கொரோனா லாக்டவுன்: வரலாறு காணாத உச்சம்- 1 கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ. 1,000
சென்னை: கொரோனாவை தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் 1 கிலோ ஆட்டிறைச்சியின் விலை ரூ1,000 ஐ எட்டியுள்ளது பொதுமக்களை கடும் அதிர்ச்சியடையவைத்துள்ளளது. ஆனாலும் ஆட்டிறைச்சி கடைகளில் லாக்டவுனை மீறி கூட்டம் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
Recommended Video
கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. லாக்டவுனின் போது மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் திறந்திருக்கலாம் என நேரக் கட்டுப்பாடுடன் அறிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்புகள்: இனவெறி அவதூறுகளால் தாய்நிலம் திரும்பும் வடகிழக்கு மாநில மக்கள்!
இன்று இறைச்சி கடைகள் திறப்பு
ஆனாலும் மளிகைக் கடைகளில் இருக்கிற கூட்டம் இறைச்சி கடைகளில் இல்லை. இதனால் பல இடங்களில் வார நாட்களில் இறைச்சி கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே இறைச்சி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வட்டங்களும் போடப்பட்டிருந்தன.
ஆட்டிறைச்சி ரூ. 1,000
இறைச்சி கடைகளில் விலையை கேட்டவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. 1 கிலோ ஆட்டிறைச்சியின் விலை ரூ800 முதல் ரூ950 வரை விற்கப்பட்டது. இப்படி 1 கிலோ ஆட்டிறைச்சியின் விலை ரூ1,000ஐ எட்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைவது ஒருபக்கம்.. ஆனாலும் இந்த கடைகளில்தான் கூட்டம் அலைமோதி கொண்டும் இருக்கிறது.
கோழி கறி விலையும் உயர்வு
கடந்த சில வாரங்களாக கோழி கறி விலை படுவீழ்ச்சி அடைந்தது. 1 கிலோ கோழி கறி ரூ20, 50 என்கிற ரேஞ்சில்தான் விற்பனையாகி இருந்தது. இதற்கு காரணமே கோழி கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என்கிற வதந்திதான். தற்போது கொரோனாவுக்கும் கோழி கறிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்ததால் கோழி கறி விலையும் அதிகரித்துவிட்டது. 1 கிலோ கோழி கறி விலை ரூ200 வரை விற்கப்பட்டு வருகிறது.
மீன் விலையும் அதிகரிப்பு
இதேபோல் லாக்டவுனால் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சந்தைகளில் மீன்வரத்து இல்லை. தற்போது மீன்விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மீன் விலை சராசரியாக ரூ200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்று இறைச்சி கடைகளில் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் லாக்டவுன் நடைமுறையில் இருப்பது போலவே தெரியவில்லை. போலீசாருக்கும் இதை கையாள்வது எப்படி என தெரியாமல் விழிபிதுங்கினர்.