கொரோனா புண்ணியத்தால் உயிர்பெற்ற தாயம்.. திசையெங்கும் "ஈறஞ்சி மூணு தாயம் ஈராறு"
சென்னை: கொரோனா தொற்று நோயால் அமலில் இருக்கும் லாக்டவுன்தான் நகரமயமாக்கல் எனும் சுனாமியில் சிக்கி சிதைந்த பழந்தமிழர் விளையாட்டுகளுக்கு உயிர்ப்பை கொடுத்து வருகிறது.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க லாக்டவுன் நாடு முழுவதும் 3-வது வாரமாக அமலில் இருந்து வருகிறது. பொதுவாக லாக்டவுன் காலத்தில் பெரும்பாலானோர் வீடுகளில்தான் முடங்கி உள்ளனர்.
ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வேறுவழியே இல்லாமல் வீடியோ மற்றும் செல்போன் கேம்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். இது மிகப் பெரும் அபாயம் என்பதை உணர்ந்த பெற்றோர்கள் பழந்தமிழர் விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி வருகின்றனர்.
தமிழர் விளையாட்டுகள்
பொதுவாக வீடுகளுக்குள் இருந்து விளையாடக் கூடிய விளையாட்டுகளான தாயம், சொட்டாங்கல் அல்லது பாண்டி கல், பல்லாங்குழி போன்றவைகளை கொரோனா உயிர்ப்பித்துக் கொடுத்திருக்கிறது. அதுவும் தாயம் விளையாட்டுதான் திரும்பிய திசையெங்கும்.
தாயம் விளையாட்டு
யாரை கேட்டாலும் எப்படி பொழுது போகிறது எனில் குடும்பமே தாயம் விளையாட்டில் கும்மியடிக்கிறோம் என குதூகலமாக சொல்கின்றனர். தாயம் என்பது விளையாட்டு மட்டுமல்ல. கணித அறிவை மேம்படுத்தக் கூடியது. கொஞ்சம் யோசித்து பார்த்தால் அடிப்படை கணித அறிவு என்பது தாயம் விளையாட்டுக்கு அடிப்படை.
தாயம் அறிவு
அதுவும் ஈரஞ்சி, மூவாறு, ரெண்டு பண்ணிரெண்டு என்றெல்லாம் புள்ளிகள் விழும்போது இதை மனதில் வைத்துக் கொண்டு கட்டங்களை சட்டென நகர்த்துவதற்கு கணித அடிப்படை அறிவு தேவை. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக வீடு தோறும் தாயம் இருந்திருக்கிறது எனில் ஆதி தமிழரின் பரந்த அறிவை எண்ணிப் பார்க்கையில் வியப்பாகவே இருக்கிறது.
மீம்ஸ்களில் தாயம்
இன்றைய லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் மட்டுமல்ல ஒர்க் ப்ரம் ஹோம் என சொல்லும் ஐடி நபர்களும்கூட தாயத்தில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதை விளக்கும் மீம்ஸ்களும் கூட சமூக வலைதளத்தில் ஆக்கிரமித்து நிற்கின்றன. தொலைபேசியில் மேனேஜர் வந்தால் மெய்மறந்த நிலையில் "ஈறஞ்சி மூணு தாயம் ஈராறு" என உளறிவைக்கிறார்கள் என்கிற ரேஞ்சுக்கு இந்த மீம்ஸ்கள் இருக்கின்றன.