அறிகுறியே காட்டாமல் பரவுகிறது கொரோனா.. தமிழக முதல்வர் எச்சரிக்கை
சென்னை: அறிகுறி இல்லாமல் கொரோனா நோய் பரவிவருவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Recommended Video
சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அளித்த பேட்டியின்போது, 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என நிருபர்கள் கேட்டனர்.
அப்போது பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த நோய் பரவுவதற்கு காரணம் கூட்டமாக சேருவதுதான். நாம் தனிமைப்படுத்திக் கொண்டால்தான் இந்த நோய் பரவாது. தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்ளுவது மட்டுமே.
அறிகுறி இல்லை
இந்தத் தொற்று நோய் எளிதாக பரவக்கூடியது. வீடியோக்கள் மூலமாக நாம் மக்களுக்கு இதைப்பற்றி காட்டிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் 7 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலே, பல நோயாளிகளுக்கு பாசிடிவ் வந்துள்ளது. எனவே மக்கள் விலகியிருக்க வேண்டும். விலகியிருப்பதுதான் இந்த நோய் பரவாமல் தடுக்க ஒரே வழி.
144 தடையுத்தரவு
அரசு உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. மக்களுக்கு நோய் பரவக் கூடாது என்றுதான் நினைக்கிறோம். அரசு ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது என்றால் அது மக்கள் நலனுக்காக தான். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசு சட்டம் போடும், அதை கடைபிடிக்க வேண்டியது மக்கள் தான் என்றார். சூசகமாக 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதை இவ்வாறு அவர் கூறினார்.
வசதிகள்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கின்றன. தேவையான முகக் கவசங்கள், மருத்துவ உபகரணங்கள், தேவையான அளவுக்கு இருப்பில் உள்ளன. கூடுதலாக 2500 வென்டிலேட்டர் வாங்குவதற்கு இன்று கொள்முதல் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கஷ்டம்
இதனிடையே, ரோடுகளை தவிர உள்புற ஏரியாக்களில் மக்கள் சாலைகளில் நடமாடுகிறார்களே, காவல்துறை அங்கும் செல்ல தேவையுள்ளதே என்ற கேள்விக்கு, காவல்துறையினரும் மனிதர்கள்தான். 8 மணி நேரம், வெயிலில் நின்றபடி வேலை பார்க்கிறார்கள். எனவே பொதுமக்கள், நாமே சுய ஒழுங்கை கடைபிடித்து வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றார் முதல்வர்.
உத்தரவு மீறல்
தமிழகத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 94,873 வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.