லாக்டவுன் காட்சிகள்.. அப்படியும் போலீஸ்காரர்கள்.. இப்படியும் ஒரு போலீஸ் அதிகாரி- வைரல் வீடியோக்கள்
சென்னை: கொரோனாவின் கொடூரத் தாக்குதலைத் தடுக்க ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று 2-வது நாளாக லாக்டவுனை கடைபிடித்து வருகிறது. ஆனால் பொதுமக்களை வீடுகளுக்குள் இருக்க வைக்க ஒவ்வொரு மாநிலத்திலும் போலீசார் பெரும்பாடுபடுவதை வீடியோக்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
Recommended Video
இந்தியாவின் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு, லாக்டவுன் என்பது புதியதுதான். இதனாலேயே லாக்டவுன் காலத்து தெருவீதிகள் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவே கூட்டம் கூட்டமாக அலைமோதுகிறார்கள்.
கொரோனாவை தடுக்க கூட்டம் கூட்டமாக கூடவே கூடாது என்பதற்காக லாக்டவுன். ஆனால் நம்மவர்கள் அதையும் மீறி ஒன்று கூடி வீதிகளில் கும்மியடித்தால் காவல்துறை சும்மாதான் இருக்குமா? இதனால் ஆங்காங்கே காவல்துறையினர் தங்களுக்கே உரிய முறையில் கவனிப்புகளை செய்து வருகின்றனர்.
ஒருசில இடங்களில் நடு வீதிகளில் உக்கி (தோப்புக்கரணம்) போட வைத்து உணர்த்துகின்றனர். இன்னும் சில இடங்களில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. பலர் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகின்றன. இப்படியாக கடந்த நேற்றைய லாக்டவுனின் முதல் நாளில் 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டுள்ளன.
அந்த இரண்டு வீடியோக்களில் ஒன்றின் காட்சி.. இரு சக்கர வாகனத்தில் வரும் ஒருநபரை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்.. என்ன ஏது என்று கேட்காமலேயே நீண்ட லத்தியால் அவரை அடிக்கிறார்.. அடிவாங்கிய நபரோ நான் டாக்டர் என்று சொல்ல.. அதை ஏன் முதலிலேயே சொல்லக் கூடாது என்று போலீஸ்காரர் எகத்தாளமாக கேட்கிறார். இந்த வீடியோவை முன்வைத்து ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் மதுரை போலீசார் கையில் மைக்குடன் செய்தி தொகுப்பாளர் போலவே களமிறங்கிவிட்டனர். எல்லாம் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளியை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்காகத்தான். இப்படியான விழிப்புணர்வு பதிவுகளை தங்களது சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது மதுரை போலீஸ்.
மற்றொரு வீடியோ..திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேல் பேசும் ஒரு வீடியோ.. லாக்டவுனை மீறி வேடசந்தூரில் சாலைகளில் நடமாடிக் கொண்டிருந்தவர்களை ரவுண்டாக நிற்க வைத்து எஸ்.பி. சக்திவேல், வெளுவெளுவென வகுப்பெடுக்கும் அந்த காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.