ஒருநாள் பசி, தாகம் எடுத்து மயங்கி போய் கிடப்பே.. அப்போ என் மூஞ்சி ஞாபகத்துக்கு வரும்.. சீமான் அதிரடி
தற்சார்பு பொருளாதாரம் குறித்து சீமான் காட்டமாக பேசி உள்ளார்
சென்னை: "காந்தி போதித்தபோது வராதது, ஜே.சி.குமரப்பா முதல் காமராஜர், இந்திராகாந்தி சொன்னபோது புரியாதது, நாங்கள் 10 வருடமாக தெரு தெருவாக பேசியபோது கேட்காதது, தற்போது தற்சார்புடன் இருக்க கொரோனா கற்பித்துள்ளது என்கிறார் பிரதமர்... ஒவ்வொன்றையும் கொரோனா தான் சொல்லணும் போல!" என்று சீமான் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவல் குறித்து வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசும்போது, "கொரோனா வைரஸ், நமக்கு நாம்தான் துணை என்பதைப் புரியவைத்துள்ளது.. நாம் தற்சார்புடன் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்பதை கொரோனா நமக்கு சுட்டிக்காட்டியுள்ளது" என்றார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதமர் பேசிய இந்த வாசகத்தை முன்வைத்து விமர்சித்துள்ளார். அதேபோல, கொரோனா பரவலால் உலக நாடுகள் உணவு பற்றாக்குறையை சந்திக்கும் என்று ஏற்கனவே ஐநா எச்சரித்திருந்தது.. இதையும் சீமான் மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
மகாத்மா காந்தி
இது சம்பந்தமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "காந்தி போதித்தபோது வராதது, ஜே.சி.குமரப்பா முதல் காமராஜர், இந்திராகாந்தி சொன்னபோது புரியாதது, நாங்கள் 10 வருடமாக தெரு தெருவாக பேசியபோது கேட்காதது, தற்போது தற்சார்புடன் இருக்க கொரோனா கற்பித்துள்ளது என்கிறார் பிரதமர். ஒவ்வொன்றையும் கொரோனா தான் சொல்லணும் போல!" என்று பதிவிட்டதுடன், தான் பேசிய ஒரு வீடியோவையும் அதில் ஷேர் செய்திருந்தார்.
வீடியோ
சீமான் பேசியதன் சுருக்கம் இதுதான்: "எதை பற்றியுமே கவலைப்படாத வர்த்தக உலகம் இது.. சந்தை பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட ஒரு தேசத்தில் மக்களும் ஒரு பண்டம்தான்.. விற்பனை பண்டம்தான்.. என்னைக்கு இந்த தேசம், தற்சார்பு, பசுமை, தாய்மை பொருளாதாரத்தை கையில் எடுக்குதோ அன்னைக்குதான் இந்த நாடு வாழும், வளரும்.. அதுவரை வளராது. அதுவரை நாம் சொல்றதும் புரியாது.
தாகம் - பசி
இப்போ அண்ணன் நான் சொல்றது உங்களுக்கும் புரியாது.. ஒருநாள் தாகம் எடுத்து தவிச்சுபோய், பசி எடுத்து மயங்கி கிடக்கும்போது அப்போ என் மூஞ்சு ஞாபகத்துக்கு வரும், அன்னைக்கு என்னை தேடுவாய்.. நான் இருந்தால் வருவேன்.. இல்லேன்னா முடிஞ்சது!! இது நடக்குதா, இல்லையான்னு நீ எழுதி வெச்சுக்கோ. இன்னும் நீ சரியாக 5 ஆண்டுகளை கடந்து போகவே முடியாது.. மிகப்பெரிய உணவு பஞ்சத்தை இந்த தேசம் எதிர்கொள்ளும்.
ரஷ்யா - அமெரிக்கா
நீ என்ன கேட்குறே கார் வேணும், பைக் வேணும், செல்போன் வேணும். இதெல்லாம் இருந்துட்டால், சோறை மட்டும் இறக்குமதி பண்ணிக்கிடலாமா? தக்காளி இம்மோர்ட், வெண்டைக்காய் இம்மோர்ட், வெங்காயம் இம்போர்ட் பண்ணிக்கலாமா? இப்படி நீங்க நினைக்கிறது போலதான் ஜப்பானும் நினைக்குது.. ரஷ்யாவும் நினைக்குது, இதையேதான் ராஜா, அமெரிக்காவும் நினைக்குது.. எதுக்கு விவசாயம், எல்லாத்தையும் இறக்குமதி பண்ணிக்கலாம்னு நினைச்சால், எங்கிருந்து வரும்? யார்தான் அதை உற்பத்தி செய்வது?
தற்சார்பு
ராஜா நீ சாஃப்ட்வேர் வேலை பார்த்தாலும் சரி, சாப்பிட்டுபோய்தான் வேலை பார்க்கணும் ராஜா.. விவசாயத்தை கைவிட்ட எந்த தேசமும் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. விவசாயத்தை கைவிட்ட எல்லா நாடுகளும் இன்று பிச்சை எடுக்கின்றன.. கார் இல்லை என்று எந்த நாட்டிலும் புரட்சி வந்ததில்லை.. நீரும், சோறும் இல்லாமல் இருந்தால் நாட்டில் புரட்சி வராமல் இருந்ததும் இல்லை. ஒரு பேராபத்தை நோக்கி நாடும், நாமும் போய் கொண்டிருக்கிறோம் என்பதை நுட்பமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சம்பாதிச்ச பணத்தை வங்கியில போய் நீ போடுவே, வங்கி வட்டி தரும், ஆனால் சாப்பிட ரொட்டி தராது.. தற்சார்புடன் இல்லையென்றால் அது பேராபத்தில் போய் முடியும்" என்றார்.