கோயம்பேடு காரணமல்ல.. வேறு காரணமும் உள்ளது.. கோடம்பாக்கத்தை ஒரே இரவில் முந்திய ராயபுரம்.. எப்படி?
அதிக கொரோனா கேஸ்கள் உள்ள மண்டலங்களின் பட்டியலில் கோடம்பாக்கம் மண்டலத்தை தற்போது ராயபுரம் முந்தி இருக்கிறது.
சென்னை: அதிக கொரோனா கேஸ்கள் உள்ள மண்டலங்களின் பட்டியலில் கோடம்பாக்கம் மண்டலத்தை தற்போது ராயபுரம் முந்தி இருக்கிறது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் தினமும் கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் கொரோனா குறைய வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று மட்டும் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 7,204 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,330 லிருந்து 3,839 ஆக அதிகரித்துள்ளது.
ரயில் சேவை துவங்கியாச்சு.. அடுத்து விமானங்கள் பாய்ந்து பறக்கப்போகிறது.. ஏற்பாடுகள் ரெடி
முந்தி இருக்கிறது
அதிக கொரோனா கேஸ்கள் உள்ள மண்டலங்களின் பட்டியலில் கோடம்பாக்கம் மண்டலத்தை தற்போது ராயபுரம் முந்தி இருக்கிறது. இதில் கோடம்பாக்கத்தில் 630 கேஸ்கள் உள்ளது. ராயபுரத்தில் 676 கேஸ்கள் உள்ளது. திருவிக நகரில் 556 எஸ்கள் உள்ளது. அதேபோல் தேனாம்பேட்டையில் 412 கேஸ்கள் உள்ளது. சென்னையில் அதிக பாதிக்கப்பட்ட கொரோனா மண்டலமாக ராயபுரம் மாறியுள்ளது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.
ஏன் முக்கியம்?
திடீரென்று சென்னையில் ராயபுரத்தில் கேஸ்கள் அதிகரிப்பது மிகவும் முக்கியமானது ஆகும். ஏனென்றால் கோடம்பாக்கம் பகுதிக்கு கீழ்தான் கோயம்பேடு மார்க்கெட் வருகிறது. அதேபோல் கோயம்பேடு அதிகம் செல்லும் மக்கள் இருக்கும் வடபழனி உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் கோடம்பாக்கம் மண்டலத்திற்கு கீழ்தான் வருகிறது. கோயம்பேடு மூலம் கோடம்பாக்கம்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது . ஆனாலும் கூட, கோடம்பாக்கம் மண்டலத்தை விட ராயபுரம் அதிக கேஸ்களை பெற்றுள்ளது. இதுதான் அதிர்ச்சி அளித்துள்ளது.
முக்கிய கேள்வி
இதனால் சென்னையில் உண்மையில் கொரோனா அதிகமாக கோயம்பேடு மார்கெட் மட்டும்தான் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது. கோயம்பேடு மார்கெட் மூலம் மட்டும்தான் கேஸ்கள் வருகிறதா இல்லை வேறு எங்காவது சொதப்பல் நடந்து இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. ராயபுரத்தில் அதிகரிக்கும் கேஸ்களுக்கு உண்மையில் கோயம்பேடு மட்டும் காரணம் இல்லை வேறு சில காரணங்களும் இருக்கிறது என்கிறார்கள்.
முன்பே சொதப்பியது
சென்னையில் கோயம்பேடு என்ற கிளஸ்டர் கடந்த ஏப்ரல் 27ம் தேதிதான் தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பே ராயபுரத்தில் கேஸ்கள் அதிகம் வந்தது. ராயபுரத்தில் தினமும் 80-90 கேஸ்கள் வந்தது. கோயம்பேட்டிற்கு முன்பே ராயபுரத்தில் கொரோனா கிளஸ்டர் உருவாகி விட்டது. அங்கு தொடக்கத்திலேயே கொரோனா பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கிவிட்டது. அப்போதே அங்கு ஏதாவது தவறு நடந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
தொடக்கத்தில் தவறு
ராயபுரம் தொடக்கத்திலேயே காண்டாக்ட் டிரேசிங் முறையில் சொதப்பி உள்ளது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்று சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அதீத மக்கள் தொகை மற்றும் நெருக்கடி காரணமாக அங்கு யாருக்கு எல்லாம் கொரோனா பரவல் ஏற்பட்டது என்று காண்டாக்ட் டிரேசிங் செய்ய முடியவில்லை. காண்டாக்ட் டிரேசிங்தான் அடிப்படை என்பதால், அங்கேயே ராயபுரம் பெரிய சரிவை சந்தித்துள்ளது.
அறிகுறி இல்லை
பொதுவாக ஒருவருக்கு கொரோனா அறிகுறி வந்தால் அவரை தனிமைப்படுத்துவார்கள். அதன்பின் அவரை டெஸ்ட் செய்வார்கள். ஆனால் ராயபுரத்தில் இப்படி நடக்கவில்லை. அங்கு தனிமைப்படுத்தப்படாத நபர்களுக்கும் கூட கொரோனா வருகிறது. அதாவது கொரோனா ஏற்பட வாய்ப்பே இல்லாத நபர்களுக்கும் கூட அங்கு கொரோனா ஏற்படுகிறது. இதனால் ஒருவேளை ராயபுரத்தில் ஸ்டேஜ் 3 பரவல் இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
பேனிக் பையிங் காரணம்
அதேபோல் மக்கள் கூட்டம் கூட்டமாக கடந்த 25ம் தேதி ராயபுரத்தில் பேனிக் பையிங் செய்தார்கள். முழு ஊரடங்கு என்ற அரசு அறிவித்த காரணத்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக பேனிக் பையிங் செய்தார்கள். ராயபுரத்தில் கேஸ்கள் அதிகம் இருந்த போதும் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே சென்றார்கள். முண்டியடித்துக் கொண்டு சமூக இடைவெளி இன்றி அவர்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வெளியே சென்றது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் ஆகும் .
சிக்கல் ஆகும்
ராயபுரம் மிகவும் சிறிய பகுதிதான். அங்கு மக்கள் மிகவும் கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு தனி மனித இடைவெளி என்பது மிகவும் கடினமான விஷயம். இதுவும் கூட அங்கு கொரோனா கேஸ்கள் அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். இதனால் பெரும்பாலும் அங்கு ஸ்டேஜ் 3 வந்துவிட்டது. அதிகாரிகள் இதை ஒப்புக்கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டங்களை வகுக்க வேண்டும். செயல்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டும் ஒரு காரணம்
தொடக்கத்தில் நடந்த சொதப்பல்களால் ராயபுரத்தில் கொரோனா பரவியது. தற்போது இதில் கோயம்பேடு மார்க்கெட்டும் சேர்ந்துள்ளது. இதனால் ராயபுரத்தில் இரண்டு விதமான கிளஸ்டர் பரவல் பரவி வருகிறது. இதனால்தான் நேற்று இரவில் ஒரே நாளில் கோடம்பாக்கத்தை ராயபுரம் முந்தியுள்ளது. இனி வரும் நாட்களில் தொடர்ந்து இதேபோல் ராயபுரத்தில் கேஸ்கள் அதிகரிக்கும் என்கிறார்கள்.