ரத்தம் தானம்.. கபசுர குடிநீர்.. உணவு பொருட்கள்.. தேடி தேடி உதவும் நாம் தமிழர் கட்சியினர்.. செம!
சென்னை: ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழகம் முழுக்க நாம் தமிழர் கட்சியினர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். முக்கியமாக பல்வேறு இடங்களில் கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக உதவி வருகிறார்கள். கபசுர குடிநீர் வழங்குவது தொடங்கி தமிழகம் முழுக்க தீவிரமாக நாம் தமிழர் கட்சியினர் உதவி வருகிறார்கள்.
ரத்த தானம்
அந்த வகையில் அரசின் பேரிடர் கால அறிவிப்ப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதிற்காக எழும்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் கட்சியின் உறுப்பினர்கள் இரத்தம் தானம் செய்தனர். 20க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து ரத்த தானம் செய்தனர்.
செங்கல்பட்டு உதவி
மேலும், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியில் கொரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள் நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத் (செய்யூர் தொகுதி துணைத் தலைவர் ) தலைமையில் வழங்கப்பட்டது. ஏழை மக்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து இந்த உதவி செய்யப்பட்டது.
அறந்தாங்கியில் உதவி
அதேபோல், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆமாஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் மணமேல்குடி ஒன்றியம் தினையாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் தகுந்த பாதுக்காப்போடு கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் உதவி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் பி.ஆர்.பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் வெளிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20/04/2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தகுந்த பாதுக்கப்போடு வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.