லாக் டவுன்.. வீடு இருக்கிறவங்க உள்ளேயே இருப்பாங்க.. இல்லாதவங்க எங்கே போவாங்க? கஸ்தூரி பொளேர் கேள்வி
மோடி அறிவிப்புக்கு நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: 21 நாட்கள் நாட்டை இழுத்து மூடுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது சரி.. அப்படியானால் அத்தியாவசிய சேவைகள் எப்படி நடைபெறும் என்று நடிகை கஸ்தூரி கேள்வி கேட்டுள்ளார். வீடு இருப்பவர்கள் வீட்டிலேயே தங்கி கொள்வார்கள்? ஆனால் வீடில்லாதவர்கள் எங்கே போவார்கள் என்றும் பிரதமருக்கு கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாகப் பேசினார். அப்படிப் பேசும்போது கொரோனாவைரஸ் பரவல் எதிர்பார்த்ததை விட அதி வேகமாக இருக்கிறது. மக்களைக் காக்க ஒரே வழி 21 நாட்கள் நாட்டை மொத்தமாக மூடுவதுதான் என்று சொன்னார்.
சொன்னபடியே நேற்று நள்ளிரவிலிருந்து நாட்டை மொத்தமாக லாக் டவுன் செய்து விட்டார்கள். போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாராவது வெளியே வந்தால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வீடு இல்லாதவர்கள்?
இந்த நிலையில் நடிகை கஸ்தூரிக்கு ஒரு டவுட் வந்துள்ளது. அதாவது நாட்டை இப்படி 21 நாட்களுக்கு மூடிப் போட்டு விட்டால் பல விஷயங்களுக்கு எங்கே போவார்கள் மக்கள் என்பதுதான் அவரது கேள்வி. இதை ஒரு பட்டியலாகவே அவர் வெளியிட்டுள்ளார். அதில், "21 நாட்களுக்கு எமர்ஜென்சி!! அத்தியாவசியப் பொருட்கள் சேவை பாதிக்காது என்று பிரதமர் கூறியுள்ளார். உணவு சப்ளையும் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
கேள்விகள்
ஆனால் எப்படி என்று சொல்லவில்லையே. யாருமே வெளியே வராவிட்டால் குடிநீர் சப்ளை என்னாகும், சமையல் கேஸ் என்னாகும், கழிவு மேலாண்மை எப்படி நடக்கும் என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டுள்ளார் கஸ்தூரி. அதுமட்டுமல்ல.. வீடு இருப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறோம்.. வீடில்லாதவர்கள்? ஹோட்டல்களில் தங்கியிருக்கும் விருந்தினர்கள் நிலை? அவர்களும் ரூம்களிலேயே தங்க வேண்டுமா?
இயங்காது
அவர்களுக்கு எப்படி சாப்பாடு, உள்ளிட்டவை வழங்கப்படும்? பராமரிக்கப்படும்? ராணுவ அவசரநிலை ஏற்பட்டால் என்ன ஆகும்?" என்று விரிவான கேள்வியை எழுப்பி உள்ளார். ஆனால் இதில் கஸ்தூரியின் கேள்விக்கு அரசே நேற்று விரிவான ஒரு பதிலை கொடுத்துள்ளது. அதாவது மத்திய உள்துறை அமைச்சகம் எதெல்லாம் இயங்கும், எப்படி இயங்கும், எது இயங்காது என்று விரிவாக அறிக்கை வெளியிட்டு விட்டது.
கும்பல்
அதன்படி சிறு மளிகைக் கடைகள் இருக்கும், பால் வியாபாரம் செய்யலாம். பேப்பர் போடலாம். கேஸ் விநியோகம் வழக்கம் போல நடைபெறும் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே அத்தியாவசிய பொருட்கள் சேவை நிச்சயம் பாதிக்கப்படாது என்றே நம்பப்படுகிறது. அதை விட முக்கியமாக மக்கள் தேவையில்லாமல் கும்பலாக வெளியில் நடமாடுவதை அடியோடு குறைக்கவே இந்த லாக்டவுன் என்று அரசு விளக்கியுள்ளது.
|
கஸ்தூரி கேட்ட கேள்வி
அப்படிப் பார்க்கும்போது குறிப்பிட்ட அளவிலான நடமாட்டத்தை அரசே அனுமதித்துள்ளது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அது கூட அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே. அதேபோல மருத்துவமனைகள், மெடிக்கல் ஷாப் போன்றவை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் வங்கிகள் கூட இயங்கும் என்றும் அறிவித்துள்ளனர். எனவே கஸ்தூரி பயப்படுவது போல எதுவும் நடக்காது என்றே நம்பலாம். அதேசமயம், சாமானிய மக்கள், ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அது மட்டும் உண்மை. வீடில்லாதவர்கள் நிலை? என்று கஸ்தூரி கேட்ட இந்த ஒத்தை கேள்விக்கு யாராலுமே பதில் சொல்ல முடியாது!