கணிப்பு தவறிவிட்டது.. கொரோனா 2வது அலை வரலாம்.. தமிழக அரசு மருத்துவர் குழு டாக்டர் பரபரப்பு பேட்டி
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில், கொரோனா இரண்டாவது அலை திரும்ப வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவர் குழுவைச் சேர்ந்த மருத்துவர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் லாக்டவுன் மற்றும் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் நோய் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம்.
ஒரு மாதத்தில் 10 ஆயிரம் கேஸ்கள் வரவேண்டிய இடத்தில் நான்கு மாதங்களில் அந்த அளவுக்கான கேஸ்கள் பதிவாகும் அளவுக்கு நாம் தடுத்துள்ளோம்.
உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு... 2ஆம் இடத்தில் இந்தியா... உயிரிழப்பு 85,625ஆக உயர்வு!!
கட்டுப்பாடுகளுக்கு பலன்
நியூயார்க், லண்டன், இத்தாலி, ஸ்பெயின் போன்ற இடங்களில் இறப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளோம். பிற நாடுகளோடு ஒப்பிட்டால் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாகத்தான் இந்த பலன் கிடைத்துள்ளது. ஆனால், தொடர்ந்து கட்டுப்பாடுகள் இருந்தால்தான் இந்த நிலையை தக்கவைக்க முடியும், அல்லது இறப்பு விகிதம் கூடிவிடும்.
பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறக்கப்பட்டால், யாருக்கெல்லாம் உடல்நிலை சரியில்லையோ அவர்களை பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள். யாரெல்லாம் முகக்கவசம் அணிய முடியாதோ அவர்களை அனுப்ப வேண்டாம். எப்போதும் சானிட்டைசர்களை கையில் வைத்திருக்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் காலத்தில் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தோமோ, அது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதும் எடுக்க வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இடைவெளியை பராமரிப்பது அவசியம். முதியோரை மிகவும் பாதுகாக்க வேண்டும்.
கணிப்பு தவறு
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டும் என்று கணித்தோம். எனவே, நவம்பர் மாதத்துக்குள் குறைந்து விடும் என்று கருதி இருந்தோம். ஆனால், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது போலத் தென்படுகிறது. பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு நிலவுகிறது. இதுதவிர அண்டை மாநிலங்களான ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அங்கே இருந்து வரக் கூடியவர்களால், சென்னையில் நோய் பாதிப்பு அதிகரிக்கக் கூடும். எனவே, இப்போது தான் தமிழகத்தில் பாதிப்பு குறைவது போலத் தோன்றுவதால் இன்னுமொரு மூன்று மாத காலமாவது இந்த நிலைமை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது குறைய ஆரம்பித்தாலும் கூட, வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்தான் நிம்மதி பெருமூச்சு விட முடியும், என்று எதிர்பார்க்கிறேன்.
இரண்டாவது அலை
ஆனால் அதன் பிறகு இரண்டாவது அலை வரக்கூடும். அதை தடுப்பது கஷ்டம். எந்த ஒரு தடுப்பூசியும் 100% நோயை தடுக்குமா என்று சொல்ல முடியாது. 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 70 சதவீதம் பலன் அளித்தால் நல்ல விஷயம்தான். 10 பேரில் 3 பேருக்கு தடுப்பூசி பலனளிக்காமல் செல்லக் கூடும். எனவே, நாம் இப்போது தற்காப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதை போலவே, தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரிஸ்க் குறையுமே தவிர கண்டிப்பாக வராது என்று சொல்ல முடியாது என்பதால் முகக்கவசம் அணிவது, கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது, சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை நீண்டகாலத்துக்கு பின்பற்ற வேண்டும். இவ்வாறு ராம சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக அரசு ஊரடங்கு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கை எடுக்கும் முன்பாகவும் தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசிப்பது வழக்கம். இந்த மருத்துவ வல்லுநர் குழுவில் ராமசுப்பிரமணியன் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.