கொரோனா லாக்டவுன்: கட்சியினர் நிவாரணம் வழங்க தமிழக அரசு தடை- ஸ்டாலின், வைகோ கண்டனம்
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த அமலில் உள்ள லாக்டவுனால் பாதிக்கப்படுவோருக்கு அரசியல் கட்சியினர் நிவாரணம் வழங்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசின் இந்த தடைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் தர தடை விதிக்கப்பட்டுள்ளது. சமைத்த உணவுகள், நிவாரணப் பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது.
நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம் தரலாம். மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் நிவாரண பொருட்களை அளிக்கலாம். சில நபர்கள், அரசியல் கட்சிகள், கட்சியினர் நேரடியாக பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயலாகும். அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாகக் கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
இதயமே வெடிக்கிறது
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோ வெளியிட்ட அறிக்கையில், நூறாண்டு காலத்தில் மக்கள் இதுவரை சந்தித்த கொள்ளை நோய்களுக்கு எல்லாம் உச்சகட்டமாக, கோவிட்-19 கொரோனா நாசகார நோய் மனித உயிர்களை உலகெங்கும் பலிவாங்கி வருகிறது. இதைத் தடுப்பதற்கோ, முழுமையாக குணப்படுத்துவதற்கோ உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோடானு கோடி மக்கள் விவரிக்க முடியாத துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று பரிதவித்து நிற்பதை எண்ணினால் இதயமே வெடிக்கிறது.
முறையாக நிவாரணம்
இந்நிலையில், அரசாங்கம் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் மூன்று அடி தூரத்திற்கு அப்பால் தள்ளி நிற்க வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்கிறது. ஒரு சிலர் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். ஆனால் அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மனிதநேயம் உள்ளோர் பிறர் துன்பத்தில் பங்கெடுக்க விளைவோர் ஆங்காங்கு முறையாகப் பொருட்களையும், உணவையும் வழங்கி வருகின்றனர்.
முறையாக நிவாரணம்
இந்நிலையில், அரசாங்கம் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் மூன்று அடி தூரத்திற்கு அப்பால் தள்ளி நிற்க வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்கிறது. ஒரு சிலர் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். ஆனால் அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மனிதநேயம் உள்ளோர் பிறர் துன்பத்தில் பங்கெடுக்க விளைவோர் ஆங்காங்கு முறையாகப் பொருட்களையும், உணவையும் வழங்கி வருகின்றனர்.
அக்கிரம அறிவிப்பு
இப்படி வழங்குவதில் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமலேயே மனிதாபிமான உதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையைத்தான் அவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய உதவிகள் செய்வோரைக் கண்டு மகிழ்ந்து பாராட்ட வேண்டிய தமிழக அரசு, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும், மற்றவர்களும் இந்த மனிதநேயப் பணிகளைச் செய்து, மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறதே என்ற பொறாமைத் தீ உள்ளத்தில் எழுந்ததால், இன்று ஒரு அக்கிரமமான அறிவிப்பை தமிழக அரசு செய்திருக்கிறது.
மக்கள் பயனடைகின்றனர்
தனிப்பட்டவர்களோ, தனிப்பட்ட அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொருளோ, பணமோ, உணவோ கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுப்பதாக இருந்தால் தமிழக அரசிடம்தான் தர வேண்டும் என்று இடிஅமீன் கட்டளையைப் பிறப்பித்து இருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். பொதுமக்களுக்கு கொரோனா உதவிகளை பிறர் செய்த இடத்தில் எங்காவது ஒரு பிரச்சினை ஏற்பட்டதா? குழப்பம் ஏற்பட்டதா? தள்ளுமுள்ளு ஏற்பட்டதா? ஒன்றுமே கிடையாது. மிக முறையாக விநியோகிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயன்பெறுகிறார்கள்.
தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்
சந்தைகள், கடைகளில் பொருள்களை மக்கள் விலைக்கு வாங்குகின்ற இடத்தில்தான் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்பு, கோடானு கோடி தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு வைப்பதாகும். மக்கள் பொறுமை ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது. அதனை உணர்ந்து உடனடியாக இன்று பிற்பகலில் வெளியிட்ட அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், மனிதநேயம் உள்ளோர் உணவோ, பொருட்களோ வழங்குகின்ற இடத்தில் மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறையையும், அரசு அதிகாரிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
|
ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
திமுக தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், #Lockdown காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்! இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்! 'கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!' என சாடியுள்ளார்.