மாஸ்க்.. தினசரி உணவு.. நிதி உதவி.. கொளத்தூரில் களமிறங்கிய ஸ்டாலின்.. தொகுதி மக்களுக்கு ஏராளமான உதவி!
சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலையில் இருந்து மக்களுக்கு நிதி உதவிகளையும் மற்ற பல உதவிகளையும் வழங்கினார்.
சென்னை: சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலையில் இருந்து மக்களுக்கு நிதி உதவிகளையும் மற்ற பல உதவிகளையும் வழங்கினார்.
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களே வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே தமிழகம் முழுக்க அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுக்க இப்படி பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு திமுக செயலாளர்கள், தொண்டர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தீவிரமாக உதவி செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலினும் இன்று தன்னுடைய தொகுதியில் மக்களுக்கு உதவினார்.
எப்படி ஏற்பட்டது? சென்னை தனியார் மால் ஊழியருக்கு கொரோனா.. தீவிரமாக நடந்த விசாரணை.. துப்பு துலங்கியது
சோதனை செய்தார்
இன்று தன்னுடைய கொளத்தூர் தொகுதிக்கு சென்று அவர் மக்களை சந்தித்தார். அங்கு சமூக விலகல் எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்தார். காய்கறி கடைகள், அத்தியாவசிய பொருட்கள் உள்ள கடைகளுக்கு சென்று அன்றாட பொருட்களின் விலை என்ன என்று மக்களிடம் கேட்டு அறிந்தார். தினசரி கூலி வேலை பார்க்கும் மக்களிடம் சென்று, அவர்களின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது, எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளது என்று விசாரித்தார்.
வெளி மாநில ஊழியர்கள்
தனது தொகுதியில் முடங்கி இருக்கும் வெளி மாநில ஊழியர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்து உதவினார். அவர்களுக்கு போர்வைகள், பழங்கள், காய்கறிகள் கொடுத்தார். தங்க இடம் இல்லாதவர்களுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். அதேபோல் வீடு இல்லாமல் சாலையில் தங்கி இருக்கும் மக்களுக்கும், குடிசைகளில் இருக்கும் மக்களுக்கும் உணவு மற்றும் போர்வைகளை வழங்கினார்.
ஆட்டோ ஓட்டுனர்கள் நோயாளிகள்
இந்த முடக்கம் காரணமாக சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சென்னையில் தனது தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லோருக்கும் 500 ரூபாய் நிதி உதவியை இன்று ஸ்டாலின் வழங்கினார். மேலும் அவர்களுக்கு தினசரி தேவைகளுக்கான காய்கறி தேவைகளை வழங்கினார். அவர்களின் அன்றாட பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு
அதேபோல் சென்னையில் தூய்மை பணியாளர்கள் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். கடந்த ஏழு நாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு கொளத்தூரில் ஸ்டாலின்தான் உதவி வருகிறார். அவர்களுக்கு ஸ்டாலின் மூலம்தான் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்று தூய்மை பணியாளர்களை சந்தித்த ஸ்டாலின் அவர்களுக்கு மாஸ்க் , கையுறை, புதிய ஆடைகள் கொடுத்து உதவினார்.
போலீசாருக்கும் உதவி
அதோடு சென்னையில் தனது தொகுதியில் இருக்கும் போலீசாரையும் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அவர்களுக்கு பல பைகளில் மாஸ்குகளை வழங்கினார். நீங்கள்தான் அதிகமாக வெளியே உள்ளீர்கள். ஒரே மாஸ்க்கை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது. அதனால் இதை வைத்துக் கொள்ளுங்கள்.உதவி தேவைப்பட்டால் தகவல் தெரிவியுங்கள் என்று கூறினார். அவர்களுக்கு கை கழுவும் கிருமி நாசினிகளை வழங்கினார்.
அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்
தனது தொகுதியில் பல மக்களுக்கு கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும், நிதி உதவிகளையும், தேவையான உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் ஸ்டாலின் வழங்கினார். ஒருவரை ஒருவர் தொடாமல், சமுக விலகலை கடைபிடித்து ஸ்டாலின் இந்த உணவு பொருட்களை வழங்கினார். ஸ்டாலினின் உதவியை அவரின் தொகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள்.