என்ன அது.. ஒயிட் கலரில் புது மாஸ்க்.. ஒரு இனத்தையே நெகிழ வைத்து விட்டாரே பிரதமர் மோடி!
மணிப்பூர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் பிரதமர் மோடி
சென்னை: காலையில் டிவி பார்த்து கொண்டிருந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்று மனதில் எழுந்த சந்தேகம், பிரதமர் மோடி அணிந்திருந்த மாஸ்க் பற்றியதுதான்.. உற்று உற்று கவனிக்க வைத்த அந்த மாஸ்க் பற்றின செய்திதான் இது!
பிரதமர் மோடியை பொறுத்தவரை எந்த மாநிலத்துக்கு செல்கிறாரோ, அம்மாநில மக்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து பெருமை சேர்ப்பது வழக்கம்..
மாமல்லபுரத்திற்கு வந்தபோது, வேட்டி சட்டை துண்டு அணிந்து ஒட்டுமொத்த உலகுக்கும் தமிழர்களின் பாரம்பரிய உடையை கொண்டு சேர்த்தார்... நாகாலாந்தில் ஒரு விழாவில் கலந்துகொள்ள சென்றபோதுகூட, அங்குள்ள நாகா பழங்குடி மக்களின் உடைகளை உடுத்தி, தலைப்பாகை கட்டிக்கொண்டு அந்த விழாவில் பங்கேற்றார்.
மணிப்பூர்
அதுபோலவேதான் மணிப்பூர் மக்கள் மீதும் பிரதமருக்கு ஒரு இனம் புரியாத பாசம் இருக்கும்.. இன்றும் அது நிறையவே வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது.. இன்று நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றினார்... அப்போது வெள்ளை கலர் சால்வையை மாஸ்க்-ஆக அணிந்திருந்தார்.. மக்கள் அனைவரும் இந்த மாஸ்க்கை கவனித்தனர்.. ஆனால் அது என்னவென்று உடனே விளங்கவில்லை.
சாதாரண துணி
சில தினங்களுக்கு முன்பு மக்களிடம் பேசும்போதும், பிரதமர் மோடி சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐயே அணிந்திருந்தார். இதற்கு காரணம், வீட்டில் கிடைக்கும் துணிகளை கொண்டு மாஸ்க் தயாரித்து மக்கள் அணிய வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டிருந்ததுதான். அதற்கு முன்மாதிரியாகத்தான் அவரே இப்படி துணியை மாஸ்க்-ஆக கட்டி கொண்டு காட்சியளித்தார்.
மகிழ்ச்சி
இன்றும் அப்படி ஒரு துணி வடிவிலான மாஸ்க்தான் மோடி அணிந்திருந்தார்.. டிவியில் இதை பார்த்து கொண்டிருந்த மற்ற மாநில மக்களுக்கு அது என்னவென்று தெரிவதற்கு முன்பேயே மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது மணிப்பூர் மக்கள்தான்.. அவர்களது சால்வையைதான் மோடி அணிந்திருந்தார்... அஸ்ஸாம் மக்களின் கமோசா சால்வையை போன்றுதான் இந்த மணிப்பூரி மக்களின் சால்வையும் சிறப்பு வாய்ந்தது.. இதன் பெயர் லெங்யான் சால்வை என்று சொல்வார்கள்.
ட்வீட் பதிவு
பிரதமர் உரையாற்றி முடித்த சில மணி நேரத்தில், மணிப்பூர் முதல்வர் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரிய சால்வையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியதற்கு என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுகள்... இதன் மூலம், வடகிழக்கு மாநிலங்களை குறிப்பாக மணிப்பூரை எந்த அளவுக்கு பிரதமர் நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
பூரிப்பு - மகிழ்ச்சி
மணிப்பூர் முதல்வர் இப்படி சொன்னபிறகுதான் நாட்டு மக்கள் பலருக்கும் இந்த விஷயமே புரிந்தது.. கடந்த மாதம் மணிப்பூர் மக்கள் சஜிபு செய்ராஓபா என்ற திருவிழாவை கொண்டாடினார்கள்.. அதற்குகூட பிரதமர் வாழ்த்து பதிவிடும்போது, "மணிப்பூர் மாநிலம் உயிரோட்டமிக்க கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. மணிப்பூர் மக்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ளனர்" என்று மனசார பாராட்டிய நிலையில், பிரதமரின் இந்த செயல் கூடுதல் பூரிப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. பிரதமரின் ட்விட்டரிலும் ஏற்கனவே இருந்த போட்டோ மாற்றப்பட்டு, இந்த மாஸ்க் அணிந்த போட்டோதான் தற்போது உள்ளது!!!
பாராட்டு
பொதுவாக தேர்தல் சமயங்களில் பெரும்பாலான கட்சி தலைவர்கள், அந்தந்த மாநில டிரஸ், தொப்பிகள், சால்வைகளை அணிந்து அம்மாநில கலாசாரத்தை பிரதிபலிப்பதும், தாங்களும் உங்களில் ஒருவன்தான் என்று காட்டிக் கொள்வதும் இயல்புதான்.. ஆனால் மோடி தேர்தல் சமயங்களில் என்றில்லாமல் வழக்கமாகவே இந்த பழக்கத்தை கையாண்டு வருகிறார்.. இந்தியாவின் வித்தியாசமான கலாச்சாரங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி அந்தந்த மாநில மக்களின் மனசையும் குளிர்வித்து வருகிறார்.. பிரதமரின் இந்த விஷயம் பாராட்ட வேண்டிய ஒன்றே!!