கை கழுவாதீங்க.. மாஸ்க் போடாதீங்க.. இப்படி சொல்கிறாரே இந்த டாக்டர்.. நம்பறதா வேண்டாமா?
கொரோனாவுக்கு மருந்து உள்ளதாக டாக்டர் தணிகாசலம் தெரிவித்துள்ளார்
சென்னை: "கையை கழுவாதீங்க.. மாஸ்க் போடாதீங்க.. அது முழுமையா பலன்தராது.. கொரோனா வைரஸுக்கு மருந்து என்னிடம் உள்ளது.. எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்.. என்னால் குணப்படுத்த முடியும்" என்று சித்த மருத்துவர் தணிகாசலம் தெரிவித்து வருகிறார்.. இதனால் இவருக்கு ஆதரவு பெருகி வந்தாலும், "தயவுசெய்து மருந்து உள்ளதாக சொல்லி மக்களை குழப்ப வேண்டாம்" என்று நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
Recommended Video
சித்த மருத்துவத்தை பொறுத்தவரை நாம் முழுமையாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது.. நம் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, மக்களிடம் அச்சத்தை போக்கி, நிலவேம்பு குடிநீரை பருகுமாறு டிவி, ஊடகங்கள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினார்.. அவர் அப்படி சொல்லியபிறகுதான் சித்த மருந்துகளை பக்கவிளைவின்றி உட்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு வந்தது.. இதனால் லட்சக்கணக்கானோர் பயனடையவே செய்தனர்.
இன்றைய சூழலிலும் சித்த மருத்துவம் கைகொடுத்தாலும் நமக்கு அவ்வளவும் நல்லதுதான்.. ஆனால் தங்களுக்கு ஒரு வாய்ப்பினை அரசு வழங்குவதில்லை என்பதே சித்த மருத்துவர்களின் குறையாக உள்ளது.. அந்த வகையில், கடந்த சில தினங்களாகவே சித்த மருத்துவர் தணிகாச்சலம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளும், வேண்டுகோள்களும் சோஷியல் மீடியாவில் அதிகமாக வலம் வந்துகொண்டிருக்கின்றன.
தணிகாசலம்
இவரது சித்த மருத்துவத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி குவிந்து வருகின்றன. "இந்த நோயிக்கு வாதசுரக் குடிநீர் சிறந்தது, என் மீது கோபத்தை காட்டாமல் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்" என்று தணிகாசலம் வேண்டுகோள் விடுக்கிறார்.. இந்த வாதசுரக் குடிநீர் செய்முறை எப்படி என்பதையும் விளக்கி வீடியோ மூலம் ஆதாரத்துடன் விளக்கி வருகிறார் டாக்டர் தணிகாசலம். தன்னிடம் உள்ள இந்த மூலிகை மருந்து மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தி உள்ளதாகவும், ஆனால் அரசாங்கம் அதனை ஏற்க தயாராக இல்லை என்றும் அரசு மீது குற்றஞ்சாட்டுகிறார்.
சிகிச்சை
"ஒரு மூலிகையின் சாற்றில் இருந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளோம்... எந்த வகையான வைரஸ் காய்ச்சலையும் குணப்படுத்துவதற்கும் நாங்கள் தயாரித்த மூலிகை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்துகள் ஏதும் இல்லை. ஆனால் நாங்கள் தயாரித்த மூலிகை சாறு மருந்து டெங்கு, பல உறுப்பு காய்ச்சல் மற்றும் கடுமையான கல்லீரல் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்று நம்பிக்கையுடன் சொல்லும் டாக்டர் தணிகாசலத்துக்கு ஆதரவுகளும் பெருகியபடியே உள்ளன.
குழப்ப வேணாம்
அதேசமயம், இதற்கு கொந்தளிக்கும் நெட்டிசன்களும் உள்ளனர்.. அமெரிக்கா காரனே அன்டர்வேரை காணோம்னு பயந்துட்டு ஓடும்போது, இந்த மூலிகையை எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்புகிறார்கள். முறையாக சித்த மருத்துவம் படிக்காதவர்கள், Registered medical practitioner ஆக கூட இல்லாதவர்கள், சோஷியல் மீடியாவில் மக்களை குழப்புகிறார்கள் என்றும் இவர் மீது குற்றச்சாட்டு எழுகிறது.. யாரும் கையை கழுவ கூடாது என்கிறார், மாஸ்க் போட தேவை இல்லை என்கிறார் என்றால் எப்படி? உலக சுகாதார மையத்தின் பரிந்துரைகளை எதிர்த்தே இவரது தணிக்காசலத்தின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சான்றுகள்
சிலர் இதை பற்றின சந்தேகங்களையும் எழுப்புகிறார்கள்.. இவர் இதுவரை எத்தனை கொரோனா நோயாளிக்கு மருத்துவம் பார்த்தார்? எந்த மருந்தை கொடுத்து வைத்தியம் பார்த்தார்? தமிழக அரசு & சுகாதாரதுறை அந்த மருந்தினை பற்றின விவரங்களை சொன்னாரா? எத்தனை பேர் இதுவரை கொரோனாவால் குணமடைந்திருக்கிறார்கள்? இவைகளுக்கு சான்றுகளோடு கூற முடியுமா என்றும் விளக்கம் கேட்டு வருகின்றனர். முறையாக சித்த மருத்துவ கவுன்சிலில் ஆதாரத்துடன் நிரூபித்தால் ஒட்டுமொத்த சித்த மருத்துவ துறையும் அரசு மற்றும் சுகாதாரதுறையிடம் இந்த கோரிக்கையை வைத்திருக்கும் என்பதே இவர்களின் கருத்து.
முழு தீர்வு?
எனினும், கொரோனாவுக்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், எல்லா வைரசுமே சித்த மருத்துவத்தில் முழு தீர்வுக்கு வந்துவிடாது என்பதும் உண்மையே.. உலக நாடுகள் தினந்தோறும் செத்து மடியும் ஆயிரக்கணக்கான உயிர்களை கண்டு நடுங்கி கொண்டிருக்கின்றன.. லட்சக்கணக்கான மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.. அந்த வகையில் இந்த சமயத்தில் யார் நமக்கு மருந்து கண்டுபிடித்தாலும் அது வரவேற்புக்குரியதே.. சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கான கண்டுபிடித்துவிட்டதாக சொல்லப்படும் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தவும் தமிழக அரசு தயக்கம் காட்டக்கூடாது.. ஒருவேளை இந்த மருந்துகள் மூலம் மக்கள் பிழைத்துவிட்டால் அது மனிதகுலத்துக்கு மிகப்பெரிய உதவிதான்!
குழப்ப வேணாம்
இப்போதைக்கு நம்முடைய வேண்டுகோள் ஒன்றுதான்.. உலகம் ஒரு ஆபத்தான சூழலில் பயணித்து வருகிறது.. இதுதான் மருந்து என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பு பொதுமக்களை குழப்பிவிடாமல் இருக்க வேண்டும்.. அப்படியே குழப்பும்படியான தகவல்களை யார் தெரிவித்தாலும், அதை சோஷியல் மீடியாவில் பரப்பி விடாமல் உதவாமல் இருப்பதே உடனடி அவசியம்.. மனிதனுக்கு கொடுக்கப்படும் தவறான ஆலோசனை கூட கொலை குற்றத்திற்கு ஈடானதே.. எனவே அறிவியலுக்கு எதிரான விஷயங்களை மட்டுமல்ல... பொதுமக்களின் உயிர் பாதுகாப்புடன் விளையாடும் உரிமையும்கூட யாருக்கும் கிடையாது!!