15 லட்சம் பேரை முறையாக சோதித்திருந்தால்.. 21 நாட்கள் நாட்டையே லாக்டவுன் செய்திருக்க வேண்டியதில்லை
சென்னை: பிப்ரவரி மாதமே அரசு விழித்திருந்தால்... அல்லது கடைசியாக மார்ச் மாதத்தில் மட்டுமாவது வெளிநாடுகளில் இருந்து வந்த 10 லட்சம் பேரை சரியான முறையில் சோதித்து இருந்தால்.. இன்றைக்கு நாட்டின் 130 கோடி மக்களை லாக் டவுன் செய்ய வேண்டிய அவசியமே வந்திருக்காது. ஆனால் துரதிஷ்டவமாக தற்போது அதற்கான விலையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியாவில் உருவான வைரஸ் அல்ல. இந்த வைரஸ் சீனாவின் வுகானில் இருந்து தான் உலகிற்கு பரவியது. இந்த வைரஸ் டிசம்பரில் சீனாவின் கடும் குளிர்காலத்தில் உருவானது. படிப்படியாக பரவி உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்துள்ளது.
உண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மார்ச் மாதம் பிறந்த பிறகே உலகம் முழுவதும் பரவியது. அதுவரையில் உலகில் சில நாடுகளை தவிர பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை பார்த்த அந்நிய நாடுகளில் வாழும் இந்திய மக்கள் பலர் உடனடியாக இந்தியா திரும்பினர்.
21 நாள் ஊரடங்கு
கடந்த ஜனவரி முதல் மார்ச் 27ம் தேதி வரை இந்தியாவுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1524266 பேர் ஆவார். இவர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மார்ச் மாதம் பிறந்த பிறகு வந்தவர்கள் தான். கிடைக்கும் அத்தனை விமானங்கள் வழியாகவும் சொந்த ஊர் வந்து சேர்ந்தார்கள். இப்படி வந்த அனைவரையும் கடுமையாக பரிசோதித்து தனிமைப்படுத்தி வைத்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் 21 நாட்கள் லாக் டவுனுக்கு வேலையே இருந்திருக்காது என்கிறார்கள்.
மக்களுக்கு வசதி இல்லை
இது ஒருபுறம் எனில் பிப்ரவரி மாதமே விழித்திருந்து அரசு முன்கூட்டிய மக்களிடம் லாக்டவுன் செய்யப்படும் சூழ்நிலை ஏற்படும் என்பதை தெரிவித்து இருந்தால் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருப்பார்கள். அத்துடன் ஊரடங்கு பிறப்பிக்கும் முன் மக்களுக்கு போதுமான பேருந்து வசதிகளை செய்து கொடுத்து அவர்களுக்கு சொந்த ஊர் செல்ல வாய்ப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் திடீரென லாக் டவுன் அறிவிப்பு நகர்புறங்களில் அன்றாட வேலை செய்து பிழைக்கும் மக்களை மோசமாக பாதித்துள்ளது.
பிழைப்புக்கு வழியற்ற மக்கள்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை உருவான பின்னர் அதை கட்டாயம் பிறப்பித்து தான் ஆக வேண்டும். எனவே ஊரடங்கு பிறப்பித்ததில் தவறில்லை. ஆனால் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் ஊரடங்கு பிறப்பித்தது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இப்போது கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பித்து விட்டாகிவிட்டது. அரசுகள் என்ன செய்திருக்க வேண்டும். உடனடியாக அன்றாட பிழைப்புக்கு வழியற்ற மக்கள் அனைவரையும் கண்டுபிடித்து உடனடியாக ஒரே நாளில் அனைவருக்கும் உணவு அளிக்க வழி வகை செய்திருக்க வேண்டும். அதையும் உடனடியாக செய்யவில்லை.
பசிக்கொடுமை
ஒரே நாள் இரவில் அனைத்து உணவகங்களும், கையேந்தி பவன்களும் மூடப்பபட்டதால் மக்கள் காசு இருந்தும் சாப்பிட வழியில்லாமல் பசியாலும் பட்டினியாலும் நகர்புறங்களில் வாடி வருகிறார்கள். டெல்லி போன்ற நகரங்களில் வாழும் வெளிமாநில ஏழை தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் சொந்த ஊருக்கு செல்ல பல்லாயிரம் மைல்கள் நடக்க தொடங்கிவிட்டார்கள். பசிக்கொடுமையால் இறப்பதற்கு கொரோனாவே மேல் என்ற மன நிலைக்கு வந்த பல ஆயிரம் மக்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு விட்டார்கள்.
மத்திய அரசு 15000கோடி
இது ஒருபுறம் எனில் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் அவதிப்படும் மக்களுக்கு மாநில அரசு வெறும் 3000 கோடி நிதி ஒதுக்குகிறது. மத்திய அரசு மொத்தமே 15000 கோடி தான் ஒதுக்கி உள்ளது. ஆனால் கேரள அரசு மட்டுமே 20000 கோடி ஒதுக்கி உள்ளது. இது எவ்வளவு கொடுமையானது. இப்போதைக்கு உடனடி தேவை அனைவருக்கும் உணவும் பாலும். அதற்கு வீடு வீடாக சென்று பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை. மக்களுக்கு அரிசி பருப்பு என அத்தனையும் வழங்க வேண்டும்.
சம்பளமே இல்லை
மாத சம்பளம் வாங்கி வீட்டு வாடகை கொடுத்து இஎம்ஐ கட்டி வாழ்க்கைய ஓட்டும் மக்களின் நிலைமை மிக கொடுமையானது. பல நிறுவனங்கள் முழுமையாக சம்பளத்தை அளிக்குமா என்பது கேள்விக்குறிதான். உற்பத்தியே இல்லாத நிலையில் முழு சம்பளத்தை அளிப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. பல சிறு நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களுக்கு சம்பளமே வழங்கப்படவில்லை. ஏமாற்றப்பட்ட மக்கள் பசியால் வாடி வருகிறார்கள்.
விளைவு மோசமாக உள்ளது
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அரசியல் தலைவரின் மகனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய நடிகனாக இருந்தாலும், ஏன் இந்த நாட்டின் அமைச்சராகவே இருந்தாலும் அத்தனை பேரையும் அரசே தனியாக இருக்க வைத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகு மக்களிடம் விட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டதால் இன்றைக்கு 130 கோடி மக்களும் வீடுகளுக்குள் முடங்கி நாட்டின் பொருளாதாரமே நொடிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவே வேதனையான கசப்பான உண்மை.