கியூபா மட்டுமல்ல, உலக நாடுகள்கூட ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள்.. இத்துனூண்டு கியூபா இன்றைக்கு வரைக்கும் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும்போது, ஜனநாயக நாடான இந்தியா மிரளுவது ஏனோ? என்ற கேள்வியும் எழுந்தபடியே உள்ளது.. உண்மையை சொல்ல போனால் பயந்து நடுங்கும் அளவுக்கு டிரம்ப் எல்லாம் ஒரு ஆளே கிடையாது என்றே சொல்லலாம்.
வல்லரசு
ஒரு தலைமை பண்பு என்பது அமெரிக்காவின் அதிகாரத்திற்கு அடிபணியாது... அதேசமயம் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதுதான்.. அதைதான் அன்று நேரு சரியாக செய்தார்.. இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் நாமாக முன் வந்து உதவி செய்வது வேறு.. மிரட்டி அடிபணிய வைப்பது வேறு!! செல்வசெழிப்பில் புரண்ட நேருதான், அதிக காலங்கள் ஜெயிலில் இருந்த தலைவரும்கூட.. விடாத போராட்டம் குணம், தியாகம், மதச்சார்பில்லாமல் வாழ்ந்த நேருவால்தான் அன்றைய அமெரிக்காவின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் இருக்க முடிந்தது... வல்லரசுக்கு தண்ணி காட்டவும் முடிந்தது!!