கொரோனா... நெருக்கடியை இப்படியும் சமாளிக்கலாம்.. விவி குடும்பத்தாரின் பாசிட்டிவ் அப்ரோச்!
சென்னை: கொரோனா வைரஸ் நோய் பற்றிய அச்சத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை நாடுமுழுவதும் பலருக்கும் வேலையிழப்பு, அதனால் பொருளாதார நெருக்கடி, சொந்த பந்தங்களைப் பற்றிய உண்மையான பாசத்தை உணர வைத்தது, வாழ்க்கையில் இனி எத்தகைய பிரச்சினை வந்தாலும் சமாளித்து விட முடியும் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும் என்ற பாசிட்டிவ் எண்ணங்களை பலருக்கும் உருவாக்கியுள்ளது.
இந்த நெருக்கடியான கால கட்டத்தில் வேலையில்லாமல் சம்பளமும் இல்லாமல் சந்தோஷமாக குடும்பத்தை எப்படி நடத்த முடியும் என்று உணர்த்தியுள்ளனர் விஜயகுமார் குடும்பத்தினர். 2020 ஆம் ஆண்டு பிறந்த போது நன்றாகத்தான் இருந்தது. கொரோனா என்ற கொள்ளை நோய் வரும் என்றெல்லாம் தெரியாது வழக்கம் போல தனது வேலைக்கு போய்க்கொண்டிருந்தார் விஜயகுமார்.
கோவையில் உள்ள தீம் பார்க்கில் பொறியாளராக வேலை செய்யும் விஜயகுமாருக்கு மனைவி, இரண்டு மகள்கள். ப்ளஸ் 2 முடித்து விட்டு கல்லூரிக்கு போக தயாராக இருக்கும் மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டுமே என்ற ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் முதல் தலைமுறை பட்டதாரி ஸ்காலர்ஷிப் கிடைக்க வேண்டுமே என்ற ஏக்கமும் இல்லாமல் இல்லை.
பொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க
கொரோனா லாக் டவுன்
இல்லத்தரசி வனிதாவிற்கு தையல் வேலை குடும்பத்தின் சின்னச் சின்ன செலவுகளை சமாளிக்க வருமானம் வருகிறது. இளைய மகள் ஒன்பதாவது படிப்பிற்குள் அடியெடுத்து வைக்க டேர்ம் பீஸ் கட்ட வேண்டுமே சீட்டு போட்ட பணம் மே மாதம் கைக்கு வருமா என்ற கேள்வியும் மனதோரத்தில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். மார்ச் மாத இறுதியில் அப்படி ஒரு பிரச்சினை வரும் என்று யாருமே நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
சம்பளம் கிடைக்குமா
கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரின் வாழ்க்கையும் புரட்டி போட்டு விட்டது. நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், தீம் பார்க்குகள் மூடப்படவே தினசரியும் சுறுசுறுப்பாக வேலைக்கு போய்க்கொண்டிருந்த விஜயகுமாருக்கு ரெஸ்ட் எடுப்பது மட்டுமே வேலையாகி போனது. மார்ச் மாதம் 24 நாட்கள் மட்டுமே வேலை செய்திருக்கிறோம் சம்பளம் கிடைக்க வேண்டுமே என்ற கேள்வி எழாமல் இல்லை. அரிசி 2 மூடை இருக்கு சமாளிக்கலாம் வாங்கிப் போட்ட சாமான்கள் 2 மாதத்திற்கு வரும் கவலையில்லை என்று மனைவியிடம் இருந்து ஆறுதல் வார்த்தைகள் கிடைத்தன.
கை கொடுத்த யுடூயூப்
வேலை இல்லாவிட்டாலும் தொடர்ந்து ஓய்வெடுக்காமல் யூடுயூப் பார்த்து புதிது புதிதாக சமைக்கவும், மனைவியின் தையல் தொழிலுக்கு டிசைன்களை உருவாக்கித்தரவும் கற்றுக்கொண்டது கை கொடுத்தது. ஏப்ரல் முடிந்தது சம்பளம் பாதி கூட வரவில்லை. வீட்டு செலவுக்கு என்ன செய்வது என்று யோசித்து மனைவியின் தையல் வேலையை முழு நேர தொழிலாக மாற்றினார். அது கொஞ்சம் கை கொடுத்தது. டிசைன் டிசைனாக ஆடை வடிவமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தனர் தம்பதியர்.
கை கொடுத்த சுய தொழில்
லாக் டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வடைய சின்னதாக கடைகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் தீம் பார்க் எப்போது திறக்கும், அப்படியே திறந்தாலும் வழக்கம் போல மக்கள் கூட்டம் வருமா என்று தெரியாத சூழ்நிலை. எப்போதோ கற்றுக்கொண்ட அரிசி வடகம், ஜவ்வரிசி வடகம் போடுவதை நம்முடைய சுய தொழிலாக மாற்றினால் என்று யோசித்து இருக்கும் இடத்தில் குடும்பத்தோடு வடகம் போட ஆரம்பித்து விட்டார் விஜயகுமார். படிக்கும் போதே படிப்படியாக கற்றுக்கொண்ட பல வேலைகள் இப்போது கை கொடுக்கிறது.
எலக்ட்ரிகல் முதல் கார்பெண்டர் வரை
படித்தது எலட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் என்றாலும் பிளம்பிங், கார்பெண்டர் வேலை என எதையும் விட்டு வைப்பதில்லை. சின்னச் சின்ன வேலைகள் பக்கத்தில் கூப்பிட்டாலும் போய் உடனடியாக செய்து கொடுத்து பலரின் மனதில் இடம் பிடித்தார். மாத சம்பளம் வரவில்லையே என்று மனம் இடிந்து போய் விடவில்லை. நம்மை விட எத்தனையோ பேர் கஷ்டப்படுகின்றனர் நமக்கு கடவுளின் கருணை இந்த அளவிற்கு இருக்கிறதே என்ற பாசிட்டிவ் எண்ணம்தான் விவி எனப்படும் வனிதா விஜயகுமார் குடும்பத்தினரை சந்தோஷமாக வைத்திருக்கிறது.
நேர்மறை எண்ணங்கள் தேவை
நெருக்கடியான கால கட்டத்தில் இடிந்து போய் இனி எல்லாமே அவ்வளவுதானா என்று நினைக்காமல் அடுத்த வேலை என்ன பார்க்கலாம், நெருக்கடியை எப்படி சமாளிக்கலாம் என்று ஒரு பக்கம் யோசித்தாலும் சந்தோஷத்தோடும் நேர்மறை எண்ணங்களோடும் கொரோனா லாக் டவுன் நெருக்கடி காலத்தை எதிர்கொண்டிருக்கின்றனர் வனிதா விஜயகுமார் குடும்பத்தினர். இது பலருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.