ஆக்சிஜனை உறிஞ்சும்.. 5ஜி மூலம் பரவுகிறதா கொரோனா?.. சீனா, இங்கிலாந்தில் உருவான பதற்றம்.. உண்மை என்ன?
5ஜி மொபைல் தொழில்நுட்பம் மூலம் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தீயாக ஒரு செய்தி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
சென்னை: 5ஜி மொபைல் தொழில்நுட்பம் மூலம் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தீயாக ஒரு செய்தி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. பலருக்கும் இந்த செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி குறித்த உண்மை வெளியாகி உள்ளது.
Recommended Video
பொதுவாக உலகை ஒரு நோய் தாக்கும்போது அது தொடர்பான வதந்திகள் பரவுவதும் சகஜம். ஆனால் மக்கள் இதில் இருந்து தங்களை காத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. உதாரணமாக பிளேக் பரவிய போது, அதை சாத்தான் அனுப்பிய வைரஸ் என்று கூறினார்கள்.
இன்னொரு பக்கம் ஸ்பானிஷ் ஃப்ளூ பரவிய போது, அதை ஏலியன்கள் பரப்பியது என்று வதந்திகள் பரவியது. தற்போது அதேபோல் கொரோனா எப்படி உருவானது என்றும், அது எப்படி பரவி வருகிறது என்றும் நிறைய வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
பலர் குழுவில் இருக்கிறார்கள்
சீனா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் பல்வேறு குழுக்கள்தான் இந்த வதந்திகளை பரப்பி வருகிறார்கள். முக்கியமாக தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அமைப்புகள்தான் இந்த வதந்திகளை தீவிரமாக முன்னின்று பரப்பி வருகிறார்கள். இணையத்தில் இதுபோன்ற குழுக்கள் நிறைய இயங்கி வருகிறது. இங்கிலாந்தில் மட்டும் இது போன்ற குழுக்களில் 30 ஆயிரம் பேர் வரை உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா நெட்வொர்க் மூலம் பரவுகிறது
அதன்படி 5ஜி டவர்களில் இருந்து வெளியாகும் அலை வரிசை காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சிவிடும். அதன்பின் காற்றில் அது முக்கியமான வாயுக்களை வெளியிடும். இந்த வாயுக்கள் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவும். இது ஒரு நெட்வொர்க் போல பரவும். உலக நாடுகள் இதை திட்டமிட்டு பரப்பி வருகிறது. கொரோனா வைரஸ் என்பது திட்டமிட்ட தாக்குதல் என்று வதந்திகள் வெளியானது.
சீனாவிலும் இப்படித்தான் பரவியது
அதோடு சீனாவில் வுஹன் நகரில் 5ஜி டவர் வைக்கப்பட்டு ஒரே வாரத்தில்தான் கொரோனா வைரஸ் பரவியது. இங்கிலாந்தில் 5ஜி டவர் கொண்டு வரப்பட்டு இரண்டு வாரத்தில் கொரோனா வைரஸ் பரவியது. உலகில் எங்கெல்லாம் 5ஜி டவர் உள்ளதோ அங்கெல்லாம் கொரோனா வைரஸ்பரவுகிறது. தற்போது பிரிடிஷில் கொரோனா வைரஸ் பரவ இதுதான் காரணம் என்று அங்கு தீயாக செய்திகள் பரவியது.
தீ வைத்தனர்
இப்படி தொடர்ந்து பரவிய செய்திகள் காரணமாக இங்கிலாந்தில் 5 செல்போன் டவர்கள் கொளுத்தப்பட்டது. 5ஜி சேவை வழங்கும் ஐந்து புதிய டவர்கள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு தற்போது பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவிலும் 5ஜி தொழில்நுட்ப சேவைக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவாது
5ஜி மூலம் கொரோனா பரவும் செய்தி என்பது முழுக்க முழுக்க பொய்யானது ஆகும். முதலில் கொரோனா என்பது இயற்கையில் உருவான ஒரு வைரஸ் ஆகும். அடுத்து இது காற்றின் மூலம் பரவாது. மேலும் 5ஜி இல்லாத நாட்டில் கூட கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் 5ஜி இல்லை ஆனால் இந்தியாவிலும் கொரோனா பரவி வருகிறது. அதேபோல் கொரோனா வேகமாக பரவும் ஜப்பான் இத்தாலியில் கூட 5ஜி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க பொய்
5ஜி மூலம் ஒரு வைரஸை பரப்பும் அளவிற்கு உலகில் எந்த நாடுகளும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கவில்லை. செல்போன் டவர்கள் ஆக்சிஜனை உறிஞ்சும் என்பதும் முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும். அதனால் இதுபோன்ற தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். கொரோனாவிற்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்கும் வரை இப்படி பல செய்திகள் பரவ வாய்ப்புகள் என்கிறார்கள்.