அடங்காத கோயம்பேடு கேஸ்கள்.. தினமும் விரட்டும் கொரோனா கிளஸ்டர்.. விடைதெரியாத சில கேள்விகள்!
கோயம்பட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த கொரோனா பரவல் குறித்து நிறைய கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளது.
சென்னை: கோயம்பட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த கொரோனா பரவல் குறித்து நிறைய கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் காரணமாக சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா தீவிரம் எடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 580 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,409ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 2,644 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 316 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக கமல் ஹாசனின் மநீம வழக்கு
கோயம்பேடு நிலை
சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் மிக மோசமான பகுதியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மாறியுள்ளது. கோயம்பேட்டில் கடந்த 27ம் தேதிதான் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அப்போது தொடங்கிய கொரோனா பரவல் தற்போது தமிழகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு காரணமாக 350 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக மாறியுள்ளது
சென்னையின் எபிசென்டராக கோயம்பேடு மாறியுள்ளது. சென்னையில் மட்டுமின்றி கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுக்க பல மாவட்டங்களுக்கு கொரோனா பரவி உள்ளது. முக்கியமாக அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து கொரோனா பரவி உள்ளது. கோயம்பேடு இவ்வளவு பெரிய கொரோனா மையமாக நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.
மூடவில்லை
ஏப்ரல் 27ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் நபருக்கு கொரோனா வந்தது. தற்போது உள்ள விபரங்களின்படி அங்கிருக்கும் பழக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வந்தது. அதன்பின் வரிசையாக பல்வேறு வியாபாரிகளுக்கு அங்கு கொரோனா வந்தது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படவில்லை. தொடர்ந்து மக்கள் அங்கு பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். மொத்த விற்பனை நடந்து வந்தது.
சிறப்பாக செயல்பட்டது
கொரோனாவிற்கு எதிராக தமிழகம் மிக சிறப்பாக செயல்பட்டு வந்தது. எந்த விதமான தவறும் இன்றி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசின் முயற்சிகளையும் மீறி கோயம்பேடு கொரோனா மையமாக உருவாகி உள்ளது. இத்தனை பேருக்கு கோயம்பேட்டில் கொரோனா பரவ அங்கு போதிய கட்டுப்பாடு இல்லாததுதான் காரணம் என்கிறார்கள். மக்கள் அங்கு தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பழகி வந்தனர்.
எதிர்ப்பு வந்தது
முக்கியமாக தமிழக அரசு கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் முயற்சி செய்தது. இது தொடர்பாக அங்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அங்கிருந்து தொழிலாளர்கள் கடைகளை இடமாற்றம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களில் சிலர் போராட்டம் செய்வதாக கூட கூறியுள்ளனர். இதை தவிர்க்கும் பொருட்டு பேச்சுவார்த்தை நடந்தது. இதனால்தான் மார்க்கெட்டை மூட காலதாமதம் ஆனது என்கிறார்கள்.
கடைசியில் மூடினார்கள்
கடைசியாக கோயம்பேடு பெரிய எபிசென்டராக உருவெடுத்தது. இதையடுத்து கடந்த 4ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் மொத்தமாக மூடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அங்கு வந்த பலருக்கு கொரோனா ஏற்பட்டுவிட்டது. தமிழகம் முழுக்க தற்போது வரை 588 பேருக்கு கொரோனா ஏற்பட உறுதியான காரணமாக கோயம்பேடு மாறியுள்ளது. மற்றவர்கள் எல்லாம் அவர்களின் காண்டாக்ட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சில கேள்விகள்
கோயம்பேட்டில் கொரோனா பரவியது தொடர்பாக சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
1. கோயம்பேட்டில் முதல் நபருக்கு யார் மூலம் கொரோனா வந்தது?. இந்த கேள்விக்கு பதில் கிடைத்தால் கோயம்பேடு பரவல் குறித்த ஒரு தெளிவு கிடைக்கும்.
2. கோயம்பேட்டில் உண்மையில் 27ம் தேதிதான் கொரோனா வந்ததா அதற்கு முன்பே கொரோனா வந்துவிட்டதா?. காண்டாக்ட் டிரேஸ் செய்ய வசதியாக இருக்கும்.
3. கோயம்பேட்டிற்கு வந்த வியாபாரிகளுக்கு கொரோனா இருக்கிறது. அங்கு வந்த மக்களின் நிலை என்ன?
4. கோயம்பேடு காரணமாக ஸ்டேஜ் 3 பரவல் உண்டாகிவிட்டதா?
போனவர் அவரின் உறவினர்கள்
இதில் குறிப்பிடத்தக்க விஷயம், சென்னையில் கோயம்பேட்டில் இப்படி பாதிக்கப்பட்ட பலர் அங்கு கடை வைத்திருக்கும் நபர்கள் மட்டும்தான். இவர்களும் இவர்களின் உறவினர்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. முன்பு நேரடியாக கோயம்பேட்டில் கடை வைத்தவர்களுக்கு மட்டும் கொரோனா வந்தது. தற்போது அவர்களின் நெருங்கிய காண்டாக்ட்களுக்கும் கொரோனா வர தொடங்கி உள்ளது. அதாவது உறவினர்கள்!
தொடர்ந்து அதிகரிக்கும்
ஆனால் இந்த கடைகளுக்கு வந்த மக்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. அதாவது வியாபாரிகள், லாரி டிரைவர்கள் இல்லாமல் பொருட்கள் வாங்க பொதுமக்களுக்கு கொரோனா வந்துள்ளதா என்று இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இப்போது வரை கோயம்பேடு சென்றவர்கள், அவர்களின் நெருங்கிய காண்டாக்ட்களுக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மக்களுக்கும் கொரோனா இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
என்ன நல்ல விஷயம்
அப்படி கொரோனா சோதனைகளை ரேண்டமாக அதிகமாக செய்தால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும். இன்னும் பலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்படும். ஆனாலும் இது மட்டுமே ஒரே தீர்வு. அதிகமாக ரேண்டம் டெஸ்ட் செய்தால் மட்டுமே கொரோனா எந்த அளவிற்கு பரவி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். சமூக பரவல் குறித்த சரியான பார்வை அப்போதுதான் அரசுக்கு கிடைக்கும்... டெஸ்ட்.. டெஸ்ட்.. டெஸ்ட் மட்டுமே ஒரே தீர்வு இப்போது!