சமூக விலகலை கடைபிடிக்காவிட்டால் ரூ100 அபராதம்-14 நாட்கள் தனிமைப்படுத்துதல்- சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: கொரோனா பரவுவதைத் தடுக்க தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ100 அபராதம் விதிக்கப்படும் என்றும் 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் திடீரென கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் மொத்தம் 906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.
அதில், சென்னை மாநகரத்தில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ100 அபராதம் விதிக்கப்படும்; மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்கள், வேன்கள் என அனைத்து இடங்களிலும் தனிநபர் இடைவெளியை கடைபிடித்தாக வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
மேலும் இறைச்சி, மீன்கடைகள், காய்கறி சந்தைகளிலும் தனிநபர் இடைவெளி கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் கூடும் இடங்களில் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது.