"ஏன்தான் இங்க வந்தோமோ" ஒட்டிய வயிறுகள்.. சளைக்காத கால்கள்.. பசி மயக்கத்தில் தொடரும் தொழிலாளர்கள் நடை
வடமாநில தொழிலாளர்கள் நடந்தபடியே சென்று கொண்டுள்ளனர்
சென்னை: "நாங்க ஏன்தான் இங்கே வந்தோமோ.. கையில் காசு இல்லை.. சாப்பாடும் இல்லை.. போங்கன்னு சொன்னால் எப்படி எங்க ஊருக்கு போக முடியும்.. அதனால்தான் இப்படி வேகாத வெயிலில் நடக்க ஆரம்பித்துவிட்டோம் என்று சொல்லியபடியே நடந்து செல்கிறார்கள் வடமாநில தொழிலாளர்கள்.. காலில் ரத்தம் சொட்ட சொட்ட... பசி, மயக்கத்தில் விழுந்தாலும், தட்டு தட்டுமாறியபடி அவர்களின் நடைபயணம் தமிழகத்தை நிலைகுலைய வைத்து வருகிறது.
4வது லாக்டவுன் அமலான நிலையிலும், கொரோனா பாதிப்பு கொஞ்சமும் குறையாமல் உள்ளது.. வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் வேலை
இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு பெரும் சுமையை தந்துள்ளது. இதுவரை கிடைக்கின்ற வாகனங்களில் நடந்து சென்ற நிலையில், இன்று அந்நிலையும் மாறி நடந்தபடியே உள்ளனர்.
ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சென்னையில் இன்று முதல் 200 அரசு பஸ்கள் இயக்கம்
சிறப்பு ரயில்கள்
வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்தார்... அதன்படியே ஆங்காங்கே தங்கவைக்கப்பட்டு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. தொழிலாளர்களும் சிறப்பு ரயில்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறார்கள்.
நெருக்கடி
ஆனாலும் இவர்களின் அவலம் அடங்கியது போல இல்லை.. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வடமாநில தொழிலாளர்களின் அவதியை சொல்லி மாளாது.. அருணாசல பிரதேசத்துக்கு இங்கிருந்தே நடந்துகூட போய்விடுகிறோம் என்று தொழிலாளர்கள் மனம் நொந்து சொல்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அவர்கள் இங்கே நெருக்கடிக்கும், அவலத்துக்கும் ஆளாகி இருக்கக்கூடும் என்பதை அரசு இன்னமும் உணரவில்லையோ என்று கேட்க தோன்றுகிறது.
காசு இல்லை
"ஊருக்கு அனுப்ப சொல்லி அந்தந்த மாநில அரசுகளை கேட்டு கொண்டுள்ளோம்.. ஆனால் இவர்கள் அவசரப்படுகிறார்கள்.. என்று சொல்லப்படுகிறது" என்று மத்திய அரசு சார்பில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் யதார்த்த நிலையோ இன்று வேறாக இருக்கிறது. "இவங்க பாட்டுக்கு இருக்க சொல்றாங்களே, நாங்க என்ன சாப்பிடுவோம், எங்கே இருப்போம், ஒதுங்க கூட இடம் இல்லையே" என்று ஆவேசம் பொங்க கேட்கும் தொழிலாளர்களுக்கு யாரிடமும் பதில் இல்லை. வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்லும் நிலையில், இவர்களில் பலர் மயங்கி விழுகின்றனர்.
தடியடி
இவர்கள் கூட்டம் கூட்டமாக புலம்பெயர்ந்து நடந்தபடியே உள்ளனர்.. கையில் பிஞ்சுகள் கதறுகின்றன.. மூட்டை, முடிச்சுகளுடன் தட்டு தடுமாறி செல்லும்போது, உடலில் பல காயங்கள் ஏற்படுகின்றன.. ரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் நடப்பதும் அரங்கேறி வருகிறது.. அத்துமீறி செல்வதற்காக பல இடங்களில் தடியடியும் நடத்தப்படுகிறது.. இதன்மூலம் ஏற்படும் வீக்கம், காயங்களுடன் நடைபோட்டு வருகின்றனர் தொழிலாளர்கள். இவர்களுக்கு நிவாரணம், நிதி, சலுகைகள் வழங்கப்பட்ட நிலையிலும் இந்த அவல காட்சிகள் சோஷியல் மீடியாவில் வலம் வருவதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
தொழிலாளர்கள்
அது மட்டுமில்லை.. இவர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் விடப்பட்டாலும், அதற்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.. தமிழகத்தில் பல இடங்களில் கையில் காசு இல்லாத வடமாநில தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகமே பணம் கட்டி அவர்களை ரயிலில் அனுப்பி வைத்ததை மறுக்க முடியாது.. இது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், வடமாநில தொழிலாளர்களை ஏற்றி செல்வதற்கான ரயில் கட்டணத்தை இலவசமாகவே அறிவிக்கலாம் என்பதே அனைவரின் எண்ணமும்.
ரயில் கட்டணம்
3 மாதமாக வேலையும்,காசும் இல்லாமல் இருக்கும் நிலைமையை உணர்ந்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கலாம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. உளுந்தூர்பேட்டையில் ரயில்வே தண்டவாளத்தில் வடமாநில தொழிலாளர்கள், ஒடிசாவுக்கு நடந்தபடியே சென்று கொண்டிருக்கிறார்கள்.. 2 நாளைக்கு முன்பு திருச்சியில் இருந்து கிளம்பிய இவர்கள், நேற்று உளுந்தூர்பேட்டை ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றதை பார்த்து அந்த பகுதி மக்கள் கண்கலங்கி விட்டனர்.. அவர்களை அழைத்து, சாப்பாடு தந்து, தேவையான உதவியையும் செய்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆவேசம்
சென்னை கொடுங்கையூர் பகுதியிலோ வடமாநில தொழிலாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு கதறினர்.. "ஊருக்கு போக சொல்றீங்களே... 50 நாளா எங்க கையில் காசு இல்லை.. நாங்க எப்படி ஊருக்கு போவோம்" என்று ஆவேசத்துடன் கேட்கவும், பத்திரமாக தாங்கள் அனுப்பிவைக்கிறோம் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிவாரணமும் - நிதியும்
இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒன்று திரண்டுபோராடினால்தான் சொந்த ஊருக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.. இதைவிட எளிதாக சொல்ல வேண்டுமானால் திராணி இருப்பவர்கள் போராடுகிறார்கள்.. இல்லாதவர்கள் சோர்ந்து, தளர்ந்து நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்... இதுதான் நிஜம்.. இந்து துயரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.. வாழ்க்கையை வெறுத்துபோய்.. வயிறு ஒட்டியபடி, தள்ளாடி நடந்து போய் கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு எத்தனை கோடி ரூபாய் நிதியும் நிவாரணமும் அறிவித்தாலும் அது காதில் விழவே விழாது!