ஜூலை 6 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நடத்த வேண்டும்.. பார்கவுன்சில் கோரிக்கை!
சென்னை: ஜூலை 6-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை நேரடி விசாரணை நடத்த வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், மெட்ராஸ் பார் அசோசியேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்ற மாதம் அனைத்து நீதிபதிகளும் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடத்திய நிலையில், சில நீதிபதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தற்போது குறிப்பிட்ட நீதிபதிகள் மட்டுமே அவசரகால வழக்குகளை காணொலியில் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி மற்றும் தலைமை பதிபாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றம் கிளை மற்றும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் திறக்கபடாமல் உள்ள நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு - சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை எவ்ளோ தெரியுமா
தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் முறையிலேயே வழக்குகளை விசாரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், முன்னெச்சரிக்கை மற்றும்.பாதுகாப்பு நடவடிக்கைகளோடு நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
வழக்கறிஞர்களுக்கு விருப்பத்திற்கேற்ப காலை நேரத்தில் நேரடி விசாரணையும், பிற்பகலில் வீடியோ கான்பரன்சிங் முறையையும் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளனர். வழக்கறிஞர்களின் நிலையை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நிர்வாகக்குழு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.