தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை.. எல்லாம் நெகட்டிவ்.. விஜயபாஸ்கர் செம குட் நியூஸ்!
தமிழகத்தில் இருந்து கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரியிலும் கொரோனா தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இருந்து கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரியிலும் கொரோனா தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதித்த காஞ்சிபுரம் நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்றுதான் இந்த நல்ல செய்தி வெளியிடப்பட்டது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இவர் தற்போது குணமடைந்துள்ளார்.
மாதிரிகள்
இது போக தமிழகத்தில் இருந்து இன்னும் சிலரின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக புனேவிற்கு அனுப்பப்பட்டு இருந்தது. பெரம்பலூரில் ரயில்வே ஊழியர் ஒருவரின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இவர் வடகிழக்கு மாநிலத்தில் பணியாற்றிவிட்டு தமிழகம் திரும்பி இருந்தார். இவரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
உறவினர்கள்
அதேபோல் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. மேலும், காஞ்சிபுரத்தில் கொரோனா பாதித்த இளைஞரின் உறவினர்களின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. மொத்தம் 8 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்று சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
என்ன சொன்னார்
இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரிகளும் நெகட்டிவ் என்று வந்துள்ளது. கொரோனா அறிகுறி இருந்த யாருக்கும் வைரஸ் தாக்கவில்லை. எல்லா ரத்த மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டுவிட்டது. எதுவும் மீதம் இல்லை. தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை. தமிழகம் எப்போதும் போல கொரோனா இல்லாமல் இருப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
முழுமையாக விடுதலை
இதனால் தமிழகத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்தவர்களும் இதனால் நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் இளைஞர் இன்னும் 14 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார். அவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அதன்பின் அவர், டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.