முஸ்தபா, சைமனின் மரணம் கற்று தந்தது போதாதா.. இதென்ன புது பூச்சாண்டி.. மதுரை எம்பி ஆவேசம்
திருப்பூர் போலீஸ் விழிப்புணர்வு வீடியோ குறித்து எம்பி வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "முஸ்தாபா, சைமனின் மரணமும் கற்று தந்தது போதாதா.. இதென்ன பூச்சாண்டி ஆட்டம்.. விதியை மதிக்காமல் ஊர் சுற்றுவோரைத் திருத்த இதுவா வழி? இன்னும் இந்த stigmaக்கு நீர் பாய்ச்சி வளர்க்க நினைக்கின்றதா காவல் துறை?" என்று திருப்பூர் போலீசார் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவினை எம்பி சு.வெங்கடேசன் காட்டமாக விமர்சித்துள்ளார். விழிப்புணர்வை உருவாக்க செய்தி-மக்கள் தொடர்புத்துறை செய்யவேண்டிய வேலையை காவல்துறை ஏன் செய்ய வேண்டும்? என்றும் தமிழக முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
"காப்பாத்துங்கம்மா.. என்னை போட்டு இப்படி சாகடிக்கிறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்.. அம்மா எங்கம்மா இருக்கே..." என்றும் "தாவுடா.. தாவு.. எங்கே தாவறது, நானே தொங்கிட்டு இருக்கேன்..." என்று கொஞ்சம் வடிவேலு டயலாக், கொஞ்சம் மீம்ஸ், கொஞ்சம் டிக்டாக், என எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு விழிப்புணர்வு வீடியோவாக மாற்றி வெளியிடப்பட்டுள்ளது!!
இந்த வீடியோ குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "திருப்பூர் காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரக் குறும்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
ஆம்புலன்ஸ்
ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிகிற நான்கு இளைஞர்களை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றுகிறார்கள். ஆம்புலன்ஸுக்குள் கொரோனா நோயாளி ஒருவர் இருக்கிறார். பதட்டமான இளைஞர்கள் எப்படியாவது அந்த நோயாளியிடமிருந்து தப்பிக்க, படாத பாடுபட்டு ஆம்புலன்ஸை விட்டு வெளிவர முயலுகிறார்கள், கதறுகிறார்கள், ஜன்னல்களுக்குள் புகுந்து வெளிவரப்பார்க்கிறார்கள்.
வியாதி
அப்படி வெளியேறுகிறவர்களைப் பிடித்துப் பிடித்து உள்ளே போடுகிறது காவல்துறை. கடைசியில் காவல்துறை அதிகாரி ஒருவர், "கொரோனா உயிர்கொல்லும் வியாதி என்று கொரோனா நோயாளியைப் பார்த்தவுடன் வருகிற பயம், ஏன் ஊரடங்கின் போது வருவதில்லை? உங்களுக்கு அருகில் இருப்பவர் கொரோனா நோயாளியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலேயே இருங்கள்" என்று நீதிசொல்லி முடிக்கிறார்.
பூச்சாண்டி ஆட்டம்
இதென்ன பூச்சாண்டி ஆட்டம்? விதியை மதிக்காமல் ஊர்சுற்றுவோரைத் திருத்த இதுவா வழி? மதுரை முஸ்தாபாவின் மரணமும் மருத்துவர் சைமனின் மரணமும் கற்றுத்தந்தது போதாதா? இன்னும் இந்த stigmaக்கு நீர் பாய்ச்சி வளர்க்க நினைக்கின்றதா காவல் துறை?
காவல்துறை
பிழையைத் திருத்த வேண்டுமே ஒழிய, பயமுறுத்தல் மூலமாக அதனை வேறொரு பெரும்பிழையாக மாற்றிவிடக் கூடாது. தொழுநோயிலும் காசநோயிலும் நடைபெற்ற சமூக ஒதுக்கலில் எத்தனை பேர் மாய்ந்தார்கள், எத்தனை திருமணங்கள் முறிந்தன, எத்தனை பேர் அனாதையானார்கள் என்பதை வரலாறு அறியாதா? இன்று கொரோனாவில் அதை மறுபடி ஏற்படுத்த முனைகிறதா காவல்துறை? இது, பொதுச்சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவு என்னவாக இருக்கும் என்பது பற்றிய சிறுபுரிதல் கூட இல்லையா?
மருத்துவம்
இன்று தமிழ் மக்களிடையே வைரசை விட வைராலாகிக் கொண்டிருக்கிறது இந்தக் குறும்படம். நோய் பெற்றவர்களையும் தொற்று வந்துவிடுமோ என அச்சத்தில் ஒதுங்கி இருப்பவர்களையும் முதல்நிலைப் போராளியாய் நின்று அனைவருக்கும் மருத்துவம் பார்க்கும் மருத்துவ ஊழியர்களையும் அச்சுறுத்துகிற, கேவலப்படுத்துகிற வீடியோ இது.
விழிப்புணர்வு
மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க செய்தி-மக்கள் தொடர்புத்துறை செய்யவேண்டிய வேலையை காவல்துறை ஏன் செய்ய வேண்டும்? தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு இதுபோன்ற தவறான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டுகிறேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ
வெங்கடேசனின் இந்த பதிவு இருவேறு கருத்துக்களுடன் வலம் வருகிறது.. ஏராளமானோர் இதற்கு ஆதரவும், பலர் விமர்சித்தும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றன... "இது விழிப்புணர்வு வீடியோ தான்,இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள், சீனா வைரஸ் உருவாக்கிய நாட்டையும் எதிர்த்து ஒரு குரல் கொடுக்கலாமே?" என்றும், "காவல்துறை எவ்வளவோ சொல்லியும் திருந்திய பாடில்லையெனில், ஒன்றும் சொல்வதற்கில்லை. சில நேரங்களில் சில நடவடிக்கைகள் அவசியமே.. அடித்துப்பார்த்தார்கள். உறுதிமொழி வாசிக்க வைத்தாயிற்று. விழிப்புணர்வு உரையையும் நிகழ்த்தி பார்த்தாகி விட்டது. இனி என்ன செய்யலாம் தோழர்?" என்றும் எம்பியிடம் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முஸ்தபா
"முஸ்தபா, dr.சைமன் மரணம் இவர்களுக்கு என்ன கற்றுத்தந்தது?. கற்றிருந்தால் ஏன் விதியை மீறுகிறார்கள்? அப்பாவிகளுக்கா பூச்சாண்டி காட்டினார்கள்? அடங்க மறுத்தவர்களுக்குத்தானே. இதுவே சீனாவாக இருந்திருந்தால் இவர்கள் இந்நேரம் சின்னாபின்னமாகி இருப்பார்கள். அது என்ன? கொரானோ மரணத்தில் கூட உங்களுக்கு (மேலே)குறிப்பிட்ட பெயர்கள் தான் ஞாபகத்திற்கு வருமோ?" என்று ட்வீட்டை விமர்சித்துள்ளார்.