பெங்களூர் வரை வந்த ஓமிக்ரான்.. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு புதிய ரூல்ஸ்.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: தமிழ்நாடு பள்ளிகளில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக நேற்று இரண்டு பேருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த ஓமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேருமே கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இதையடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவாடிக்கைகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வெளிநாட்டு பயணிகளுக்கு இந்தியாவில் கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 391 பேர் மரணம்
ஓமிக்ரான் கொரோனா
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பரவாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் அரசு மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டிற்குள் இன்னும் பரவவில்லை. இதுவரை எங்கும் கேஸ்கள் பதிவாகவில்லை.
மா. சுப்பிரமணியன்
பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். சென்னை, திருச்சியில் ஒமிக்ரான் உறுதியானதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறு. போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஒமிக்ரான் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் தமிழ்நாடு பள்ளிகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு & நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
முகக்கவசம்
இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
மாணவர் படை
நீச்சல் குளங்களை மூட வேண்டும். நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம் என்று மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.