ஆதங்கத்தோடு சொல்கிறேன்.. வேதனையில் உள்ளேன்.. பேட்டியின் போதே விஜயபாஸ்கர் உருக்கம்.. என்ன சொன்னார்?
சென்னை: ஆதங்கத்தோடு சொல்கிறேன் மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள் அவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இன்றுதான் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12757 ஆக உயர்ந்துள்ளது.
மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி.. காப்பாற்ற சென்ற பெண்ணும் பலியான சோகம்
விஜயபாஸ்கர் பேட்டி
இந்த நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இன்று 12246 பேருக்கு இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. 455356 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் வேண்டாம்
அதனால், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம். தொற்று எண்ணிக்கையைக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். எண்ணிக்கையை பார்த்து அச்சப்பட வேண்டாம். இதில் நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். ஆதங்கத்துடன் தெரிவிக்கிறேன். எண்களை பார்த்து அச்சப்பட வேண்டாம். நாங்கள் 24 மணி நேரம் உழைக்கிறோம்.
இறப்பு விகிதம் அதிகம்
மருத்துவர்கள் உழைப்பதை வந்து பாருங்கள். கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து அரசு போராடி கொண்டிருக்கிறது. நாங்கள் கஷ்டப்பட்டு போராடி வருகிறோம். உலக நாடுகளின் பெருநகரங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது. இது அரசியல் செய்வதற்கான நிலை இல்லை. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் கூட இதனால் மோசமாக திணறி வருகிறது .
கொரோனாவிற்கு மருந்து இல்லை
ஆனால் இந்தியாவில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு மருந்தே இல்லை . ஆனாலும் குணப்படுத்தி வருகிறோம். மருத்துவர்கள் படும் கஷ்டத்தை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள். ஆதங்கத்தோடு சொல்கிறேன் மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள். தங்கள் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களை நீங்கள் கொச்சைப்படுத்த வேண்டாம்.
மூன்று மாத பணிகள்
நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டுதான் நோயாளிகளை குணப்படுத்தி வருகிறோம். உலக நாடுகள் நம்மை பாராட்டுகிறது. மனசாட்சியோடு பேசுங்கள். மருத்துவமனை வசதிகளை அதிகரித்து வருகிறோம். மருத்துவர்களை அதிகப்படுத்தி வருகிறோம். மூன்று மாதமாக வேறு பணிகள் எதையும் செய்யவில்லை. உலக நாடுகள் எல்லாம் திணறுகிறது. எங்கள் உழைப்பை நீங்கள் கொச்சைப்படுத்த வேண்டாம். நீங்கள் பாராட்ட வேண்டாம்.. ஆனால் விமர்சிக்காமல் இருங்கள், என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.