போனது 1130 பேர்.. 515 பேர் இங்கே.. மத்தவங்க டெல்லியில்.. தப்பா பிரச்சாரம் பண்ணாதீங்க.. ஜவாஹிருல்லா!
தமிழக அரசு மீது ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டி உள்ளார்
சென்னை: சென்றவர்கள் 1130 பேர்தான்.. 515 பேர் தமிழகத்தில் உள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் டெல்லி அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ளனர். அதனால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். கொரோனா நோய் தப்லிக் சகோதரர்களால் மட்டுமே பரப்பப்படுகிறது என்ற ஒரு பிம்பம் வகுப்புவாத அரசியலை முதலீடாக கொண்டு செயல்படக்கூடியவர்களால் பரப்பப்படுகிறது. பாசிச சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கிறது" என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனாவைரஸ் தொற்று பரவலுக்கு முஸ்லிம்களை குற்றம் சாட்டுவதா? என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தார்.
கொரோனாவை எதிர்த்து எல்லாரும் வேறுபாடுகளை களைந்து போராடி கொண்டும், ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்து கொண்டும் வரும் நேரத்தில், இப்படி சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து வெறுப்பு பரப்புரை தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இப்போது இது குறித்து விளக்கமாக வீடியோவும் வெளியிட்டுள்ளார்.. அதில் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்து அவர் பேசியதாவது:
எண்ணிக்கை
"தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்குகொண்ட 1130 பேரில் 515 பேரை அடையாளம் கண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்.. மேலும் அந்த மாநாட்டில் 1500 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். இந்த 1500 பேர் என்ற எண்ணிக்கையை எந்த அடிப்படையில் தமிழக அரசு சொல்கிறது?
என்ன கணக்கு?
எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் 1500 பேர் பங்குகொண்டார்கள் என்று ஒரு அரசு செயலாளர் சொல்வது முறையானதா? தமிழகத்தில் 515 பேரை எப்படி அடையாளம் கண்டார்கள்? எனக்கு தெரிந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிர்வாகத்திலும், அதேபோல திண்டுக்கல்லில் உள்ள தலைமை அலுவலகத்தில் டெல்லி சென்றவர்களுடைய முழுமையான பட்டியலை தமிழக அரசு பெற்றிருக்கிறது.
வகுப்புவாத அரசியல்
சுமார் 500 பேர் டெல்லியிலேயே டெல்லி அரசாங்கத்தின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தி இருக்கிறார்கள்.. ஒரு தேவையில்லாத பதட்டத்தை பீதியை தமிழக அரசு நேற்றைய அறிவிப்பின் மூலமாக செய்திருக்கிறது.. இதற்கு பகிரங்கமாக தமிழக அரசு மன்னிப்புகேட்க வேண்டும்.. நோய்க்கு மதம் தெரியாது, நாடு, தெரியாது, மாவட்டம் தெரியாது, ஆனால் திட்டமிட்டு கொரோனா நோய் தப்லிக் சகோதரர்களால் மட்டுமே பரபரப்படுகிறது என்ற ஒரு பிம்பம் வகுப்புவாத அரசியலை முதலீடாக கொண்டு செயல்படக்கூடியவர்களால் பரப்பப்படுகிறது .. அதை சில ஊடகத்துறையை சேர்ந்தவர்களும் சேர்த்து பரப்புவது மிகவும் வருத்தத்துக்குரியது..
பழி போடக்கூடாது
உலகம் முழுவதும் கொரோனா அரசர் முதல் ஆண்டி வரை அனைவரையும் பீடித்து வருகிறது. மத, கட்சி, கொள்கை, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் இந்த கொள்ளை நோயை எதிர்த்து அனைவரும் களத்தில் நின்று அரசுக்கு கட்டுப்பட்டு மக்களுக்கு உதவி செய்யக்கூடிய இந்த நேரத்தில் தப்லிக் சகோதரர்களை, முஸ்லிம் சமூகத்தை பழி போடக்கூடிய வகையிலே தமிழக அரசு செயலாளர் இப்படியான ஒரு அறிவிப்பை 515 பேரை அடையாளம் கண்டிருக்கிறோம், மற்றவர்களை நாங்கள் அடையாளம் காண முடியவில்லை என்று சொல்வது பாசிச சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கிறது... இதற்காக தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
பீதி வேண்டாம்
சென்றவர்கள் 1130 பேர்தான்.. 515 பேர் தமிழகத்தில் உள்ளனர்.. எஞ்சியிருப்பவர்கள் டெல்லி அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ளனர். எனவே மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.. அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தி கொள்ளாத தவ் சகோதரர்கள் யாராவது இருப்பார்களேயானால் அவர்கள் உடனடியாக தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இதுதான் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும், ஏன், மனித குலம் முழுவதற்கும் நீங்கள் செய்யக்கூடிய பணியாகும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.